
திருவருட்பா · 144நீடிய வேதம்
நீடிய வேதம் தேடிய பாதம்
நேடிய கீதம் பாடிய பாதம்
ஆடிய போதம் கூடிய பாதம்
ஆடிய பாதம் ஆடிய பாதம்.
சாக்கிய வேதம் தேக்கிய பாதம்
தாக்கிய ஏதம் போக்கிய பாதம்
சோக்கிய வாதம் ஆக்கிய பாதம்
தூக்கிய பாதம் தூக்கிய பாதம்.
ஏன்றிய சூதம் தோன்றிய பாதம்
ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம்
ஓன்றிய பூதம் ஞான்றிய பாதம்
ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம்.
சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம்
தஞ்சித மாகும் சஞ்சித பாதம்
கொஞ்சித மேவும் ரஞ்சித பாதம்
குஞ்சித பாதம் குஞ்சித பாதம்.
எண்ணிய நானே திண்ணியன் ஆனேன்
எண்ணிய வாறே நண்ணிய பேறே
புண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன்
புண்ணிய வானே புண்ணிய வானே.
தொத்திய சீரே பொத்திய பேரே
துத்திய பாவே பத்திய நாவே
சத்தியம் நானே நித்தியன் ஆனேன்
சத்திய வானே சத்திய வானே.
எம்புலப் பகையே எம்புலத் துறவே
எம்குலத் தவமே எம்குலச் சிவமே
அம்பினில் கனலே அந்தணர்க் கிறையே
அம்பலத் தரசே அம்பலத் தரசே.
இன்புடைப் பொருளே இன்சுவைக் கனியே
எண்குணச் சுடரே இந்தகத் தொளியே
அன்புடைக் குருவே அம்புயற் கிறையே
அம்பலத் தமுதே அம்பலத் தமுதே.



