திருவருட்பா  39. கூடல் விழைதல்

சகம்ஆ  றுடையார்  அடையா  நெறியார் 
சடையார்  விடையார்  தனிஆனார் 
உகமா  ருடையார்  உமைஓர்  புடையார் 
உதவும்  உரிமைத்  திருமகனார் 
முகம்ஆ  றுடையார்  முகம்மா  றுடையார் 
எனவே  எனது  முன்வந்தார் 
அகமா  ருடையேன்  பதியா  தென்றேன் 
அலைவாய்  என்றார்  அஃதென்னே. 
1
விதுவாழ்  சடையார்  விடைமேல்  வருவார் 
விதிமால்  அறியா  விமலனார் 
மதுவாழ்  குழலாள்  புடைவாழ்  உடையார் 
மகனார்  குகனார்  மயில்ஊர்வார் 
முதுவாழ்  வடையா  தவமே  அலைவேன் 
முன்வந்  திடயான்  அறியாதே 
புதுவாழ்  வுடையார்  எனவே  மதிபோய் 
நின்றேன்  அந்தோ  பொல்லேனே. 
2
காயோ  டுடனாய்  கனல்கை  ஏந்திக் 
காடே  இடமாக்  கணங்கொண்ட 
பேயோ  டாடிப்  பலிதேர்  தரும்ஓர் 
பித்தப்  பெருமான்  திருமகனார் 
தாயோ  டுறழும்  தணிகா  சலனார் 
தகைசேர்  மயிலார்  தனிவேலார் 
வேயோ  டுறழ்தோள்  பாவையர்  முன்என் 
வெள்வளை  கொண்டார்  வினவாமே. 
3
பொன்னார்  புயனார்  புகழும்  புகழார் 
புலியின்  அதளார்  புயம்நாலார் 
தென்னார்  சடையார்  கொடிமேல்  விடையார் 
சிவனார்  அருமைத்  திருமகனார் 
என்நா  யகனார்  என்னுயிர்  போல்வார் 
எழின்மா  மயிலார்  இமையோர்கள் 
தந்நா  யகனார்  தணிகா  சலனார் 
தனிவந்  திவண்மால்  தந்தாரே. 
4
கல்லால்  அடியார்  கல்லடி  உண்டார் 
கண்டார்  உலகங்  களைவேதம் 
செல்லா  நெறியார்  செல்லுறும்  முடியார் 
சிவனார்  அருமைத்  திருமகனார் 
எல்லாம்  உடையார்  தணிகா  சலனார் 
என்நா  யகனார்  இயல்வேலார் 
நல்லார்  இடைஎன்  வெள்வளை  கொடுபின் 
நண்ணார்  மயில்மேல்  நடந்தாரே. 
5
காரூர்  சடையார்  கனலார்  மழுவார் 
கலவார்  புரமூன்  றெரிசெய்தார் 
ஆரூர்  உடையார்  பலிதேர்ந்  திடும்எம் 
அரனார்  அருமைத்  திருமகனார் 
போரூர்  உறைவார்  தணிகா  சலனார் 
புதியார்  எனஎன்  முனம்வந்தார் 
ஏரூர்  எமதூ  ரினில்வா  என்றார் 
எளியேன்  ஏமாந்  திருந்தேனே. 
6
கண்ணார்  நுதலார்  விடமார்  களனார் 
கரமார்  மழுவார்  களைகண்ணார் 
பெண்ணார்  புயனார்  அயன்மாற்  கரியார் 
பெரியார்  கைலைப்  பெருமானார் 
தண்ணார்  சடையார்  தருமா  மகனார் 
தணிகா  சலனார்  தனிவேலார் 
எண்ணார்  எளியாள்  இவள்என்  றெனையான் 
என்செய்  கேனோ  இடர்கொண்டே. 
7
மழுவார்  தருகைப்  பெருமான்  மகனார் 
மயில்வா  கனனார்  அயில்வேலார் 
தழுவார்  வினையைத்  தணியார்  அணியார் 
தணிகா  சலனார்  தம்பாதம் 
தொழுவார்  அழுவார்  விழுவார்  எழுவார் 
துதியா  நிற்பார்  அவர்நிற்கப் 
புழுவார்  உடலோம்  பிடும்என்  முனர்வந் 
தருள்தந்  தருளிப்  போனாரே. 
8
நிருத்தம்  பயின்றார்  கடல்நஞ்  சயின்றார் 
நினைவார்  தங்கள்  நெறிக்கேற்க 
அருத்தம்  பகர்வார்  அருமைப்  புதல்வர் 
அறுமா  முகனார்  அயில்வேலார் 
திருத்தம்  பெறுவார்  புகழும்  தணிகைத் 
திருமா  மலையார்  ஒருமாதின் 
வருத்தம்  பாரார்  வளையும்  தாரார் 
வாரார்  அவர்தம்  மனம்என்னே. 
9
பிரமன்  தலையில்  பலிகொண்  டெருதில் 
பெயரும்  பிச்சைப்  பெருமானார் 
திரமன்  றினிலே  நடனம்  புரிவார் 
சிவனார்  மகனார்  திறல்வேலார் 
தரமன்  றலைவான்  பொழில்சார்  எழில்சேர் 
தணிகா  சலனார்  தமியேன்முன் 
வரமன்  றவும்மால்  கொளநின்  றனனால் 
மடவார்  அலரால்  மனநொந்தே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com