திருவருட்பா  49. இங்கிதப் பத்து

சீர்வளர்  குவளைத்  தார்வளர்  புயனார்  சிவனார்தம் 
பேர்வளர்  மகனார்  கார்வளர்  தணிகைப்  பெருமானார் 
ஏர்வளர்  மயில்மேல்  ஊர்வளர்  நியமத்  திடைவந்தால் 
வார்வளர்  முலையார்  ஆர்வளர்  கில்லார்  மயல்அம்மா. 
1
மந்தா  ரம்சேர்  பைம்பொழி  லின்கண்  மயிலேறி 
வந்தார்  அந்தோ  கண்டனன்  அங்கை  வளைகாணேன் 
சந்தா  ரம்சூழ்  தண்கிளர்  சாரல்  தணிகேசர் 
தந்தார்  என்பால்  தந்தார்  என்னைத்  தந்தாரே. 
2
நதியும்  மதியும்  பொதியும்  சடையார்  நவின்மாலும் 
விதியுந்  துதிஐம்  முகனார்  மகனார்  மிகுசீரும் 
நிதியும்  பதியும்  கதியும்  தருவார்  நெடுவேலார் 
வதியும்  மயின்மேல்  வருவார்  மலரே  வரும்ஆறே. 
3
சந்தார்  வரையுள்  சிந்தா  மணிநேர்  தணிகேசர் 
மந்தா  நிலம்மே  வுந்தார்  மறுகில்  மயிலேறி 
வந்தார்  நிலவோர்  செந்தா  மரையின்  மலர்வாசக் 
கொந்தார்  குழல்என்  நிலையுங்  கலையுங்  கொண்டாரே. 
4
தந்தே  நயமாம்  மாதவர்  புகழும்  தணிகேசர் 
சந்தே  னொழிவாய்  அந்தேன்  மொழியாய்  தனிஇன்று 
வந்தேன்  இனிமேல்  வாரேன்  என்றார்  மனமாழ்கி 
நொந்தேன்  முலைமீ  தவ்வுரை  என்றார்  நுவல்என்னே. 
5
தண்தணி  காந்தள்ஒர்  சண்பக  மலரின்  தளர்வெய்தத் 
தெண்டணி  நீலம்ஒர்  செங்குவ  ளையினிற்  றிகழ்வேன்பால் 
வண்டணி  கேசரும்  வந்தருள்  வாரோ  வாராரோ 
தொண்டணி  வீர்ஒரு  சோதிட  மேனும்  சொல்லீரே. 
6
காமலர்  நறவுக்  கேமலர்  மூவிரு  காலேநீ 
தேமலர்  தணிகைத்  தேவர்  மருங்கில்  சேர்வாயேல் 
ஆமல  ருடையாட்  கென்பெயர்  பலவாம்  அவையுள்ளே 
ஓமலர்  அடிகேள்  ஒன்றினை  ஒன்றென்  றுரையாயே. 
7
தேடுங்  கிளிநீ  நின்னை  விளம்பித்  திருஅன்னார் 
அடுந்  தணிகையில்  என்உயிர்  அன்னார்  அருகேபோய்க் 
கூடும்  தனமிசை  என்பெயர்  வைத்தக்  கோதைக்கே 
ஈடும்  கெடஇன்  றென்னையும்  ஈந்தருள்  என்பாயே. 
8
பொன்னை  இருத்தும்  பொன்மலர்  எகினப்  புள்ளேநீ 
அன்னை  இகழ்ந்தே  அங்கலர்  செய்வான்  அனுராகம் 
தன்னை  அளிக்குந்  தண்டணி  கேசர்  தம்பாற்போய் 
என்னை  இகழ்ந்தாள்  என்செயல்  கொண்டாள்  என்பாயே. 
9
வதியும்  தணிகையில்  வாழ்வுறும்  என்கண்  மணி  அன்னார் 
மதியுந்  தழல்கெட  மாமயின்  மீதிவண்  வருவாரேல் 
திதியும்  புவிபுகல்  நின்பெயர்  நெறியைத்  தெரிவிப்பான் 
நதியுந்  துணவுத  வுவனங்  கொடிநீ  நடவாயே. 
10
மன்றேர்  தணிகையி  னின்றீர்  கதிதர  வந்தீரோ 
என்றே  னசைதரு  மின்றேன்  மொழியாய்  யானுன்பால் 
இன்றே  சுரருல  கெய்திட  வந்தே  னென்றார்காண் 
குன்றேர்  முலையா  யென்னடி  யவர்சொற்  குறிதானே. 
11
சேதன  நந்தார்  சென்று  வணங்குந்  திறல்வேலார் 
தாதன  வண்ணத்  துள்ளொளிர்  கின்ற  தணிகேசர் 
மாதன  முந்தா  வந்தென  வந்தே  வாதாதா 
ஆதன  மென்றா  ரென்னடி  யம்மா  வவர்சூதே. 
12

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com