திருவருட்பா · 18ஆற்றா விரகம்

ஓணம் உடையான் தொழுதேத்தும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்பால்
மாண வலியச் சென்றென்னை மருவி அணைவீர் என்றேநான்
நாணம் விடுத்து நவின்றாலும் நாமார் நீயார் என்பாரேல்
ஏண விழியாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
1
காதம் மணக்குங் கடிமலர்ப்பூங் காவார் ஒற்றிக் கண்நுதலார்
போதம் மணக்கும் புனிதர்அவர் பொன்னம் புயத்தைப் புணரேனேல்
சீதம் மணக்குங் குழலாய்என் சிந்தை மயங்கித் தியங்குமடி
ஏதம் மணக்கும் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
2
பண்ணார் மொழியார் உருக்காட்டும் பணைசூழ் ஒற்றிப் பதியினர்என்
கண்ணார் மணிபோன் றென்உயிரில் கலந்து வாழும் கள்வர்அவர்
நண்ணார் இன்னும் திருஅனையாய் நான்சென் றிடினும் நலம்அருள
எண்ணார் ஆயின் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
3
ஊர்என் றுடையீர் ஒற்றிதனை உலக முடையீர் என்னைஅணை
வீர்என் றவர்முன் பலர்அறிய வெட்கம் விடுத்துக் கேட்டாலும்
சேர்என் றுரைத்தால் அன்றிஅவர் சிரித்துத் திருவாய் மலர்ந்தெனைநீ
யார்என் றுரைத்தால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
4
சோமன் நிலவுந் தூய்ச்சடையார் சொல்லிற் கலந்த சுவையானார்
சேமம் நிலவுந் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலர்நான்
தாமம் அருள்வீர் என்கினும்இத் தருணத் திசையா தென்பாரேல்
ஏம முலையாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
5
வில்லை மலையாய்க் கைக்கொண்டார் விடஞ்சூழ் கண்டர் விரிபொழில்சூழ்
தில்லை நகரார் ஒற்றியுளார் சேர்ந்தார் அல்லர் நான்அவர்பால்
ஒல்லை அடைந்து நின்றாலும் உன்னை அணைதல் ஒருபோதும்
இல்லை எனிலோ என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ.
6
திருந்தால் அமர்ந்தார் திருப்புலியூர்ச் சிற்றம் பலத்தில் திருநடம்செய்
மருந்தார் ஒற்றி வாணர்இன்னும் வந்தார் அல்லர் நான்போய்என்
அருந்தாழ் வகல அருள்வீரென் றாலும் ஒன்றும் அறியார்போல்
இருந்தால் அம்மா என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
7
அசையா தமர்ந்தும் அண்டமெலாம் அசையப் புலியூர் அம்பலத்தே
நசையா நடிக்கும் நாதர்ஒற்றி நாட்டார் இன்னும் நண்ணிலர்நான்
இசையால் சென்றிங் கென்னைஅணை வீர்என் றுரைப்பேன் எனில்அதற்கும்
இசையார் ஆகில் என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ.
8
மாற்கா தலிக்கும் மலர்அடியார் மாசற் றிலங்கும் மணிஅனையார்
சேற்கா தலிக்கும் வயல்வளஞ்சூழ் திருவாழ் ஒற்றித் தேவர்அவர்
பாற்கா தலித்துச் சென்றாலும் பாவி அடிநீ யான்அணைதற்
கேற்காய் என்றால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
9
மாழை மலையைச் சிலையாக வளைத்தார் அன்பர் தமைவருத்தும்
ஊழை அழிப்பார் திருஒற்றி ஊரார் இன்னும் உற்றிலர்என்
பாழை அகற்ற நான்செலினும் பாரா திருந்தால் பைங்கொடியே
ஏழை அடிநான் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com