
குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்தக்
கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
துறவர் வணங்கும் புகழாண்டி - அவன்
தோற்றத்தைப் பாடி அடியுங்கடி.
மாமயில் ஏறி வருவாண்டி - அன்பர்
வாழ்த்த வரங்கள் தருவாண்டி
தீமையி லாத புகழாண்டி - அவன்
சீர்த்தியைப் பாடி அடியுங்கடி.
பன்னிரு தோள்கள் உடையாண்டி - கொடும்
பாவிகள் தம்மை அடையாண்டி
என்னிரு கண்கள் அனையாண்டி - அவன்
ஏற்றத்தைப் பாடி அடியுங்கடி.
வேங்கை மரமாகி நின்றாண்டி - வந்த
வேடர் தமைஎலாம் வென்றாண்டி
தீங்குசெய் சூரனைக் கொன்றாண்டி - அந்தத்
தீரனைப் பாடி அடியுங்கடி.
சீர்திகழ் தோகை மயில்மேலே - இளஞ்
செஞ்சுடர் தோன்றுந் திறம்போலே
கூர்வடி வேல்கொண்டு நம்பெருமான் - வருங்
கோலத்தைப் பாருங்கள் கோதையர்காள்.
ஆறு முகங்களில் புன்சிரிப்பும் - இரண்
டாறு புயந்திகழ் அற்புதமும்
வீறு பரஞ்சுடர் வண்ணமும்ஓர் - திரு
மேனியும் பாருங்கள் வெள்வளைகாள்.
ஆனந்த மான அமுதனடி - பர
மானந்த நாட்டுக் கரசனடி
தானந்த மில்லாச் சதுரனடி - சிவ
சண்முகன் நங்குரு சாமியடி.
வேதமுடி சொல்லும் நாதனடி - சதுர்
வேதமு டிதிகழ் பாதனடி
நாத வடிவுகொள் நீதனடி - பர
நாதங் கடந்த நலத்தனடி.
தத்துவத் துள்ளே அடங்காண்டி - பர
தத்துவம் அன்றித் துடங்காண்டி
சத்துவ ஞான வடிவாண்டி - சிவ
சண்முக நாதனைப் பாடுங்கடி.
சச்சிதா னந்த உருவாண்டி - பர
தற்பர போகந் தருவாண்டி
உச்சிதாழ் அன்பர்க் குறவாண்டி - அந்த
உத்தம தேவனைப் பாடுங்கடி.
அற்புத மான அழகனடி - துதி
அன்பர்க் கருள்செய் குழகனடி
சிற்பர யோகத் திறத்தனடி-அந்தச்
சேவகன் சீர்த்தியைப் பாடுங்கடி.
சைவந் தழைக்கத் தழைத்தாண்டி -ஞான
சம்பந்தப் பேர்கொண் டழைத்தாண்டி
பொய்வந்த உள்ளத்தில் போகாண்டி - அந்தப்
புண்ணியன் பொன்னடி போற்றுங்கடி.
வாசி நடத்தித் தருவாண்டி - ஒரு
வாசியில் இங்கே வருவாண்டி
ஆசில் கருணை உருவாண்டி - அவன்
அற்புதத் தாள்மலர் ஏத்துங்கடி.
இராப்பகல் இல்லா இடத்தாண்டி - அன்பர்
இன்ப உளங்கொள் நடத்தாண்டி
அராப்பளி ஈந்த திடத்தாண்டி - அந்த
அண்ணலைப் பாடி அடியுங்கடி.
ஒன்றிரண் டான உளவாண்டி - அந்த
ஒன்றிரண் டாகா அளவாண்டி
மின்திரண் டன்ன வடிவாண்டி - அந்த
மேலவன் சீர்த்தியைப் பாடுங்கடி.



