
ஆதிமலை அனாதிமலை அன்புமலை எங்கும்
ஆனமலை ஞானமலை ஆனந்த மலைவான்
ஜோதிமலை துரியமலை துரியமுடிக் கப்பால்
தோன்றுமலை தோன்றாத சூதான மலைவெண்
பூதிமலை சுத்த அனு பூதிமலை எல்லாம்
பூத்தமலை வல்லியெனப் புகழுமலை தனையோர்
பாதிமலை முத்தரெலாம் பற்றுமலை என்னும்
பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.
சாக்கியனார் எறிந்தசிலை சகித்தமலை சித்த
சாந்தர் உளஞ் சார்ந்தோங்கித் தனித்தமலை சபையில்
தூக்கியகா லொடுவிளங்கும் தூயமலை வேதம்
சொன்னமலை சொல்லிறந்த துரியநடு மலைவான்
ஆக்கியளித் தழிக்குமலை அழியாத மலைநல்
அன்பருக்கின் பந்தருமோர் அற்புதப்பொன் மலைநற்
பாக்கியங்க ளெல்லாமும் பழுத்தமலை என்னும்
பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.
ஆறு விளங்க அணிகிளர்தேர் ஊர்ந்தஉலாப்
பேறு விளங்கஉளம் பெற்றதுமன் - கூறுகின்ற
ஒன்றிரண்டு தாறுபுடை ஓங்கும் பழமலையார்
மின்திரண்டு நின்றசடை மேல்.



