
போதுகொண் டவனும் மாலும்நின் றேத்தும்
புண்ணிய நின்திரு அடிக்கே
யாதுகொண் டடைகேன் யாதுமேற் செய்கேன்
யாதுநின் திருஉளம் அறியேன்
தீதுகொண் டவன்என் றெனக்கருள் சிறிதும்
செய்திடா திருப்பையோ சிறியோன்
ஏதிவன் செயல்ஒன் றிலைஎனக் கருதி
ஈவையோ தணிகைவாழ் இறையே.
வாழ்வனோ நின்பொன் அடிநிழல் கிடைத்தே
வயங்கும்ஆ னந்தவெள் ளத்துள்
ஆழ்வனோ எளியேன் அல்லதிவ் வுலகில்
அறஞ்செயாக் கொடியர்பாற் சென்றே
தாழ்வனோ தாழ்ந்த பணிபுரிந் தவமே
சஞ்சரித் துழன்றுவெந் நரகில்
வீழ்வனோ இஃதென் றறிகிலேன் தணிகை
வெற்பினுள் ஒளிர்அருள் விளக்கே.



