திருவருட்பா  19. காதல் மாட்சி

திடனான்  மறையார்  திருஒற்றித்  தியாகர்  அவர்தம்  பவனிதனை 
மடனா  மகன்று  காணவந்தால்  மலர்க்கை  வளைக  ளினைக்கவர்ந்து 
படனா  கணியர்  நமைத்திரும்பிப்  பாரா  தோடு  கின்றார்நாம் 
உடனா  ஓடி  னாலும்அவர்  ஓட்டம்  பிடிக்க  ஒண்ணாதே. 
1
தக்க  வளஞ்சேர்  ஒற்றியில்வாழ்  தம்பி  ரானார்  பவனிதனைத் 
துக்கம்  அகன்று  காணவந்தால்  துகிலைக்  கவர்ந்து  துணிவுகொண்டே 
பக்க  மருவும்  நமைத்திரும்பிப்  பாரா  தோடு  கின்றார்நாம் 
ஒக்க  ஓடி  னாலும்அவர்  ஓட்டம்  பிடிக்க  ஒண்ணாதே. 
2
தாயாய்  அளிக்குந்  திருஒற்றித்  தலத்தார்  தமது  பவனிதனை 
மாயா  நலத்தில்  காணவந்தால்  மருவும்  நமது  மனங்கவர்ந்து 
பாயா  விரைவில்  நமைத்திரும்பிப்  பாரா  தோடு  கின்றார்நாம் 
ஓயா  தோடி  னாலும்அவர்  ஓட்டம்  பிடிக்க  ஒண்ணாதே. 
3
நிலவார்  சடையார்  திருஒற்றி  நிருத்தர்  பவனி  தனைக்காண 
நலவா  தரவின்  வந்துநின்றால்  நங்காய்  எனது  நாண்கவர்ந்து 
பலவா  தரவால்  நமைத்திரும்பிப்  பாரா  தோடு  கின்றார்நாம் 
உலவா  தோடி  னாலும்அவர்  ஓட்டம்  பிடிக்க  ஒண்ணாதே. 
4
நாடார்  வளங்கொள்  ஒற்றிநகர்  நாதர்  பவனி  தனைக்காண 
நீடா  சையினால்  வந்துவந்து  நின்றால்  நமது  நிறைகவர்ந்து 
பாடார்  வலராம்  நமைத்திரும்பிப்  பாரா  தோடு  கின்றார்நாம் 
ஓடா  தோடி  னாலும்அவர்  ஓட்டம்  பிடிக்க  ஒண்ணாதே. 
5
அழியா  வளத்தார்  திருஒற்றி  ஐயர்  பவனி  தனைக்காண 
இழியா  மகிழ்வி  னொடும்வந்தால்  என்னே  பெண்ணே  எழில்கவர்ந்து 
பழியா  எழிலின்  நமைத்திரும்பிப்  பாரா  தோடு  கின்றார்நாம் 
ஒழியா  தோடி  னாலும்அவர்  ஓட்டம்  பிடிக்க  ஒண்ணாதே. 
6
திரையார்  ஓதை  ஒற்றியில்வாழ்  தியாக  ரவர்தம்  பவனிதனைக் 
கரையா  மகிழ்விற்  காணவந்தால்  கற்பின்  நலத்தைக்  கவர்ந்துகொண்டு 
பரையா  தரிக்க  நமைத்திரும்பிப்  பாரா  தோடு  கின்றார்நாம் 
உரையா  தோடி  னாலும்அவர்  ஓட்டம்  பிடிக்க  ஒண்ணாதே. 
7
கடுக்கா  தலித்தார்  திருஒற்றிக்  காளை  அவர்தம்  பவனிதனை 
விடுக்கா  மகிழ்விற்  காணவந்தால்  விரியும்  நமது  வினைகவர்ந்து 
படுக்கா  மதிப்பின்  நமைத்திரும்பிப்  பாரா  தோடு  கின்றார்நாம் 
உடுக்கா  தோடி  னாலும்அவர்  ஓட்டம்  பிடிக்க  ஒண்ணாதே. 
8
தில்லை  உடையார்  திருஒற்றித்  தியாகர்  அவர்  பவனிதனைக் 
கல்லை  உருக்கிக்  காணவந்தால்  கரணம்  நமது  கரந்திரவி 
பல்லை  இறுத்தார்  நமைத்திரும்பிப்  பாரா  தோடு  கின்றார்நாம் 
ஒல்லை  ஓடி  னாலும்அவர்  ஓட்டம்  பிடிக்க  ஒண்ணாதே. 
9
மடையார்  வாளை  வயல்ஒற்றி  வள்ளல்  பவனி  தனைக்காண 
அடையா  மகிழ்வி  னொடும்வந்தால்  அம்மா  நமது  விடயமெலாம் 
படையாற்  கவர்ந்து  நமைத்திரும்பிப்  பாரா  தோடு  கின்றார்நாம் 
உடையா  தோடி  னாலும்அவர்  ஓட்டம்  பிடிக்க  ஒண்ணாதே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com