திருவருட்பா  81. திருவடிக் கண்ணி

மின்னிடையாள்  காண  விளங்குமன்றி  லாடுகின்றாய் 
என்னுடையா  யுன்ற  னிணையடிதான்  நோவாதா. 
1
வன்னமுதே  யின்ப  மலியமன்றி  லாடுகின்றாய் 
என்னமுதே  யுன்ற  னிணையடிதான்  நோவாதா. 
2
நண்ணியமெய்  யன்பர்  நயக்கமன்றி  லாடுகின்றாய் 
புண்ணியனே  யுன்றனது  பொன்னடிதான்  நோவாதா. 
3
அன்பரின்பங்  கொள்ளநட  மம்பலத்தே  யாடுகின்றாய் 
இன்புருவா  முன்ற  னிணையடிதான்  நோவாதா. 
4
நூலுணர்வா  நுண்ணுணர்வி  னோக்கநட  மாடுகின்றாய் 
மாலறியா  வுன்றன்  மலர்ப்பாதம்  நோவாதா. 
5
எள்ளலற  வம்பலத்தே  யின்பநட  மாடுகின்றாய் 
வள்ளலே  யுன்றன்  மலரடிதான்  நோவாதா. 
6
சைவ  நிலைத்துத்  தழைத்தோங்க  வாடுகின்றாய் 
தெய்வ  மணியே  திருவடிதான்  நோவாதா. 
7
எல்லாரு  மின்புற்  றிருக்கநட  மாடுகின்றாய் 
வல்லாரின்  வல்லாய்  மலர்ப்பாதம்  நோவாதா. 
8
அவமே  கழிந்தின்ப  மன்பர்கொள  வாடுகின்றாய் 
சிவமே  நினது  திருவடிதான்  நோவாதா. 
9
தற்பரமா  மன்றிற்  றனிநடன  மாடுகின்றாய் 
சிற்பரமே  யுன்றன்  திருமேனி  நோவாதா. 
10
வில்வவேர்  மாலை  மிளிர்ந்தசைய  வாடுகின்றாய் 
செல்வமே  யுன்றன்  திருமேனி  நோவாதா. 
11

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com