
கார்பூத்த கண்டத் தொடுமேவு முக்கட் கனிகனிந்து
சீர்பூத் தொழுகுசெந் தேனே தணிகையில் தெள்அமுதே
பேர்பூத்த ஒற்றியில் நின்முன்னர் ஏற்றிடப் பேதையனேன்
ஏர்பூத்த ஒண்பளி தம் காண் கிலன்அதற் கென்செய்வனே.
கருமருந் தாய மணிகண்ட நாயகன் கண்மணியாம்
அருமருந் தேதணி காசலம் மேவும்என் ஆருயிரே
திருமருங் கார்ஒற்றி யூர்மே வியநின் திருமுன்னராய்
ஒருமருங் கேற்றஎன் செய்கேன் கற்பூர ஒளியினுக்கே.
பால்எடுத் தேத்தும்நற் பாம்பொடு வேங்கையும் பார்த்திடஓர்
கால்எடுத் தம்பலத் தாடும் பிரான்திருக் கண்மணியே
வேல்எடுத் தோய்தென் தணிகா சலத்தமர் வித்தகநின்
பால்எடுத் தேற்றக் கிடைக்குங் கொலோவெண் பளிதம்எற்கே.
கண்ணப்பன் என்னும் திருப்பெய ரால்உல கம்புகழும்
திண்ணப்பன் ஏத்தும் சிவனார் மகனுக்குத் தெண்டன்இட்ட
விண்ணப்பம் ஒன்றிந்த மேதினி மாயையில் வீழ்வதறுத்
தெண்ணப் படும்நின் திருவருள் ஈகஇவ் வேழையற்கே.



