திருவருட்பா  55. சண்முகர் கொம்மி

குறவர்  குடிசை  நுழைந்தாண்டி  -  அந்தக் 
கோமாட்டி  எச்சில்  விழைந்தாண்டி 
துறவர்  வணங்கும்  புகழாண்டி  -  அவன் 
தோற்றத்தைப்  பாடி  அடியுங்கடி. 
1
மாமயில்  ஏறி  வருவாண்டி  -  அன்பர் 
வாழ்த்த  வரங்கள்  தருவாண்டி 
தீமையி  லாத  புகழாண்டி  -  அவன் 
சீர்த்தியைப்  பாடி  அடியுங்கடி. 
2
பன்னிரு  தோள்கள்  உடையாண்டி  -  கொடும் 
பாவிகள்  தம்மை  அடையாண்டி 
என்னிரு  கண்கள்  அனையாண்டி  -  அவன் 
ஏற்றத்தைப்  பாடி  அடியுங்கடி. 
3
வேங்கை  மரமாகி  நின்றாண்டி  -  வந்த 
வேடர்  தமைஎலாம்  வென்றாண்டி 
தீங்குசெய்  சூரனைக்  கொன்றாண்டி  -  அந்தத் 
தீரனைப்  பாடி  அடியுங்கடி. 
4
சீர்திகழ்  தோகை  மயில்மேலே  -  இளஞ் 
செஞ்சுடர்  தோன்றுந்  திறம்போலே 
கூர்வடி  வேல்கொண்டு  நம்பெருமான்  -  வருங் 
கோலத்தைப்  பாருங்கள்  கோதையர்காள். 
5
ஆறு  முகங்களில்  புன்சிரிப்பும்  -  இரண் 
டாறு  புயந்திகழ்  அற்புதமும் 
வீறு  பரஞ்சுடர்  வண்ணமும்ஓர்  -  திரு 
மேனியும்  பாருங்கள்  வெள்வளைகாள். 
6
ஆனந்த  மான  அமுதனடி  -  பர 
மானந்த  நாட்டுக்  கரசனடி 
தானந்த  மில்லாச்  சதுரனடி  -  சிவ 
சண்முகன்  நங்குரு  சாமியடி. 
7
வேதமுடி  சொல்லும்  நாதனடி  -  சதுர் 
வேதமு  டிதிகழ்  பாதனடி 
நாத  வடிவுகொள்  நீதனடி  -  பர 
நாதங்  கடந்த  நலத்தனடி. 
8
தத்துவத்  துள்ளே  அடங்காண்டி  -  பர 
தத்துவம்  அன்றித்  துடங்காண்டி 
சத்துவ  ஞான  வடிவாண்டி  -  சிவ 
சண்முக  நாதனைப்  பாடுங்கடி. 
9
சச்சிதா  னந்த  உருவாண்டி  -  பர 
தற்பர  போகந்  தருவாண்டி 
உச்சிதாழ்  அன்பர்க்  குறவாண்டி  -  அந்த 
உத்தம  தேவனைப்  பாடுங்கடி. 
10
அற்புத  மான  அழகனடி  -  துதி 
அன்பர்க்  கருள்செய்  குழகனடி 
சிற்பர  யோகத்  திறத்தனடி-அந்தச் 
சேவகன்  சீர்த்தியைப்  பாடுங்கடி. 
11
சைவந்  தழைக்கத்  தழைத்தாண்டி  -ஞான 
சம்பந்தப்  பேர்கொண்  டழைத்தாண்டி 
பொய்வந்த  உள்ளத்தில்  போகாண்டி  -  அந்தப் 
புண்ணியன்  பொன்னடி  போற்றுங்கடி. 
12
வாசி  நடத்தித்  தருவாண்டி  -  ஒரு 
வாசியில்  இங்கே  வருவாண்டி 
ஆசில்  கருணை  உருவாண்டி  -  அவன் 
அற்புதத்  தாள்மலர்  ஏத்துங்கடி. 
13
இராப்பகல்  இல்லா  இடத்தாண்டி  -  அன்பர் 
இன்ப  உளங்கொள்  நடத்தாண்டி 
அராப்பளி  ஈந்த  திடத்தாண்டி  -  அந்த 
அண்ணலைப்  பாடி  அடியுங்கடி. 
14
ஒன்றிரண்  டான  உளவாண்டி  -  அந்த 
ஒன்றிரண்  டாகா  அளவாண்டி 
மின்திரண்  டன்ன  வடிவாண்டி  -  அந்த 
மேலவன்  சீர்த்தியைப்  பாடுங்கடி. 
15

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com