திருவருட்பா  32. புண்ணியநீற்று மான்மியம்

திவசங்கள்  தொறும்கொண்டிடு  தீமைப்பிணி  தீரும் 
பவசங்கடம்  அறும்இவ்விக  பரமும்புகழ்  பரவும் 
கவசங்கள்எ  னச்சூழ்ந்துறு  கண்ணேறது  தவிரும் 
சிவசண்முக  எனவேஅருள்  திருநீறணிந்  திடிலே. 
1
மால்ஏந்திய  குழலார்தரு  மயல்போம்இடர்  அயல்போம் 
கோல்ஏந்திய  அரசாட்சியும்  கூடும்புகழ்  நீடும் 
மேல்ஏந்திய  வானாடர்கள்  மெலியாவிதம்  ஒருசெவ் 
வேல்ஏந்திய  முருகாஎன  வெண்றணிந்  திடிலே. 
2
தவம்உண்மையொ  டுறும்வஞ்சகர்  தம்சார்வது  தவிரும் 
நவம்அண்மிய  அடியாரிடம்  நல்கும்திறன்  மல்கும் 
பவனன்புனல்  கனல்மண்வெளி  பலவாகிய  பொருளாம் 
சிவசண்முக  எனவேஅருள்  திருநீறனிந்  திடிலே. 
3
துயில்ஏறிய  சோர்வும்கெடும்  துயரம்கெடும்  நடுவன் 
கையில்ஏறிய  பாசம்துணி  கண்டேமுறித்  திடுமால் 
குயில்ஏறிய  பொழில்சூழ்திருக்  குன்றேறி  நடக்கும் 
மயில்ஏறிய  மணியேஎன  வளர்நீறணிந்  திடிலே. 
4
தேறாப்பெரு  மனமானது  தேறுந்துயர்  மாறும் 
மாறாப்பிணி  மாயும்திரு  மருவும்கரு  ஒருவும் 
வீறாப்பொடு  வருசூர்முடி  வேறாக்கிட  வரும்ஓர் 
ஆறாக்கரப்  பொருளேஎன  அருள்நீறணிந்  திடிலே. 
5
அமராவதி  இறையோடுநல்  அயனுந்திரு  மாலும் 
தமராகுவர்  சிவஞானமுந்  தழைக்குங்கதி  சாரும் 
எமராஜனை  வெல்லுந்திறல்  எய்தும்புகழ்  எய்தும் 
குமராசிவ  குருவேஎனக்  குளிர்நீறணிந்  திடிலே. 
6
மேலாகிய  உலகத்தவர்  மேவித்தொழும்  வண்ணம் 
மாலாகிய  இருள்நீங்கிநல்  வாழ்வைப்பெறு  வார்காண் 
சீலாசிவ  லீலாபர  தேவாஉமை  யவள்தன் 
பாலாகதிர்  வேலாஎனப்  பதிநீறணிந்  திடிலே. 
7
அகமாறிய  நெறிசார்குவர்  அறிவாம்உரு  அடைவார் 
மிகமாறிய  பொறியின்வழி  மேவாநல  மிகுவார் 
சகமாறினும்  உயர்வானிலை  தாமாறினும்  அழியார் 
முகமாறுடை  முதல்வாஎன  முதிர்நீறணிந்  திடிலே. 
8
சிந்தாமணி  நிதிஐந்தரு  செழிக்கும்புவ  னமும்ஓர் 
நந்தாஎழில்  உருவும்பெரு  நலனும்கதி  நலனும் 
இந்தாஎனத்  தருவார்தமை  இரந்தார்களுக்  கெல்லாம் 
கந்தாசிவன்  மைந்தாஎனக்  கனநீறணிந்  திடிலே. 
9
எண்ணார்புரம்  எரித்தார்அருள்  எய்தும்திரு  நெடுமால் 
நண்ணாததோர்  அடிநீழலில்  நண்ணும்படி  பண்ணும் 
பண்ணார்மொழி  மலையாள்அருள்  பாலாபனி  ரண்டு 
கண்ணாஎம  தண்ணாஎனக்  கனநீறணிந்  திடிலே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com