திருவருட்பா  18. ஆற்றா விரகம்

ஓணம்  உடையான்  தொழுதேத்தும்  ஒற்றி  நகர்வாழ்  உத்தமர்பால் 
மாண  வலியச்  சென்றென்னை  மருவி  அணைவீர்  என்றேநான் 
நாணம்  விடுத்து  நவின்றாலும்  நாமார்  நீயார்  என்பாரேல் 
ஏண  விழியாய்  என்செய்வேன்  என்னை  மடவார்  இகழாரோ. 
1
காதம்  மணக்குங்  கடிமலர்ப்பூங்  காவார்  ஒற்றிக்  கண்நுதலார் 
போதம்  மணக்கும்  புனிதர்அவர்  பொன்னம்  புயத்தைப்  புணரேனேல் 
சீதம்  மணக்குங்  குழலாய்என்  சிந்தை  மயங்கித்  தியங்குமடி 
ஏதம்  மணக்கும்  என்செய்வேன்  என்னை  மடவார்  இகழாரோ. 
2
பண்ணார்  மொழியார்  உருக்காட்டும்  பணைசூழ்  ஒற்றிப்  பதியினர்என் 
கண்ணார்  மணிபோன்  றென்உயிரில்  கலந்து  வாழும்  கள்வர்அவர் 
நண்ணார்  இன்னும்  திருஅனையாய்  நான்சென்  றிடினும்  நலம்அருள 
எண்ணார்  ஆயின்  என்செய்வேன்  என்னை  மடவார்  இகழாரோ. 
3
ஊர்என்  றுடையீர்  ஒற்றிதனை  உலக  முடையீர்  என்னைஅணை 
வீர்என்  றவர்முன்  பலர்அறிய  வெட்கம்  விடுத்துக்  கேட்டாலும் 
சேர்என்  றுரைத்தால்  அன்றிஅவர்  சிரித்துத்  திருவாய்  மலர்ந்தெனைநீ 
யார்என்  றுரைத்தால்  என்செய்வேன்  என்னை  மடவார்  இகழாரோ. 
4
சோமன்  நிலவுந்  தூய்ச்சடையார்  சொல்லிற்  கலந்த  சுவையானார் 
சேமம்  நிலவுந்  திருஒற்றித்  தேவர்  இன்னும்  சேர்ந்திலர்நான் 
தாமம்  அருள்வீர்  என்கினும்இத்  தருணத்  திசையா  தென்பாரேல் 
ஏம  முலையாய்  என்செய்வேன்  என்னை  மடவார்  இகழாரோ. 
5
வில்லை  மலையாய்க்  கைக்கொண்டார்  விடஞ்சூழ்  கண்டர்  விரிபொழில்சூழ் 
தில்லை  நகரார்  ஒற்றியுளார்  சேர்ந்தார்  அல்லர்  நான்அவர்பால் 
ஒல்லை  அடைந்து  நின்றாலும்  உன்னை  அணைதல்  ஒருபோதும் 
இல்லை  எனிலோ  என்செய்கேன்  என்னை  மடவார்  இகழாரோ. 
6
திருந்தால்  அமர்ந்தார்  திருப்புலியூர்ச்  சிற்றம்  பலத்தில்  திருநடம்செய் 
மருந்தார்  ஒற்றி  வாணர்இன்னும்  வந்தார்  அல்லர்  நான்போய்என் 
அருந்தாழ்  வகல  அருள்வீரென்  றாலும்  ஒன்றும்  அறியார்போல் 
இருந்தால்  அம்மா  என்செய்வேன்  என்னை  மடவார்  இகழாரோ. 
7
அசையா  தமர்ந்தும்  அண்டமெலாம்  அசையப்  புலியூர்  அம்பலத்தே 
நசையா  நடிக்கும்  நாதர்ஒற்றி  நாட்டார்  இன்னும்  நண்ணிலர்நான் 
இசையால்  சென்றிங்  கென்னைஅணை  வீர்என்  றுரைப்பேன்  எனில்அதற்கும் 
இசையார்  ஆகில்  என்செய்கேன்  என்னை  மடவார்  இகழாரோ. 
8
மாற்கா  தலிக்கும்  மலர்அடியார்  மாசற்  றிலங்கும்  மணிஅனையார் 
சேற்கா  தலிக்கும்  வயல்வளஞ்சூழ்  திருவாழ்  ஒற்றித்  தேவர்அவர் 
பாற்கா  தலித்துச்  சென்றாலும்  பாவி  அடிநீ  யான்அணைதற் 
கேற்காய்  என்றால்  என்செய்வேன்  என்னை  மடவார்  இகழாரோ. 
9
மாழை  மலையைச்  சிலையாக  வளைத்தார்  அன்பர்  தமைவருத்தும் 
ஊழை  அழிப்பார்  திருஒற்றி  ஊரார்  இன்னும்  உற்றிலர்என் 
பாழை  அகற்ற  நான்செலினும்  பாரா  திருந்தால்  பைங்கொடியே 
ஏழை  அடிநான்  என்செய்வேன்  என்னை  மடவார்  இகழாரோ. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com