
தாணு ஈன்றருள் செல்வமே தணிகையில் சாமியே நினைஏத்திக்
காணு வேன்இலை அருள்இவண் புன்மையில் காலங்கள் கழிக்கின்றேன்
மாணும் அன்பர்கள் என்சொலார் ஐயநீ வந்தெனக் கருள்வாயேல்
நாணு வேன்அலன் நடுங்கலன் ஒடுங்கலன் நாயினும் கடையேனே.
கடைப்பட் டேங்கும்இந் நாயினுக் கருள்தரக் கடவுள்நீ வருவாயேல்
மடைப்பட் டோங்கிய அன்பகத் தொண்டர்கள் வந்துனைத் தடுப்பாரேல்
தடைப்பட் டாய்எனில் என்செய்வேன் என்செய்வேன் தளர்வது தவிரேனே
அடைப்பட் டோங்கிய வயல்திருத் தணிகையம் பதிஅமர்ந் திடுதேவே.
தேவ ரேமுதல் உலகங்கள் யாவையும் சிருட்டிஆ தியசெய்யும்
மூவ ரேஎதிர் வருகினும் மதித்திடேன் முருகநின் பெயர்சொல்வோர்
யாவ ரேனும்என் குடிமுழு தாண்டெனை அளித்தவர் அவரேகாண்
தாவ நாடொணாத் தணிகையம் பதியில்வாழ் சண்முகப் பெருமானே.



