
ஒற்றி மேவிய உத்தம னேமணித்
தெற்றி மேவிய தில்லையப் பாவிழி
நெற்றி மேவிய நின்மல னேஉனைப்
பற்றி மேவிய நெஞ்சம்உன் பாலதே.
பாலின் நீற்றுப் பரஞ்சுட ரேமலர்க்
காலின் ஈற்றுக் கதிபெற ஏழையேன்
மாலின் ஈற்று மயக்கறல் என்றுகல்
ஆலின் ஈற்றுப் பொருள்அருள் ஆதியே.
ஆதி யேதில்லை அம்பலத் தாடல்செய்
சோதி யேதிருத் தோணிபு ரத்தனே
ஓதி யேதரும் ஒற்றியப் பாஇது
நீதி யேஎனை நீமரு வாததே.
வாதம் ஓதிய வஞ்சரைக் காணில்ஓர்
காதம் ஓடும் கடியனை ஆள்வது
நீத மோஅன்றி நேரும்அ நீதமோ
ஓதம் ஓதொலி ஒற்றித்த லத்தனே.
தலத்த னேதில்லைச் சங்கர னேதலைக்
கலத்த னேநெற்றிக் கண்ணுடை யாளனே
நலத்த னேஒற்றி நாயக னேஇந்த
மலத்த னேனையும் வாழ்வித்தல் மாண்பதே.
மாண்கொள் அம்பல மாணிக்க மேவிடம்
ஊண்கொள் கண்டத்தெம் ஒற்றியப் பாஉன்தன்
ஏண்கொள் சேவடி இன்புகழ் ஏத்திடாக்
கோண்கொள் நெஞ்சக் கொடியனும் உய்வனே.
உய்யும் வண்ணம்இங் குன்அருள் எய்தநான்
செய்யும் வண்ணம்தெ ரிந்திலன் செல்வமே
பெய்யும் வண்ணப்பெ ருமுகி லேபுரம்
எய்யும் வண்ணம்எ ரித்தருள் எந்தையே.
எந்தை யேதில்லை எம்இறை யேகுகன்
தந்தை யேஒற்றித் தண்அமு தேஎன்தன்
முந்தை ஏழ்பவ மூடம யக்கறச்
சிந்தை ஏதம்தி ருந்தஅ ருள்வையே.
திருந்த நான்மறைத் தில்லைச்சிற் றம்பலத்
திருந்த ஞானஇ யல்ஒளி யேஒற்றிப்
பொருந்த நின்றருள் புண்ணிய மேஇங்கு
வருந்த என்தனை வைத்தத ழகதோ.
வைத்த நின்அருள் வாழிய வாழிய
மெய்த்த தில்லையின் மேவிய இன்பமே
உய்த்த நல்அருள் ஒற்றியப் பாஎனைப்
பொய்த்த சிந்தைவிட் டுன்தனைப் போற்றவே.
போற்ற வைத்தனை புண்ணிய னேஎனைச்
சாற்ற வைத்தனை நின்புகழ்த் தன்மையைத்
தேற்ற வைத்தனை நெஞ்சைத்தெ ளிந்தன்பை
ஊற்ற வைத்தனை உன்ஒற்றி மேவியே.



