
என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான்
என்ன புண்ணியம் செய்தே னோ.
மன்னர்நாதர் அம்பலவர் வந்தார்வந்தார் என்றுதிருச்
சின்னநாதம் என்னிரண்டு செவிகளினுள் சொல்கின்றதே. என்ன
பொருள்நான் முகனுமாலும் தெருள்நான்ம றையுநாளும்
போற்றும்சிற் றம்பலத்தே ஏற்றும ணிவிளக்காய்
அருள்நாட கம்புரியும் கருணாநி தியர்உன்னை
ஆளவந்தார் வந்தார்என்றெக் காளநாதம் சொல்கின்றதே. என்ன
பாடியநல் லோர்தமக்கே நாடியதெல் லாம்அளிப்பார்
பத்திவலை யுட்படுவார் சத்தியர்நித் தியர்மன்றில்
ஆடியபொற் பாதர்வேதம் தேடியசிற் போதர்உன்னை
அணையவந்தார் வந்தார்என்றே இணையில்நாதம் சொல்கின்றதே. என்ன
எந்தரமுட் கொண்டஞான சுந்தரர்என் மணவாளர்
எல்லாம்செய் வல்லசித்தர் நல்லோர் உளத்தமர்ந்தார்
மந்திரமா மன்றில்இன்பம் தந்தநட ராஜர்உன்னை
மருவவந்தார் வந்தார்என்று தெருவில்நாதம் சொல்கின்றதே. என்ன
ஓதிஎந்த விதத்தாலும் வேதியனும் தேர்வரியார்
ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார்
ஆதியந்தம் காண்பரிய ஜோதிசுயஞ் ஜோதிஉன்னோ
டாடவந்தார் வந்தார்என்றே நாடிநாதம் சொல்கின்றதே. என்ன
அற்புதப்பே ரழகாளர் சொற்பதம் கடந்துநின்றார்
அன்பரெலாம் தொழமன்றில் இன்பநடம் புரிகின்றார்
சிற்பரர்எல் லாமும்வல்ல தற்பரர் விரைந்திங்குன்னைச்
சேரவந்தார் வந்தார்என்றோங் காரநாதம் சொல்கின்றதே. என்ன
ஆரணர்நா ரணர்எல்லாம் பூரணர்என் றேத்துகின்ற
ஐயர்திரு வம்பலவர் மெய்யர்எல்லாம் வல்லசித்தர்
காரணமும் காரியமும் தாரணிநீ யாகஉன்னைக்
காணவந்தார் வந்தார்என்றே வேணுநாதம் சொல்கின்றதே. என்ன
பாகார்மொழி யாள்சிவ மாகாம வல்லிநாளும்
பார்த்தாட மணிமன்றில் கூத்தாடு கின்றசித்தர்
வாகாஉனக்கே என்றும் சாகா வரங்கொடுக்க
வலியவந்தார் வந்தார்என்றே வலியநாதம் சொல்கின்றதே.
என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான்
என்ன புண்ணியம் செய்தே னோ.



