
எப்பா லவரும் இறைஞ்சும் தணிகை இருந்தருள்என்
அப்பாஉன் பொன்னடிக் கென்நெஞ் சகம்இட மாக்கிமிக்க
வெப்பான நஞ்சன வஞ்சகர் பாற்செலும் வெந்துயர்நீத்
திப்பாரில் நின்அடி யார்க்கேவல் செய்ய எனக்கருளே.
எய்யா தருள்தணி காசலம் மேவிய என்அருமை
ஐயா நினது திருவடி ஏத்திஅன் றோஅயனும்
செய்யாள் மருவும் புயனுடைத் தேவனும் சேணவனும்
நையாத ஆயுளும் செல்வமும் வண்மையும் நண்ணினரே.
வாளாருங் கண்ணியர் மாயையை நீக்கி மலிகரணக்
கோளாகும் வாதனை நீத்துமெய்ஞ் ஞானக் குறிகொடுநின்
தாளாகும் நீழல் அதுசார்ந்து நிற்கத் தகுந்ததிரு
நாளாகும் நாள்எந்த நாள்அறி யேன்தணி காசலனே.
ஊன்பார்க்கும் இவ்வுடற் பொய்மையைத் தேர்தல் ஒழிந்தவமே
மான்பார்க்கும் கண்ணியர் மையலில் வீழும் மயக்கம்அற்றே
தேன்பார்க்கும் சோலைத் தணிகா சலத்துன் திருஅழகை
நான்பார்க்கும் நாள்எந்த நாள்மயில் ஏறிய நாயகனே.
என்னே குறைநமக் கேழைநெஞ் சேமயில் ஏறிவரும்
மன்னே எனநெடு மாலும் பிரமனும் வாழ்த்திநிற்கும்
தன்னேர் தணிகைத் தடமலை வாழும்நற் றந்தைஅருள்
பொன்னேர் திருவடிப் போதுகண் டாய்நம் புகலிடமே.
பேதைநெஞ் சேஎன்றன் பின்போந் திடுதிஇப் பேயுலக
வாதைஅஞ் சேல்பொறி வாய்க்கலங் கேல்இறை யும்மயங்கேல்
போதையெஞ் சேல்தணி காசலம் போய்அப் பொருப்பமர்ந்த
தாதைஅஞ் சேவடிக் கீழ்க்குடி யாகத் தயங்குவமே.



