
அண்ணாவோ என் அருமை ஐயாவோ பன்னிரண்டு
கண்ணாவோ வேல்பிடித்த கையாவோ செம்பவள
வண்ணாவோ நற்றணிகை மன்னாவோஎன்றென்றே
எண்ணாவோ துன்பத் திருங்கடற்குள் மன்னினனே.
மன்னப்பார் போற்று மணியேநின் பொன்னருளைத்
துன்னப்பா ராது சுழன்றேன் அருணைகிரி
தன்னப்பா நற்றணிகை தன்னில் அமர்ந்தருளும்
என்னப்பா இன்னும் இந்த ஏழைக் கிரங்காயோ.
காய்நின்ற நெஞ்சக் கடையேன் திருத்தணிகை
வாய்நின் றுனதுபுகழ் வாய்பாடக் கைகுவித்துத்
தூய்நின்றே தாளைத்தொழுதாடித் துன்பம்எலாம்
போய்நின் றடைவேனோ புண்ணியநின் பொன்னருளே.
பொன்பிணிக்கும் நெஞ்சப் புலையேனை இவ்வுலகில்
வன்பிணிக்கோ பெற்று வளர்த்தாய் அறியேனே
என்பிணைத்தார் வள்ளற் கினிமை பெறும்மணியே
அன்பிணைத்தோர் போற்றும் அருட்டணிகை மன்னவனே.
வன்நோயும் வஞ்சகர்தம் வன்சார்பும் வன்துயரும்
என்னோயுங் கொண்டதனை எண்ணி இடிவேனோ
அன்னோ முறைபோகி ஐயா முறையேயோ
மன்னோ முறைதணிகை வாழ்வே முறையேயோ.



