திருவருட்பா  29. நெஞ்சவலங் கூறல்

இழுதை  நெஞ்சினேன்  என்செய்வான்  பிறந்தேன் 
ஏழை  மார்முலைக்  கேவிழைந்  துழன்றேன் 
பழுதை  பாம்பென  மயங்கினன்  கொடியேன் 
பாவி  யேன்எந்தப்  பரிசுகொண்  டடைவேன் 
அழுது  கண்கள்நீர்  ஆர்ந்திடும்  அடியர் 
அகத்துள்  ஊறிய  ஆனந்த  அமுதே 
தொழுது  மால்புகழ்  தணிகைஎன்  அரசே 
தோன்ற  லேபரஞ்  சுடர்தரும்  ஒளியே. 
1
வஞ்ச  நெஞ்சினேன்  வல்விலங்  கனையேன் 
மங்கை  மார்முலை  மலைதனில்  உருள்வேன் 
பஞ்ச  பாதகம்  ஓர்உரு  எடுத்தேன் 
பாவி  யேன்எந்தப்  பரிசுகொண்  டடைவேன் 
கஞ்சன்  மால்புகழ்  கருணையங்  கடலே 
கண்கள்  மூன்றுடைக்  கரும்பொளிர்  முத்தே 
அஞ்சல்  அஞ்சல்என்  றன்பரைக்  காக்கும் 
அண்ண  லேதணி  காசலத்  தரசே 
2
மையல்  நெஞ்சினேன்  மதிþயிலேன்  கொடிய 
வாட்க  ணார்முலை  மலைக்குப  சரித்தேன் 
பைய  பாம்பினை  நிகர்த்தவெங்  கொடிய 
பாவி  யேன்எந்தப்  பரிசுகொண்  டடைவேன் 
மெய்யர்  உள்ளகம்  விளங்கொளி  விளக்கே 
மேலை  யோர்களும்  விளம்பரும்  பொருளே 
செய்ய  மேனிஎம்  சிவபிரான்  அளித்த 
செல்வ  மேதிருத்  தணிகையந்  தேவே. 
3
மதியில்  நெஞ்சினேன்  ஓதியினை  அனையேன் 
மாதர்  கண்எனும்  வலையிடைப்  பட்டேன் 
பதியில்  ஏழையேன்  படிற்றுவஞ்  சகனேன் 
பாவி  யேன்எந்தப்  பரிசுகொண்  டடைவேன் 
பொதியில்  ஆடிய  சிவபிரான்  அளித்த 
புண்ணி  யாஅருட்  போதக  நாதா 
துதிஇ  ராமனுக்  கருள்செயும்  தணிகைத் 
து‘ய  னேபசுந்  தோகைவா  கனனே. 
4
துட்ட  நெஞ்சினேன்  எட்டியை  அனையேன் 
துயர்செய்  மாதர்கள்  சூழலுள்  தினமும் 
பட்ட  வஞ்சனேன்  என்செய  உதித்தேன் 
பாவி  யேன்எந்தப்  பரிசுகொண்  டடைவேன் 
நட்டம்  ஆடிய  நாயகன்  அளித்த 
நல்ல  மாணிக்க  நாயக  மணியே 
மட்ட  றாப்பொழில்  சூழ்திருத்  தணிகை 
வள்ள  லேமயில்  வாகனத்  தேவே 
5
காயும்  நெஞ்சினேன்  பேயினை  அனையேன் 
கடிகொள்  கோதையர்  கண்வலைப்  பட்டேன் 
பாயும்  வெம்புலி  நிகர்த்தவெஞ்  சினத்தேன் 
பாவி  யேன்எந்தப்  பரிசுகொண்  டடைவேன் 
தாயும்  தந்தையும்  சாமியும்  எனது 
சார்பும்  ஆகிய  தணிகையங்  குகனே 
ஆயும்  கொன்றைசெஞ்  சடைக்கணிந்  தாடும் 
ஐயர்  தந்தருள்  ஆனந்தப்  பேறே. 
6
தீங்கு  நெஞ்சினேன்  வேங்கையை  அனையேன் 
தீய  மாதர்தம்  திறத்துழல்  கின்றேன் 
பாங்கி  லாரொடும்  பழகிய  வெறியேன் 
பாவி  யேன்எந்தப்  பரிசுகொண்  டடைவேன் 
தேங்கு  கங்கையைச்  செஞ்சடை  இருத்தும் 
சிவபி  ரான்செல்வத்  திருஅருட்  பேறே 
ஓங்கு  நல்தணி  காசலத்  தமர்ந்த 
உண்மை  யேஎனக்  குற்றிடும்  துணையே. 
7
கள்ள  நெஞ்சினேன்  நஞ்சினை  அனையேன் 
கடிய  மாதர்தம்  கருக்குழி  எனும்ஓர் 
பள்ளம்  ஆழ்ந்திடு  புலையனேன்  கொலையேன் 
பாவி  யேன்எந்தப்  பரிசுகொண்  டடைவேன் 
வெள்ள  வார்சடை  வித்தகப்  பெருமான் 
வேண்ட  நற்பொருள்  விரித்துரைத்  தோனே 
புள்அ  லம்புதண்  வாவிசூழ்  தணிகைப் 
பொருப்ப  மர்ந்திடும்  புனிதபூ  ரணனே. 
8
மத்த  நெஞ்சினேன்  பித்தரில்  திரிவேன் 
மாதர்  கண்களின்  மயங்கிநின்  றலைந்தேன் 
பத்தி  என்பதோர்  அணுவும்உற்  றில்லேன் 
பாவி  யேன்எந்தப்  பரிசுகொண்  டடைவேன் 
பித்த  நாயகன்  அருள்திருப்  பேறே 
பிரமன்  மாலுக்கும்  பேசரும்  பொருளே 
தத்தை  பாடுறும்  பொழிற்செறி  தணிகா 
சலத்தின்  மேவிய  தற்பர  ஒளியே. 
9
அழுக்கு  நெஞ்சினேன்  பொய்யல  தறியேன் 
அணங்க  னார்மயல்  ஆழத்தில்  விழுந்தேன் 
பழுக்கும்  மூடருள்  சேர்ந்திடுங்  கொடியேன் 
பாவி  யேன்எந்தப்  பரிசுகொண்  டடைவேன் 
மழுக்கை  ஏந்திய  மாசிலா  மணிக்குள் 
மன்னி  ஓங்கிய  வளர்ஒளிப்  பிழம்பே 
வழுக்கி  லார்புகழ்  தணிகைஎன்  அரசே 
வள்ள  லேஎன்னை  வாழ்விக்கும்  பொருளே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com