
மஞ்சேர் பிணிமடி யாதியை நோக்கி வருந்துறும்என்
நெஞ்சே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
எஞ்சேல் இரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
அஞ்சேல் இதுசத் தியம்ஆம்என் சொல்லை அறிந்துகொண்டே.
அறியாத நம்பிணி ஆதியை நீக்கும் அருள்மருந்தின்
நெறியாம் தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
எறியா திரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
குறியா திருக்கலை என்ஆணை என்றன் குணநெஞ்சமே.
என்றே பிணிகள் ஒழியும்என் றேதுயர் எய்தியிடேல்
நின்றே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
இன்றே இரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
நன்றேஎக் காலமும் வாழிய வாழிய நன்னெஞ்சமே.



