திருவருட்பா  29. தவத்திறம் போற்றல்

வில்வத்  தொடும்பொன்  கொன்றைஅணி  வேணிப்  பெருமான்  ஒற்றிநகர் 
செல்வப்  பெருமான்  சிவபெருமான்  தியாகப்  பெருமான்  திருஅழகைக் 
கல்வைப்  புடைய  மனம்களிக்கக்  கண்கள்  களிக்கக்  கண்டுநின்றேன் 
இல்வைப்  புடையேன்  அம்மாநான்  என்ன  தவந்தான்  செய்தேனோ. 
1
கூடும்  படிமுன்  திருமாலும்  கோல  மாகிப்  புவி  இடந்து 
தேடும்  திருத்தாள்  சிவபெருமான்  தியாகப்  பெருமான்  திருப்பவனி 
நாடும்  புகழ்சேர்  ஒற்றிநகர்  நாடிப்  புகுந்து  கண்டேனால் 
ஈடும்  அகன்றேன்  அம்மாநான்  என்ன  தவந்தான்  செய்தேனோ. 
2
ஆர்க்கும்  கடற்கண்  அன்றெழுந்த  ஆல  காலம்  அத்தனையும் 
சேர்க்கும்  களத்தான்  சிவபெருமான்  தியாகப்  பெருமான்  திருநடத்தைக் 
கார்க்கண்  பொழில்சூழ்  ஒற்றியில்போய்க்  கண்டேன்  பிறவி  கண்டிலனே 
யார்க்கென்  றுரைப்பேன்  அம்மாநான்  என்ன  தவந்தான்  செய்தேனோ. 
3
உள்ளும்  புறமும்  நிறைந்தடியார்  உள்ளம்  மதுரித்  தூறுகின்ற 
தெள்ளும்  அமுதாம்  சிவபெருமான்  தியாகப்  பெருமான்  திருமுகத்தைக் 
கள்ளம்  தவிர்க்கும்  ஒற்றியில்போய்க்  கண்டேன்  பசியைக்  கண்டிலனே 
எள்ளல்  இகந்தேன்  அம்மாநான்  என்ன  தவந்தான்  செய்தேனோ. 
4
ஆவல்  உடையார்  உள்ளுடையார்  அயன்மால்  மகவான்  ஆதியராம் 
தேவர்  பெருமான்  சிவபெருமான்  தியாகப்  பெருமான்  திருவடிவைக் 
காவம்  பொழில்சூழ்  ஒற்றியில்போய்க்  கண்டேன்  கண்ட  காட்சிதனை 
யாவர்  பெறுவார்  அம்மாநான்  என்ன  தவந்தான்  செய்தேனோ. 
5
மறப்பை  அகன்ற  மனத்துரவோர்  வாழ்த்த  அவர்க்கு  வான்கதியின் 
சிறப்பை  அளிக்கும்  சிவபெருமான்  தியாகப்  பெருமான்  திருநடத்தைப் 
பிறப்பை  அகற்றும்  ஒற்றியில்போய்ப்  பேரா  னந்தம்  பெறக்கண்டேன் 
இறப்பைத்  தவிர்த்தேன்  அம்மாநான்  என்ன  தவந்தான்  செய்தேனோ. 
6
வில்லாம்  படிப்பொன்  மேருவினை  விரைய  வாங்கும்  வெற்றியினான் 
செல்லாம்  கருணைச்  சிவபெருமான்  தியாகப்  பெருமான்  திருகூத்தைக் 
கல்லாம்  கொடிய  மனம்கரையக்  கண்டேன்  பண்டு  காணாத 
எல்லாம்  கண்டேன்  அம்மாநான்  என்ன  தவந்தான்  செய்தேனோ. 
7
ஒல்லை  எயில்மூன்  றெரிகொளுவ  உற்று  நகைத்தோன்  ஒற்றியுளான் 
தில்லை  நகரான்  சிவபெருமான்  தியாகப்  பெருமான்  திருப்பவனி 
கல்லை  அளியும்  கனியாக்கக்  கண்டேன்  கொண்ட  களிப்பினுக்கோர் 
எல்லை  அறியேன்  அம்மாநான்  என்ன  தவந்தான்  செய்தேனோ. 
8
துன்னும்  சோம  சுந்தரனார்  தூய  மதுரை  நகர்அளித்த 
தென்னர்  பெருமான்  சிவபெருமான்  தியாகப்  பெருமான்  திருஅழகைப் 
பன்னும்  ஒற்றி  நகர்தன்னில்  பார்த்தேன்  வினைபோம்  வழிபார்த்த 
என்னை  மறந்தேன்  அம்மாநான்  என்ன  தவந்தான்  செய்தேனோ. 
9
முன்னம்  காழி  வள்ளலுக்கு  முத்துச்  சிவிகை  குடையொடுபொன் 
சின்னம்  அளித்தோன்  சிவபெருமான்  தியாகப்  பெருமான்  திருவடியைக் 
கன்னின்  றுருகா  நெஞ்சுருகக்  கண்டேன்  கண்ட  காட்சிதனை 
என்என்  றுரைப்பேன்  அம்மாநான்  என்ன  தவந்தான்  செய்தேனோ. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com