திருவருட்பா · 64இரேணுகை பஞ்சகம்

சீர்வளர் மதியும் திருவளர் வாழ்க்கைச் செல்வமும் கல்வியும் பொறையும்
பார்வளர் திறனும் பயன்வளர் பரிசும் பத்தியும் எனக்கருள் பரிந்தே
வார்வளர் தனத்தாய் மருவளர் குழலாய் மணிவளர் அணிமலர் முகத்தாய்
ஏர்வளர் குணத்தாய் இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
1
உவந்தொரு காசும் உதவிடாக் கொடிய உலுத்தர்தம் கடைதொறும்ஓடி
அவந்தனில் அலையா வகைஎனக் குன்தன் அகமலர்ந் தருளுதல் வேண்டும்
நவந்தரு மதிய நிவந்தபூங் கொடியே நலந்தரு நசைமணிக் கோவை
இவந்தொளிர் பசுந்தோள் இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
2
விருந்தினர் தம்மை உபசரித் திடவும் விரவுறும் உறவினர் மகிழத்
திருந்திய மனத்தால் நன்றிசெய் திடவும் சிறியனேற் கருளுதல் வேண்டும்
வருந்திவந் தடைந்தோர்க் கருள்செயும் கருணை வாரியே வடிவுறு மயிலே
இருந்திசை புகழும் இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
3
புண்ணியம் புரியும் புனிதர்தம் சார்பும் புத்திரர் மனைவியே முதலாய்
நண்ணிய குடும்ப நலம்பெறப் புரியும் நன்கும் எனக்கருள் புரிவாய்
விண்ணிய கதிரின் ஒளிசெயும் இழையாய் விளங்கருள் ஒழுகிய விழியாய்
எண்ணிய அடியர்க் கிசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
4
மனமெலி யாமல் பிணியடை யாமல் வஞ்சகர் தமைமரு வாமல்
சினநிலை யாமல் உடல்சலி யாமல் சிறியனேன் உறமகிழ்ந் தருள்வாய்
அனமகிழ் நடையாய் அணிதுடி இடையாய் அழகுசெய் காஞ்சன உடையாய்
இனமகிழ் சென்னை இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
5

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com