திருவருட்பா  51. தனித் திருத்தொடை

என்னிரு  கண்ணின்  மேவும்  இலங்கொளி  மணியே  போற்றி 
பன்னிரு  படைகொண்  டோங்கும்  பன்னிரு  கரத்தோய்  போற்றி 
மின்னிரு  நங்கை  மாருள்  மேவிய  மணாள  போற்றி 
நின்னிரு  பாதம்  போற்றி  நீள்வடி  வேல  போற்றி. 
1
.  மதிவளர்  சடைமுடி  மணிதரு  சுரர்முடி  மணிஎன்கோ 
பதிவளர்  சரவண  பவநவ  சிவகுரு  பதிஎன்கோ 
துதிவளர்  துணைஅடி  தொழும்அடி  யவர்பெறு  துணைஎன்கோ 
நிதிவளர்  பரசுக  நிலைபெறும்  நெறிதரு  நினையானே. 
2
முருகா  சரணம்  சரணம்என்  றுன்பதம்  முன்னிஉள்ளம் 
உருகாத  நாயனை  யேற்குநின்  தண்ணருள்  உண்டுகொலோ 
அருகாத  பாற்கடல்  மீதே  அனந்தல்  அமர்ந்தவன்றன் 
மருகாமுக்  கண்ணவன்  மைந்தா  எழில்மயில்  வாகனனே. 
3
உலகம்  பரவும்  ஒருமுதல்வா  தெய்வத் 
திலகம்  திகழிடத்துத்  தேவே-இலகுதிருப் 
புள்ளிருக்கு  வேளுர்ப்  புனிதா  அடியேன்றன் 
உள்ளிருக்கும்  துன்பை  ஒழி. 
4
செக்கச்  சிவந்தே  திகழ்ஒருபால்  பச்சையதாய் 
அக்கட்  பரிதிபுரத்  தார்ந்தோங்கும்-முக்கண் 
குழைக்கரும்பீன்  முத்துக்  குமார  மணியேஎன் 
பிழைக்கிரங்கி  ஆளுதியோ  பேசு. 
5
திருமாலைப்  பணிகொண்டு  திகிரிகொண்ட  தாருகனைச்  செறித்து  வாகைப் 
பெருமாலை  அணிதிணிதோள்  பெருமானே  ஒருமான்றன்  பெண்மேற்  காமர் 
வருமாலை  உடையவர்போல்  மணமாலை  புனைந்தமுழு  மணியே  முக்கட் 
குருமாலைப்  பொருள்உரைத்த  குமாரகுரு  வேபரம  குருவே  போற்றி. 
6
தோடேந்து  கடப்பமலர்த்  தொடையொடு  செங்குவளை  மலர்த்தொடையும்  வேய்ந்து 
பாடேந்தும்  அறிஞர்தமிழ்ப்  பாவொடுநா  யடியேன்சொற்  பாவும்  ஏற்றுப் 
பீடேந்தும்  இருமடவார்  பெட்பொடும்ஆங்  கவர்கண்முலைப்  பெரிய  யானைக் 
கோடேந்தும்  அணிநெடுந்தோட்  குமாரகுரு  வேபரம  குருவே  போற்றி. 
7
நீர்வேய்ந்த  சடைமுடித்துத்  தோலுடுத்து  நீறணிந்து  நிலவுங்  கொன்றைத் 
தார்வேய்ந்து  விடங்கலந்த  களங்காட்டி  நுதலிடைஓர்  தழற்கண்  காட்டிப் 
பேர்வேய்ந்த  மணிமன்றில்  ஆடுகின்ற  பெரும்பித்தப்  பெருமான்  ஈன்ற 
கூர்வேய்ந்த  வேல்அணிதோள்  குமாரகுரு  வேபரம  குருவே  போற்றி. 
8
பெண்குணத்தில்  கடைப்படும்  ஓர்  பேய்க்குணங்கொள் 
நாயேன்றன்  பிழைகள்  எல்லாம் 
எண்குணப்பொற்  குன்றேநின்  திருஉளத்தில் 
சிறிதேனும்  எண்ணேல்  கண்டாய் 
பண்குணத்தில்  சிறந்திடும்நின்  பத்தர்தமைப் 
புரப்பதுபோல்  பாவி  யேனை 
வண்குணத்தில்  புரத்தியிலை  யேனும்எனைக் 
கைவிடேல்  வடிவே  லோனே. 
9
சத்திவேல்  கரத்தநின்  சரணம்  போற்றிமெய்ப் 
பத்தியோ  டருச்சனை  பயிலும்  பண்பினால் 
முத்திசார்  குவர்என  மொழிதல்  கேட்டுநல் 
புத்தியோ  டுன்பதம்  புகழ்வர்  புண்ணியர். 
10
தேனே  அமுதே  சிவமே  தவமே  தெளிவேஎங் 
கோனே  குருவே  குலமே  குணமே  குகனேயோ 
வானே  வளியே  அனலே  புனலே  மலையேஎன் 
ஊனே  உயிரே  உணர்வே  எனதுள்  உறைவானே. 
11
ஆறுமு  கங்கொண்ட  ஐயாஎன்  துன்பம்  அனைத்தும்இன்னும் 
ஏறுமு  கங்கொண்ட  தல்லால்  இறங்குமு  கம்இலையால் 
வீறுமு  கங்கொண்ட  கைவேலின்  வீரம்  விளங்கஎன்னைச் 
சீறுமு  கங்கொண்ட  அத்துன்பம்  ஓடச்  செலுத்துகவே. 
12
பண்கொண்ட  சண்முகத்  தையா  அருள்மிகும்  பன்னிரண்டு 
கண்கொண்ட  நீசற்றுங்  கண்டிலை  யோஎன்  கவலைவெள்ளம் 
திண்கொண்ட  எட்டுத்  திசைகொண்டு  நீள்சத்த  தீவுங்கொண்டு 
மண்கொண்டு  விண்கொண்டு  பாதாளங்  கொண்டு  வளர்கின்றதே. 
13
வன்குலஞ்  சேர்கடன்  மாமுதல்  வேர்அற  மாட்டிவண்மை 
நன்குலஞ்  சேர்விண்  நகர்அளித்  தோய்அன்று  நண்ணிஎன்னை 
நின்குலஞ்  சேர்த்தனை  இன்றுவி  டேல்உளம்  நேர்ந்துகொண்டு 
பின்குலம்  பேசுகின்  றாரும்உண்  டோஇப்  பெருநிலத்தே. 
14
திருமால்  ஆதியர்  உள்ளம்  கொள்ளும்ஓர்  செவ்விய  வேலோனே 
குருமா  மணியே  குணமணி  யேசுரர்  கோவே  மேலோனே 
கருமா  மலம்அறு  வண்ணம்  தண்அளி  கண்டே  கொண்டேனே 
கதியே  பதியே  கனநிதி  யேகற்  கண்டே  தண்தேனே 
அருமா  தவர்உயர்  நெஞ்சம்  விஞ்சிய  அண்ணா  விண்ணவனே 
அரசே  அமுதே  அறிவுரு  வேமுரு  கையா  மெய்யவனே 
உருவா  கியபவ  பந்தம்  சிந்திட  ஓதிய  வேதியனே 
ஒளியே  வெளியே  உலகமெ  லாம்  உடை  யோனே  வானவனே. 
15
கூழுக்  கழுவேனோ  கோத்தணிகைக்  கோவேஎன் 
ஊழுக்  கழுவேனோ  ஓயாத்  துயர்ப்பிறவி 
ஏழுக்  கழுவேனோ  என்செய்கேன்  என்செய்கேன் 
பாழுக்  கிறைத்தேன்ஈ  துன்செயலோ  பார்க்கும்இடம் 
16
சிந்தைக்  கும்வழி  இல்லைஉன்  தன்மையைத் 
தெரிதற்  கென்னும்  திருத்தணி  கேசனே 
உந்தைக்  கும்வழி  இல்லைஎன்  றால்இந்த 
உலகில்  யாவர்  உனைஅன்றி  நீர்மொள்ள 
மொந்தைக்  கும்வழி  இல்லை  வரத்திரு 
முண்டைக்  கும்வழி  இல்லை  அரையில்சாண் 
கந்தைக்  கும்வழி  இல்லை  அரகர 
கஞ்சிக்  கும்வழி  இல்லைஇங்  கையனே. 
17
கறிபிடித்த  ஊன்கடையில்  கண்டவர்தம்  கால்பிடித்துக்  கவ்வும்  பொல்லா 
வெறிபிடித்த  நாய்க்கேனும்  வித்தைபயிற்  றிடலாகும்  வேண்டி  வேண்டி 
மறிபிடித்த  சிறுவனைப்  போல்  வாத்தியார்  மனமறுகி  வருந்தத்  தங்கள் 
குறிபிடித்துக்  காட்டுவோர்க்  கியாவர்படிப்  பிக்கவலார்  குமர  வேளே. 
18
தாதாதா  தாதாதா  தாக்குறைக்கென்  செய்குதுமியாம் 
ஓதா  தவமே  யுழனெஞ்சே-மீதாத் 
ததிதி  யெனமயிலிற்  றானாடி  நாளுந் 
திதிதி  தருந்தணிகைத்  தே. 
19
ஓரிரண்டா  நற்றணிகை  உத்தமன்றன்  ஓங்கற்றோள் 
தாரிரண்டார்  போனின்ற  தையன்மீர்-வாரிரண்டாத் 
தொய்யி  லழிக்குந்  துணைமுலையா  ளுள்ளகத்தா 
மைய  லழிக்கு  மருந்து. 
20
ஏலுந்  தயங்கென்னு  மேவற்  கெதிர்மறைதான் 
ஆலுந்  தொழிற்கேவ  லாகுமோ-மாலுந்தி 
மாற்றுந்  தணிகையர்க்கு  மாமயின்மேல்  நாடோறுந் 
தோற்றுந்  தணிகையன்பொற்  றோள். 
21

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com