திருவருட்பா  28. முறையிட்ட பத்து

பொன்னைப்  பொருளா  நினைப்போர்பால்  போந்து  மிடியால்  இரந்தலுத்தேன் 
நின்னைப்  பொருள்என்  றுணராத  நீசன்  இனிஓர்  நிலைகாணேன் 
மின்னைப்  பொருவும்  சடைப்பவள  வெற்பில்  விளைந்த  வியன்கரும்பே 
முன்னைப்  பொருளே  தணிகையனே  முறையோ  முறையோ  முறையேயோ. 
1
மக்கட்  பிறவி  எடுத்தும்உனை  வழுத்தாக்  கொடிய  மரம்அனையேன் 
துக்கக்  கடலில்  வீழ்ந்துமனம்  சோர்கின்  றேன்ஓர்  துணைகாணேன் 
செக்கர்ப்  பொருவு  வடிவேற்கைத்  தேவே  தெவிட்டாத்  தெள்ளமுதே 
முக்கட்  கரும்பின்  முழுமுத்தே  முறையோ  முறையோ  முறையேயோ. 
2
அன்பின்  உனது  திருஅடிக்கே  ஆளாய்த்  தொண்டொன்  றாற்றாதே 
துன்பின்  உடையோர்  பால்அணுகிச்  சோர்ந்தேன்  இனிஓர்  துணைகாணேன் 
என்பில்  மலிந்த  மாலைபுனை  எம்மான்  தந்த  பெம்மானே 
முன்பின்  நடுவாய்  முளைத்தோனே  முறையோ  முறையோ  முறையேயோ. 
3
அருகா  மலத்தின்  அலைந்திரக்கம்  அறியா  வஞ்ச  நெஞ்சகர்பால் 
உருகா  வருந்தி  உழன்றலைந்தேன்  உன்தாள்  அன்றித்  துணைகாணேன் 
பெருகா  தரவில்  சிவன்பெறும்நற்  பேறே  தணிகைப்  பெருவாழ்வே 
முருகா  முகம்மூ  விரண்டுடையாய்  முறையோ  முறையோ  முறையேயோ. 
4
பொன்னின்  றொளிரும்  மார்பன்அயன்  போற்றும்  உன்தாள்  புகழ்மறந்தே 
கன்னின்  றணங்கும்  மனத்தார்பால்  கனிந்தேன்  இனிஓர்  துணைகாணேன் 
மின்னின்  றிலங்கு  சடைக்கனியுள்  விளைந்த  நறவே  மெய்அடியார் 
முன்னின்  றருளும்  தணிகையனே  முறையோ  முறையோ  முறையேயோ. 
5
வெதிர்உள்  ளவரின்  மொழிகேளா  வீண  ரிடம்போய்  மிகமெலிந்தே 
அதிரும்  கழற்சே  வடிமறந்தேன்  அந்தோ  இனிஓர்  துணைகாணேன் 
எதிரும்  குயில்மேல்  தவழ்தணிகை  இறையே  முக்கண்  இயற்கனியின் 
முதிரும்  சுவையே  முதற்பொருளே  முறையோ  முறையோ  முறையேயோ. 
6
ஈனத்  திவறும்  மனக்கொடியோர்  இடம்போய்  மெலிந்து  நாள்தோறும் 
ஞானத்  திருத்தாள்  துணைசிறிதும்  நாடேன்  இனிஓர்  துணைகாணேன் 
தானத்  தறுகண்  மலைஉரியின்  சட்டை  புனைந்தோன்  தரும்பேறே 
மோனத்  தவர்த்ம்  அகவிளக்கே  முறையோ  முறையோ  முறையேயோ. 
7
தேவே  எனநிற்  போற்றாத  சிறிய  ரிடம்போய்த்  தியங்கிஎன்றன் 
கோவே  நின்றன்  திருத்தாளைக்  குறிக்க  மறந்தேன்  துணைகாணேன் 
மாவே  ழத்தின்  உரிபுனைந்த  வள்ளற்  கினிய  மகப்பேறே 
மூவே  தனையை  அறுத்தருள்வோய்  முறையோ  முறையோ  முறையேயோ. 
8
வேதா  நந்த  னொடுபோற்றி  மேவப்  படும்நின்  பதம்மறந்தே 
ஈதா  னம்தந்  திடுவீர்என்  றீன  ரிடம்போய்  இரந்தலைந்தேன் 
போதா  னந்தப்  பரசிவத்தில்  போந்த  பொருளே  பூரணமே. 
மூதா  னந்த  வாரிதியே  முறையோ  முறையோ  முறையேயோ. 
9
வடியாக்  கருணை  வாரிதியாம்  வள்ளல்  உன்தாள்  மலர்மறந்தே 
கொடியா  ரிடம்போய்க்குறையிரந்தேன்  கொடியேன்  இனிஓர்  துணைகாணேன் 
அடியார்க்  கெளிய  முக்கணுடை  அம்மான்  அளித்த  அருமருந்தே 
முடியா  முதன்மைப்  பெரும்பொருளே  முறையோ  முறையோ  முறையேயோ. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com