திருவருட்பா  15. சோதிடம் நாடல்

பொன்னஞ்  சிலையால்  புரம்எறித்தார்  பொழில்சூழ்  ஒற்றிப்  புண்ணியனார் 
முன்நஞ்  சருந்தும்  முக்கணனார்  மூவர்  அறியா  முதல்வர்அவர் 
இன்னஞ்  சிலநாள்  சென்றிடுமோ  இலதேல்  இன்று  வருவாரோ 
உன்னஞ்  சிறந்தீர்  சோதிடம்பார்த்  துரைப்பீர்  புரிநூல்  உத்தமரே. 
1
பெற்றி  அறியாப்  பிரமனுக்கும்  பெரிய  மாற்கும்  பெறஅறியார் 
புற்றின்  அரவார்  கச்சைஉடைப்  புனிதர்  என்னைப்  புணரும்இடம் 
தெற்றி  மணிக்கால்  விளங்குதில்லைச்  சிற்றம்  பலமோ  அன்றிஇந்த 
ஒற்றி  நகரோ  சோதிடம்பார்த்  துரைப்பீர்  புரிநூல்  உத்தமரே. 
2
அளித்து  மூன்று  பிள்ளைகளால்  அகிலம்  நடக்க  ஆட்டுவிப்பார் 
தெளித்து  நதியைச்  சடைஇருத்தும்  தேவர்  திருவாழ்  ஒற்றியுளார் 
களித்து  மாலை  கொடுப்பாரோ  கள்ளி  எனவே  விடுப்பாரோ 
ஒளித்தொன்  றுரையீர்  சோதிடம்பார்த்  துரைப்பீர்  புரிநூல்  உத்தமரே. 
3
எண்தோள்  இலங்கும்  நீற்றணிய  ரியார்க்கும்  இறைவர்  எனைஉடையார் 
வண்டோ  லிடும்பூங்  கொன்றைஅணி  மாலை  மார்பர்  வஞ்சமிலார் 
தண்தோய்  பொழில்சூழ்  ஒற்றியினார்  தமக்கும்  எனக்கும்  மணப்பொருத்தம் 
உண்டோ  இலையோ  சோதிடம்பார்த்  துரைப்பீர்  புரிநூல்  உத்தமரே. 
4
தவர்தாம்  வணங்கும்  தாளுடையார்  தாய்போல்  அடியர்  தமைப்புரப்பார் 
பவர்தாம்  அறியாப்  பண்புடையார்  பணைசூழ்  ஒற்றிப்  பதிஅமர்ந்தார் 
அவர்தாம்  மீண்டுற்  றணைவாரோ  அன்றி  நான்போய்  அணைவேனோ 
உவர்தாம்  அகற்றும்  சோதிடம்பார்த்  துரைப்பீர்  புரிநூல்  உத்தமரே. 
5
பைத்த  அரவப்  பணிஅணிவார்  பணைசூழ்  ஒற்றிப்  பதிமகிழ்வார் 
மைத்த  மிடற்றார்  அவர்தமக்கு  மாலை  இடவே  நான்உளத்தில் 
வைத்த  கருத்து  முடிந்திடுமோ  வறிதே  முடியா  தழிந்திடுமோ 
உய்த்த  மதியால்  சோதிடம்பார்த்  துரைப்பீர்  புரிநூல்  உத்தமரே. 
6
தக்க  விதியின்  மகத்தோடும்  தலையும்  அழித்தார்  தண்அளியார் 
மிக்க  வளஞ்சேர்  திருவொற்றி  மேவும்  பரமர்  வினையேன்தன் 
துக்கம்  அகலச்  சுகம்அளிக்கும்  தொடர்பும்  உண்டோ  இலையோதான் 
ஒக்க  அறிந்தீர்  சோதிடம்பார்த்  துரைப்பீர்  புரிநூல்  உத்தமரே. 
7
வெண்மை  நீற்றர்  வெள்ளேற்றர்  வேத  கீதர்  மெய்உவப்பார் 
வண்மை  உடையார்  ஒற்றியினார்  மருவ  மருவி  மனமகிழ்ந்து 
வண்மை  அகலா  தருட்கடல்நீ  ராடு  வேனோ  ஆடேனோ 
உண்மை  அறிந்தீர்  சோதிடம்பார்த்  துரைப்பீர்  புரிநூல்  உத்தமரே. 
8
ஆர்த்து  மலிநீர்  வயல்ஒற்றி  அமர்ந்தார்  மதியோ  டரவைமுடிச் 
சேர்த்து  நடிப்பார்  அவர்தமைநான்  தேடி  வலியச்  சென்றிடினும் 
பார்த்தும்  பாரா  திருப்பாரோ  பரிந்து  வாஎன்  றுரைப்பாரோ 
ஓர்த்து  மதிப்பீர்  சோதிடம்பார்த்  துரைப்பீர்  புரிநூல்  உத்தமரே. 
9
அள்ள  மிகும்பேர்  அழகுடையார்  ஆனை  உரியார்  அரிக்கரியார் 
வெள்ள  மிகும்பொன்  வேணியினார்  வியன்சேர்  ஒற்றி  விகிர்தர்  அவர் 
கள்ள  முடனே  புணர்வாரோ  காத  லுடனே  கலப்பாரோ 
உள்ளம்  அறியேன்  சோதிடம்பார்த்  துரைப்பீர்  புரிநூல்  உத்தமரே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com