
வான்பிறந்தார் புகழ்தணிகை மலையைக் கண்டு
வள்ளலே நின்புகழை மகிழ்ந்து கூறேன்
தேன்பிறந்த மலர்க்குழலார்க் காளா வாளா
திரிகின்றேன் புரிகின்றேன் தீமை நாளும்
ஊன்பிறந்த உடல்ஓம்பி அவமே வாழ்நாள்
ஒழிக்கின்றேன் பழிக்காளாய் உற்றேன் அந்தோ
ஏன்பிறந்தேன் ஏன்பிறந்தேன் பாவி யேன்யான்
என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
மெய்யாவோ நற்றணிகை மலையைச் சார்ந்து
மேன்மையுறும் நின்புகழை விரும்பி ஏத்தேன்
உய்யாவோ வல்நெறியேன் பயன்ப டாத
ஓதிஅனையேன் எட்டிதனை ஒத்தேன் அன்பர்
பொய்யாஓ டெனமடவார் போகம் வேட்டேன்
புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன்
ஐயாவோ நாணாமல் பாவி யேன்யான்
யார்க்கெடுத்தென் குறைதன்னை அறைகு வேனே.
வாட்செல்லா நெடுங்கண்ணார் மயலில் வீழ்ந்து
மனம்போன வழிசென்று வருந்தா நின்றேன்
சேட்செல்லார் வரைத்தணிகைத் தேவ தேவே
சிவபெருமான் பெற்றபெருஞ் செல்வ மேநான்
நாட்செல்லா நின்றதினி என்செய் கேனோ
நாயினேன் பிழைதன்னை நாடி நின்பால்
கோட்சொல்லா நிற்பர்எனில் என்னா மோஎன்
குறையைஎடுத் தெவர்க்கெளியேன் கூறு கேனே.
பொல்லாத மங்கையர்தம் மயற்குள் ஆகும்
புலையமனத் தால்வாடிப் புலம்பு கின்றேன்
கல்லாத பாவிஎன்று கைவிட் டாயோ
கருணைஉரு வாகியசெங் கரும்மே மேரு
வில்லான்தன் செல்வமே தணிகை மேவும்
மெய்ஞ்ஞான ஒளியேஇவ் வினையேன் துன்பம்
எல்லாம்நீ அறிவாயே அறிந்தும் வாரா
திருந்தால்என் குறையைஎவர்க் கியம்பு கேனே.
முன்அறியேன் பின்அறியேன் மாதர் பால்என்
மூடமனம் இழுத்தோடப் பின்சென் றெய்த்தேன்
புன்னெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன்
புனிதஅருட் கடலாடேன் புளகம் மூடேன்
பொன்அரையன் தொழும்சடிலப் புனிதன் ஈன்ற
புண்ணியமே தணிகைவளர் போத வாழ்வே
என்அரைசே என்அமுதே நின்பால் அன்றி
எவர்க்கெடுத்தென் குறைதன்னை இயம்பு கேனே.
விடுமாட்டில் திரிந்துமட மாத ரார்தம்
வெய்யநீர்க் குழிவீழ்ந்து மீளா நெஞ்சத்
தடுமாற்றத் தொடும்புலைய உடலை ஓம்பிச்
சார்ந்தவர்க்கோர் அணுஅளவும் தான்ஈ யாது
படுகாட்டில் பலன்உதவாப் பனைபோல் நின்றேன்
பாவியேன் உடற்சுமையைப் பலரும் கூடி
இடுகாட்டில் வைக்குங்கால் என்செய் வேனோ
என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
மின்னைநேர் இடைமடவார் மயல்செய் கின்ற
வெங்குழியில் வீழ்ந்தழுந்தி வெறுத்தேன் போலப்
பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும்
பேய்போல வீழ்ந்தாடி மயற்குள் மூழ்கிப்
பொன்னையே ஒத்தஉன தருளை வேண்டிப்
போற்றாது வீணேநாள் போக்கு கின்ற
என்னையே யான்சிரிப்பேன் ஆகில் அந்தோ
என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
முலைஒருபால் முகம்ஒருபால் காட்டும் பொல்லா
மூடமட வார்கள்தமை முயங்கி நின்றேன்
இலைஒருபால் அனம்ஒருபால் மலஞ்சேர்த் துண்ணும்
ஏழைமதி யேன்தணிகை ஏந்த லேபொன்
மலைஒருபால் வாங்கியசெவ் வண்ண மேனி
வள்ளல்தரு மருந்தேநின் மலர்த்தாள் ஏத்தேன்
புலைஒருவா வஞ்சகநெஞ் சுடையேன் என்றன்
புன்மைதனை எவர்க்கெடுத்துப் புகலு வேனே.
வேய்ப்பால்மென் தோள்மடவார் மறைக்கும் மாய
வெம்புழுச்சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன்
தாய்ப்பாலை உண்ணாது நாய்ப்பால் உண்ணும்
தகையனேன் திருத்தணிகை தன்னைச் சார்ந்து
ஆய்ப்பாலை ஒருமருங்கான் ஈன்ற செல்வத்
தாரமுதே நின்அருளை அடையேன் கண்டாய்
ஏய்ப்பாலை நடுங்கருங்கல் போல்நின் றெய்த்தேன்
என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
வஞ்சமட மாதரார் போகம் என்னும்
மலத்தினிடைக் கிருமிஎன வாளா வீழ்ந்தேன்
கஞ்சமலர் மனையானும் மாலும் தேடக்
காணாத செங்கனியில் கனிந்த தேனே
தஞ்சம் என்போர்க் கருள்புரியும் வள்ளலேநல்
தணிகைஅரை சேஉனது தாளைப் போற்றேன்
எஞ்சல்இலா வினைச்சேம இடமாய் உற்றேன்
என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.



