
மன்னே என்றன் உயிர்க்குயிரே மணியே தணிகை மலைமருந்தே
அன்னே என்னை ஆட்கொண்ட அரசே தணிகை ஐயாவே
பொன்னே ஞானப் பொங்கொளியே புனித அருளே பூரணமே
என்னே எளியேன் துயர்உழத்தல் எண்ணி இரங்கா திருப்பதுவே.
இரங்கா நின்றிங் கலைதரும்இவ் வெளியேன் கனவின் இடத்தேனும்
அரங்கா அரவின் நடித்தோனும் அயனும் காண்டற் கரிதாய
உரங்கா முறும்மா மயில்மேல்நின் உருவம் தரிசித் துவப்படையும்
வரங்கா தலித்தேன் தணிகைமலை வாழ்வே இன்று வருவாயோ.
வருவாய் என்று நாள்தோறும் வழிபார்த் திரங்கி மனந்தளர்ந்தேன்
கருவாய் பவன்என் றெனைத்தள்ளக் கருது வாயோ அன்றிஅருள்
உருவாய் வந்து தருவாயோ தணிகா சலத்துள் உற்றமர்ந்த
ஒருவர் உன்றன் திருவுளத்தை உணரேன் என்செய் துய்கேனே.
உய்யும் பொருட்டுன் திருப்புகழை உரையேன் அந்தோ உரைக்கடங்காப்
பொய்யும் களவும் அழுக்காறும் பொருளாக் கொண்டேன் புலையேனை
எய்யும் படிவந் தடர்ந்தியமன் இழுத்துப் பறிக்கில் என்னேயான்
செய்யும் வகைஒன் றறியேனே தென்பால் தணிகைச் செஞ்சுடரே.
செஞ்சொல் சுவையே மெய்ஞ்ஞானச் செல்வப் பெருக்கே தெள்ளமுதே
விஞ்சைப் புலவர் புகழ்தணிகை விளக்கே துளக்கில் வேலோனே
வெஞ்சொல் புகலும் வஞ்சகர்பால் மேவி நின்தாள் மலர்மறந்தே
பஞ்சில் தமியேன் படும்பாட்டைப் பார்த்தும் அருட்கண் பார்த்திலையே.
பார்க்கின் றிலையே பன்னிருகண் படைத்தும் எளியேன் பாடனைத்தும்
தீர்க்கின் றிலையே என்னேயான் செய்வேன் சிறியேன் சீமானே
போர்க்குன் றொடுசூர் புயக்குன்றும் பொடிசெய் வேற்கைப் புண்ணியனே
சீர்க்குன் றெனும்நல் வளத்தணிகைத் தேவே மயில்ஊர் சேவகனே.
சேவற் கொடிகொள் குணக்குன்றே சிந்தா மணியே யாவர்கட்கும்
காவற் பதியே தணிகைவளர் கரும்பே கனியே கற்பகமே
மூவர்க் கிறையே வேய்ஈன்ற முத்தன் அளித்த முத்தேநல்
தேவர்க் கருள்நின் சேவடிக்கே விழைந்தேன் யாதும்தெரியேனே.
தெரியேன் உனது திருப்புகழைத் தேவே உன்றன் சேவடிக்கே
பரியேன் பணியேன் கூத்தாடேன் பாடேன் புகழைப் பரவசமாய்த்
தரியேன் தணிகை தனைக்காணேன் சாகேன் நோகேன் கும்பிக்கே
உரியேன் அந்தோ எதுகொண்டிங் குய்கேன் யாதுசெய்கேனே.
செய்வ துனது திருவடிக்காம் திறனே சிந்தை நின்பாலே
வைவ துன்னை நினையாத வஞ்ச கரையே வழுத்திநிதம்
உய்வ துனது திருநாமம் ஒன்றைப் பிடித்தே மற்றொன்றால்
எய்வ தறியேன் திருத்தணிகை எந்தாய் எந்தாய் எளியேனே.
எளியேன் நினது சேவடியாம் இன்ப நறவை எண்ணிஎண்ணி
அளியேன் நெஞ்சம் சற்றேனும் அன்பொன் றில்லேன் அதுசிறிதும்
ஒளியேன் எந்தாய் என்உள்ளத் தொளித்தே எவையும் உணர்கின்றாய்
வளியே முதலாய் நின்றருளும் மணியே தணிகை வாழ்மன்னே.



