திருவருட்பா  17. காதற் சிறப்புக் கதுவா மாண்பு

உலகம்  உடையார்  தம்ஊரை  ஒற்றி  வைத்தார்  என்றாலும் 
அலகில்  புகழார்  காபாலி  ஆகத்  திரிந்தார்  என்றாலும் 
திலகம்  அனையார்  புறங்காட்டில்  சேர்ந்து  நடித்தார்  என்றாலும் 
கலக  விழியாய்  நான்அவர்மேல்  காதல்  ஒழியேன்  கனவினுமே. 
1
பெருமை  உடையார்  மனைதொறும்போய்ப்  பிச்சை  எடுத்தார்  ஆனாலும் 
அருமை  மணியார்  அம்பலத்தில்  ஆடித்  திரிந்தார்  ஆனாலும் 
ஒருமை  உடையார்  கோவணமே  உடையாய்  உடுத்தார்  ஆனாலும் 
கருமை  விழியாய்  நான்அவர்மேல்  காதல்  ஒழியேன்  கனவினுமே. 
2
எல்லாம்  உடையார்  மண்கூலிக்  கெடுத்துப்  பிழைத்தார்  ஆனாலும் 
கொல்லா  நலத்தார்  யானையின்தோல்  கொன்று  தரித்தார்  ஆனாலும் 
வல்லார்  விசையன்  வில்அடியால்  வடுப்பட்  டுவந்தார்  ஆனாலும் 
கல்லாம்  முலையாய்  நான்அவர்மேல்  காதல்  ஒழியேன்  கனவினுமே. 
3
என்னை  உடையார்  ஒருவேடன்  எச்சில்  உவந்தார்  என்றாலும் 
அன்னை  அனையார்  ஒருமகனை  அறுக்க  உரைத்தார்  என்றாலும் 
துன்னும்  இறையார்  தொண்டனுக்குத்  தூதர்  ஆனார்  என்றாலும் 
கன்னி  இதுகேள்  நான்அவர்மேல்  காதல்  ஒழியேன்  கனவினுமே. 
4
என்றும்  இறவார்  மிடற்றில்விடம்  இருக்க  அமைத்தார்  என்றாலும் 
ஒன்று  நிலையார்  நிலையில்லா  தோடி  உழல்வார்  என்றாலும் 
நன்று  புரிவார்  தருமன்உயிர்  நலிய  உதைத்தார்  என்றாலும் 
கன்றுண்  கரத்தாய்  நான்அவர்மேல்  காதல்  ஒழியேன்  கனவினுமே. 
5
என்கண்  அனையார்  மலைமகளை  இச்சித்  தணைந்தார்  ஆனாலும் 
வன்கண்  அடையார்  தீக்கண்ணால்  மதனை  எரித்தார்  ஆனாலும் 
புன்கண்  அறுப்பார்  புன்னகையால்  புரத்தை  அழித்தார்  ஆனாலும் 
கன்னல்  மொழியாய்  நான்அவர்மேல்  காதல்  ஒழியேன்  கனவினுமே. 
6
வாழ்வை  அளிப்பார்  மாடேறி  மகிழ்ந்து  திரிவார்  என்றாலும் 
தாழ்வை  மறுப்பார்  பூதகணத்  தானை  உடையார்  என்றாலும் 
ஊழ்வை  அறுப்பார்  பேய்க்கூட்டத்  தொக்க  நடிப்பார்  என்றாலும் 
காழ்கொள்  முலையாய்  நான்அவர்மேல்  காதல்  ஒழியேன்  கனவினுமே. 
7
விமலை  இடத்தார்  இன்பதுன்பம்  வேண்டா  நலத்தார்  ஆனாலும் 
அமலம்  உடையார்  தீவண்ணர்  ஆமென்  றுரைப்பார்  ஆனாலும் 
நமலம்  அறுப்பார்  பித்தர்எனும்  நாமம்  உடையார்  ஆனாலும் 
கமலை  அனையாய்  நான்அவர்மேல்  காதல்  ஒழியேன்  கனவினுமே. 
8
மான்கொள்  கரத்தார்  தலைமாலை  மார்பில்  அணிந்தார்  என்றாலும் 
ஆன்கொள்  விடங்கர்  சுடலைஎரி  அடலை  விழைந்தார்  என்றாலும் 
வான்கொள்  சடையார்  வழுத்துமது  மத்தர்  ஆனார்  என்றாலும் 
கான்கொள்  குழலாய்  நான்அவர்மேல்  காதல்  ஒழியேன்  கனவினுமே. 
9
போர்மால்  விடையார்  உலகமெலாம்  போக்குந்  தொழிலர்  ஆனாலும் 
ஆர்வாழ்  சடையார்  தமைஅடைந்தோர்  ஆசை  அழிப்பார்  ஆனாலும் 
தார்வாழ்  புயத்தார்  மாவிரதர்  தவஞா  னியரே  ஆனாலும் 
கார்வாழ்  குழலாய்  நான்அவர்மேல்  காதல்  ஒழியேன்  கனவினுமே. 
10
கோதே  மருவார்  மால்அயனும்  குறியா  நெறியார்  என்றாலும் 
சாதே  மகிழ்வார்  அடியாரைத்  தம்போல்  நினைப்பார்  என்றாலும் 
மாதே  வருக்கும்  மாதேவர்  மௌன  யோகி  என்றாலும் 
காதேர்  குழையாய்  நான்அவர்மேல்  காதல்  ஒழியேன்  கனவினுமே. 
11
உடையார்  உலகிற்  காசென்பார்க்  கொன்றும்  உதவார்  ஆனாலும் 
அடையார்க்  கரியார்  வேண்டார்க்கே  அருள்வார்  வலிய  ஆனாலும் 
படையார்  கரத்தர்  பழிக்கஞ்சாப்  பாசு  பதரே  ஆனாலும் 
கடையா  அமுதே  நான்அவர்மேல்  காதல்  ஒழியேன்  கனவினுமே. 
12

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com