
அம்பலவர் வந்தார்என்று சின்னம் பிடி
அற்புதம்செய் கின்றார்என்று சின்னம் பிடி
செம்பலன் அளித்தார்என்று சின்னம் பிடி
சித்திநிலை பெற்றதென்று சின்னம் பிடி.
சிற்சபையைக் கண்டோம்என்று சின்னம் பிடி
சித்திகள்செய் கின்றோம்என்று சின்னம் பிடி
பொற்சபை புகுந்தோம்என்று சின்னம் பிடி
புந்திமகிழ் கின்றோம்என்று சின்னம் பிடி.
ஞானசித்திபுரம்என்று சின்னம் பிடி
நாடகம்செய் இடம்என்று சின்னம் பிடி
ஆனசித்தி செய்வோம்என்று சின்னம் பிடி
அருட்சோதி பெற்றோம்என்று சின்னம் பிடி.
கொடிகட்டிக்கொண்டோம்என்று சின்னம் பிடி
கூத்தாடு கின்றோம்என்று சின்னம் பிடி
அடிமுடியைக் கண்டோம்என்று சின்னம் பிடி
அருளமுதம் உண்டோம்என்று சின்னம் பிடி.
அப்பர்வரு கின்றார்என்று சின்னம் பிடி
அற்புதம்செய் வதற்கென்று சின்னம் பிடி
செப்பநிலை பெற்றதென்று சின்னம் பிடி
சித்திபுரம்இடமென்று சின்னம் பிடி.
தானேநான் ஆனேன்என்று சின்னம் பிடி
சத்தியம்சத் தியம்என்று சின்னம் பிடி
ஊனே புகுந்ததென்று சின்னம் பிடி
ஒளிவண்ணம் ஆனதென்று சின்னம் பிடி.
வேகாதகால்உணர்ந்து சின்னம் பிடி
வேகாத நடுத்தெரிந்து சின்னம் பிடி
சாகாததலைஅறிந்து சின்னம் பிடி
சாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி.
மீதான நிலைஏறிச் சின்னம் பிடி
வெட்டவெளி நடுநின்று சின்னம் பிடி
வேதாக மம்கடந்து சின்னம் பிடி
வேதாந்தச் சித்தாந்த சின்னம் பிடி.
பன்மார்க்க மும்கடந்து சின்னம் பிடி
பன்னிரண்டின் மீதுநின்று சின்னம் பிடி
சன்மார்க்கம் மார்க்கம்என்று சின்னம் பிடி
சத்தியம்செய் கின்றோம்என்று சின்னம் பிடி.
சித்தாடு கின்றார்என்று சின்னம் பிடி
செத்தார் எழுவார்என்று சின்னம் பிடி
இத்தா ரணியில்என்று சின்னம் பிடி
இதுவே தருணம்என்று சின்னம் பிடி.



