திருவருட்பா  16. திருஅருட் பெருமிதம்

விடையார்  விடங்கப்  பெருமானார்  வெள்ளச்  சடையார்  வெண்ணகையால் 
அடையார்  புரங்கள்  எரித்தழித்தார்  அவரே  இந்த  அகிலமெலாம் 
உடையார்  என்று  நினைத்தனைஊர்  ஒற்றி  அவர்க்கென்  றுணர்ந்திலையோ 
இடையா  மயல்கொண்  டெதுபெறுவாய்  ஏழை  அடிநீ  என்மகளே. 
1
கருவாழ்  வகற்றும்  கண்நுதலார்  கண்ணன்  அயனும்  காண்பரியார் 
திருவாழ்  ஒற்றித்  தேவர்எனும்  செல்வர்  அவரே  செல்வமதில் 
பெருவாழ்  வுடையார்  எனநினைத்தாய்  பிச்சை  எடுத்த  தறிந்திலையோ 
இருவா  மயல்கொண்  டெதுபெறுவாய்  ஏழை  அடிநீ  என்மகளே. 
2
மட்டுக்  கடங்கா  வண்கையினார்  வளஞ்சேர்  ஒற்றி  வாணர்அவர் 
பட்டுத்  துகிலே  திசைகளெலாம்  படர்ந்த  தென்னப்  பரிந்தனையோ 
கட்டத்  துகிலும்  கிடையாது  கந்தை  உடுத்த  தறிந்திலையோ 
இட்டுப்  புணர்ந்திங்  கெதுபெறுவாய்  ஏழை  அடிநீ  என்மகளே. 
3
நடங்கொள்  கமலச்  சேவடியார்  நலஞ்சேர்  ஒற்றி  நாதர்அவர் 
தடங்கொள்  மார்பின்  மணிப்பணியைத்  தரிப்பார்  நமக்கென்  றெண்ணினையால் 
படங்கொள்  பாம்பே  பாம்பென்றால்  படையும்  நடுங்கும்  பார்த்திலையோ 
இடங்கொள்  மயல்கொண்  டெதுபெறுவாய்  எழை  அடிநீ  என்மகளே. 
4
திருக்கண்  நுதலால்  திருமகனைத்  தீர்த்தார்  ஒற்றித்  தேவர்அவர் 
எருக்க  மலரே  சூடுவர்நீ  எழில்மல்  லிகைஎன்  றெண்ணினையால் 
உருக்கும்  நெருப்பே  அவர்உருவம்  உனக்கும்  அவர்க்கும்  உறவாமோ 
இருக்க  மயல்கொண்  டெதுபெறுவாய்  ஏழை  அடிநீ  என்மகளே. 
5
மேலை  விணையைத்  தவிர்த்தருளும்  விடையார்  ஒற்றி  விகிர்தர்அவர் 
மாலை  கொடுப்பார்  உணங்குதலை  மாலை  அதுதான்  வாங்குவையே 
ஆல  மிடற்றார்  காபாலி  ஆகித்  திரிவார்  அணைவிலரே 
ஏல  மயல்கொண்  டென்பெறுவாய்  ஏழை  அடிநீ  என்மகளே. 
6
மாகம்  பயிலும்  பொழிற்பணைகொள்  வளஞ்சேர்  ஒற்றி  வாணர்அவர் 
யோகம்  பயில்வார்  மோகமிலார்  என்னே  உனக்கிங்  கிணங்குவரே 
ஆகம்  பயில்வாள்  மலையாளேல்  அவளோ  ஒன்றும்  அறிந்திலள்காண் 
ஏக  மயல்கொண்  டெதுபெறுவாய்  ஏழை  அடிநீ  என்மகளே. 
7
விண்பார்  புகழும்  திருவொற்றி  மேவும்  புனிதர்  விடந்தரினும் 
உண்பார்  இன்னும்  உனக்கதுதான்  உடன்பா  டாமோ  உளமுருகித் 
தண்பார்  என்பார்  தமையெல்லாம்  சார்வார்  அதுஉன்  சம்மதமோ 
எண்பார்  மயல்கொண்  டெதுபெறுவாய்  ஏழை  அடிநீ  என்மகளே. 
8
நீடி  வளங்கொள்  ஒற்றியில்வாழ்  நிமலர்  உலகத்  துயிர்தோறும் 
ஓடி  ஒளிப்பார்  அவர்நீயும்  ஒக்க  ஓட  உன்வசமோ 
நாடி  நடிப்பார்  நீயும்உடன்  நடித்தால்  உலகர்  நகையாரோ 
ஈடில்  மயல்கொண்  டெதுபெறுவாய்  ஏழை  அடிநீ  என்மகளே. 
9
உள்ளி  உருகும்  அவர்க்கருளும்  ஒற்றி  நகர்வாழ்  உத்தமர்க்கு 
வெள்ளி  மலையும்  பொன்மலையும்  வீடென்  றுரைப்பார்  ஆனாலும் 
கள்ளி  நெருங்கிப்  புறங்கொள்சுடு  காடே  இடங்காண்  கண்டறிநீ 
எள்ளில்  மயல்கொண்  டெதுபெறுவாய்  ஏழை  அடிநீ  என்மகளே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com