திருவருட்பா  121. இது நல்ல தருணம்

இதுநல்ல  தருணம்  -  அருள்செய்ய 
இதுநல்ல  தருணம். 
1
பொதுநல்ல  நடம்வல்ல  புண்ணிய  ரேகேளும் 
பொய்யேதும்  சொல்கிலேன்  மெய்யே  புகல்கின்றேன்.  இதுநல்ல 
2
மதித்த  சமயமத  வழக்கெல்லா  மாய்ந்தது 
வருணாச்  சிரமம்எனு  மயக்கமும்  சாய்ந்தது 
கொதித்த  லோகாசாரக்  கொதிப்பெல்லாம்  ஒழிந்தது 
கொலையும்  களவுமற்றைப்  புலையும்  அழிந்தது.  இதுநல்ல 
3
குறித்த  வேதாகமக்  கூச்சலும்  அடங்கிற்று 
குதித்த  மனமுருட்டுக்  குரங்கு  முடங்கிற்று 
வெறித்தவெவ்  வினைகளும்  வெந்து  குலைந்தது 
விந்தைசெய்  கொடுமாயைச்  சந்தையும்  கலைந்தது.  இதுநல்ல 
4
கோபமும்  காமமும்  குடிகெட்டுப்  போயிற்று 
கொடியஓர்  ஆங்காரம்  பொடிப்பொடி  ஆயிற்று 
தாபமும்  சோபமும்  தான்தானே  சென்றது 
தத்துவம்  எல்லாம்என்  றன்வசம்  நின்றது.  இதுநல்ல 
5
கரையா  எனதுமனக்  கல்லும்  கரைந்தது 
கலந்து  கொளற்கென்  கருத்தும்  விரைந்தது 
புரையா  நிலையில்என்  புந்தியும்  தங்கிற்று 
பொய்படாக்  காதல்  ததும்பிமேல்  பொங்கிற்று. 
6
இதுநல்ல  தருணம்  -  அருள்செய்ய 
இதுநல்ல  தருணம். 
7

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com