திருவருட்பா  63. வீரராகவர் போற்றிப் பஞ்சகம்

தண்ணமர்  மதிபோல்  சாந்தந்  தழைத்தசத்  துவனே  போற்றி 
வண்ணமா  மணியே  போற்றி  மணிவண்ணத்  தேவா  போற்றி 
அண்ணலே  எவ்வு  ளூரில்  அமர்ந்தருள்  ஆதி  போற்றி 
விண்ணவர்  முதல்வா  போற்றி  வீரரா  கவனே  போற்றி. 
1
பாண்டவர்  தூத  னாகப்  பலித்தருள்  பரனே  போற்றி 
நீண்டவன்  என்ன  வேதம்  நிகழ்த்துமா  நிதியே  போற்றி 
தூண்டலில்  லாமல்  ஓங்குஞ்  ஜோதிநல்  விளக்கே  போற்றி 
வேண்டவர்  எவ்வு  ளூர்வாழ்  வீரரா  கவனே  போற்றி. 
2
மேதினி  புரக்கும்  வேந்தர்  வீறெலாம்  நினதே  போற்றி 
கோதிலா  மனத்தே  நின்று  குலாவிய  கோவே  போற்றி 
ஓதிய  எவ்வு  ளூரில்  உறைந்தருள்  புரிவாய்  போற்றி 
வேதியன்  தன்னை  ஈன்ற  வீரரா  கவனே  போற்றி. 
3
இளங்கொடி  தனைக்கொண்  டேகும்  இராவணன்  தனைய  ழித்தே 
களங்கமில்  விபீட  ணர்க்குக்  கனவர  சளித்தாய்  போற்றி 
துளங்குமா  தவத்தோர்  உற்ற  துயரெலாம்  தவிர்த்தாய்  போற்றி 
விளங்குநல்  எவ்வு  ளூர்வாழ்  வீரரா  கவனே  போற்றி. 
4
அற்புதத்  திருவை  மார்பில்  அணைத்தபே  ரழகா  போற்றி 
பொற்புறு  திகிரி  சங்கு  பொருந்துகைப்  புனிதா  போற்றி 
வற்புறு  பிணிதீர்த்  தென்னை  மகிழ்வித்த  வரதா  போற்றி 
வெற்புயர்  எவ்வு  ளூர்வாழ்  வீரரா  கவனே  போற்றி. 
5

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com