திருவருட்பா  27. சிவானந்தப் பத்து

இச்சை  உண்டெனக்  குன்திரு  மலர்த்தாள் 
எய்தும்  வண்ணம்இங்  கென்செய  வல்லேன் 
கொச்சை  நெஞ்சம்என்  குறிப்பில்நில்  லாது 
குதிப்பில்  நின்றது  மதிப்பின்இவ்  வுலகில் 
பிச்சை  உண்டெனிற்  பிச்சரிற்  சீறும் 
பேய  ருண்மனை  நாயென  உழைத்தேன் 
செச்சை  மேனிஎம்  திருவொற்றி  அரசே 
தில்லை  ஓங்கிய  சிவானந்தத்  தேனே. 
1
ஐய  நின்னுடை  அன்பர்கள்  எல்லாம் 
அழிவில்  இன்பமுற்  றருகிருக்  கின்றார் 
வெய்ய  நெஞ்சகப்  பாவியேன்  கொடிய 
வீண  னேன்இங்கு  வீழ்கதிக்  கிடமாய் 
வைய  வாழ்க்கையின்  மயங்குகின்  றனன்மேல் 
வருவ  தோர்ந்திலன்  வாழ்வடை  வேனோ 
செய்ய  வண்ணனே  ஒற்றியம்  பொருளே 
தில்லை  ஓங்கிய  சிவானந்தத்  தேனே. 
2
மடிகொள்  நெஞ்சினால்  வள்ளல்உன்  மலர்த்தாள் 
மறந்து  வஞ்சக  வாழ்க்கையை  மதித்தேன் 
துடிகொள்  நேர்இடை  மடவியர்க்  குருகிச் 
சுழல்கின்  றேன்அருள்  சுகம்பெறு  வேனோ 
வடிகொள்  வேல்கரத்  தண்ணலை  ஈன்ற 
வள்ள  லேஎன  வாழ்த்துகின்  றவர்தம் 
செடிகள்  நீக்கிய  ஒற்றியம்  பரனே 
தில்லை  ஓங்கிய  சிவானந்தத்  தேனே. 
3
இருக்க  வாவுற  உலகெலாம்  உய்ய 
எடுத்த  சேவடிக்  கெள்ளள  வேனும் 
உருக்கம்  ஒன்றிலேன்  ஒதியினில்  பெரியேன் 
ஒண்மை  எய்துதல்  வெண்மைமற்  றன்றே 
தருக்க  நின்றஎன்  தன்மையை  நினைக்கில் 
தமிய  னேனுக்கே  தலைநடுக்  குறுங்காண் 
திருக்கண்  மூன்றுடை  ஒற்றிஎம்  பொருளே 
தில்லை  ஓங்கிய  சிவானந்தத்  தேனே. 
4
எண்பெ  றாவினைக்  கேதுசெய்  உடலை 
எடுத்த  நாள்முதல்  இந்தநாள்  வரைக்கும் 
நண்பு  றாப்பவம்  இயற்றினன்  அல்லால் 
நன்மை  என்பதோர்  நாளினும்  அறியேன் 
வண்பெ  றாவெனக்  குன்திரு  அருளாம் 
வாழ்வு  நேர்ந்திடும்  வகைஎந்த  வகையோ 
திண்பெ  றாநிற்க  அருள்ஒற்றி  அமுதே 
தில்லை  ஓங்கிய  சிவானந்தத்  தேனே. 
5
பேதை  நெஞ்சினேன்  செய்பிழை  எல்லாம் 
பேசி  னால்பெரும்  பிணக்கினுக்  கிடமாம் 
தாதை  நீஅவை  எண்ணலை  எளியேன் 
தனக்கு  நின்திருத்  தண்அளி  புரிவாய் 
கோதை  நீக்கிய  முனிவர்கள்  காணக் 
கூத்து  கந்தருள்  குணப்பெருங்  குன்றே 
தீதை  நீக்கிய  ஒற்றிஎம்  பெருமான் 
தில்லை  ஓங்கிய  சிவானந்தத்  தேனே. 
6
வஞ்ச  நெஞ்சர்தம்  சேர்க்கையைத்  துறந்து 
வள்ளல்  உன்திரு  மலரடி  ஏத்தி 
விஞ்சு  நெஞ்சர்தம்  அடித்துணைக்  கேவல் 
விரும்பி  நிற்கும்அப்  பெரும்பயன்  பெறவே 
தஞ்சம்  என்றருள்  நின்திருக்  கோயில் 
சார்ந்து  நின்றனன்  தருதல்மற்  றின்றோ 
செஞ்சொல்  ஓங்கிய  ஒற்றிஎம்  பெருமான் 
தில்லை  ஓங்கிய  சிவானந்தத்  தேனே. 
7
புல்ல  னேன்புவி  நடையிடை  அலையும் 
புலைய  நெஞ்சினால்  பொருந்திடும்  கொடிய 
அல்லல்  என்பதற்  கெல்லைஒன்  றறியேன் 
அருந்து  கின்றனன்  விருந்தினன்  ஆகி 
ஒல்லை  உன்திருக்  கோயில்முன்  அடுத்தேன் 
உத்த  மாஉன்தன்  உள்ளம்இங்  கறியேன் 
செல்லல்  நீக்கிய  ஒற்றியம்  பொருளே 
தில்லை  ஓங்கிய  சிவானந்தத்  தேனே. 
8
எளிய  னேன்பிழை  இயற்றிய  எல்லாம் 
எண்ணி  னுட்படா  வேனும்மற்  றவையை 
அளிய  நல்லருள்  ஈந்திடும்  பொருட்டால் 
ஆய்தல்  நன்றல  ஆதலின்  ஈண்டே 
களிய  நெஞ்சமாம்  கருங்கலைக்  கரைத்துக் 
கருணை  ஈகுதல்  கடன்உனக்  கையா 
தெளிய  ஓங்கிய  ஒற்றிஎன்  அமுதே 
தில்லை  ஓங்கிய  சிவானந்தத்  தேனே. 
9
வெறிபி  டிக்கினும்  மகன்தனைப்  பெற்றோர் 
விடுத்தி  டார்அந்த  வெறியது  தீரும் 
நெறிபி  டித்துநின்  றாய்வரென்  அரசே 
நீயும்  அப்படி  நீசனேன்  தனக்குப் 
பொறிபி  டித்தநல்  போதகம்  அருளிப் 
புன்மை  யாவையும்  போக்கிடல்  வேண்டும் 
செறிபி  டித்தவான்  பொழில்ஒற்றி  அமுதே 
தில்லை  ஓங்கிய  சிவானந்தத்  தேனே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com