
கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு
கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு
ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு
ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு.
சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு
ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு
எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்.
மேருமலை உச்சியில்வி ளங்குகம்ப நீட்சி
மேவும்அதன் மேல்உலகில் வீறுமர சாட்சி
சேரும்அதில் கண்டபல காட்சிகள்கண் காட்சி
செப்பல்அரி தாம்இதற்கென் அப்பன்அருள் சாட்சி.
துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு
தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு
தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு
செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு.
சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது
தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது
எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது
இறந்தார்எழுவாரென்றுபுறந்தாரைஊது.
சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு
சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு
இற்பகரும் இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு
என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
வலதுசொன்ன பேர்களுக்கு வந்ததுவாய்த் தாழ்வு
மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்ததலைத் தாழ்வு
வலதுபுஜம் ஆடநம்பால் வந்ததருள் வாழ்வு
மற்றுநமைச் சூழ்ந்தவர்க்கும் வந்ததுநல் வாழ்வு.
அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம்
அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம்
வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம்
வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம்.
நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு
நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு
சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு
செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு.



