திருவருட்பா  16. ஆறெழுத் துண்மை

பெருமை  நிதியே  மால்விடைகொள்  பெம்மான்  வருந்திப்  பெறும்பேறே 
அருமை  மணியே  தணிகைமலை  அமுதே  உன்றன்  ஆறெழுத்தை 
ஒருமை  மனத்தின்  உச்சரித்திங்  குயர்ந்த  திருவெண்ணீறிட்டால் 
இருமை  வளனும்  எய்தும்இடர்  என்ப  தொன்றும்  எய்தாதே. 
1
எய்தற்  கரிய  அருட்சுடரே  எல்லாம்  வல்ல  இறையோனே 
செய்தற்  கரிய  வளத்தணிகைத்  தேவே  உன்றன்  ஆறெழுத்தை 
உய்தற்  பொருட்டிங்  குச்சரித்தே  உயர்ந்த  திருவெண்ணீறிட்டால் 
வைதற்  கில்லாப்  புகழ்ச்சிவரும்  வன்கண்  ஒன்றும்  வாராதே. 
2
வாரா  இருந்த  அடியவர்தம்  மனத்தில்  ஒளிரும்  மாமணியே 
ஆரா  அமுதே  தணிகைமலை  அரசே  உன்றன்  ஆறெழுத்தை 
ஓரா  மனத்தின்  உச்சரித்திங்  குயர்ந்த  திருவெண்ணீறிட்டால் 
ஏரார்  செல்வப்  பெருக்கிகவா  இடும்பை  ஒன்றும்  இகந்திடுமே. 
3
இகவா  அடியர்  மனத்தூறும்  இன்பச்  சுவையே  எம்மானே 
அகவா  மயில்ஊர்  திருத்தணிகை  அரசே  உன்றன்  ஆறெழுத்தை 
உகவா  மனத்தின்  உச்சரித்திங்  குயர்ந்த  திருவெண்ணீறிட்டால் 
சுகவாழ்  வின்பம்  அதுதுன்னும்  துன்பம்  ஒன்றும்  துன்னாதே. 
4
துன்னும்  மறையின்  முடிவில்ஒளிர்  தூய  விளக்கே  சுகப்பெருக்கே 
அன்னை  அனையாய்  தணிகைமலை  அண்ணா  உன்றென்  ஆறெழுத்தை 
உன்னி  மனத்தின்  உச்சரித்திங்  குயர்ந்த  திருவெண்ணீறிட்டால் 
சென்னி  அணியாய்  அடிசேரும்  தீமை  ஒன்றும்  சேராதே. 
5
சேரும்  முக்கண்  கனிகனிந்த  தேனே  ஞானச்  செழுமணியே 
யாரும்  புகழும்  தணிகைஎம  தன்பே  உன்றன்  ஆறெழுத்தை 
ஓரும்  மனத்தின்  உச்சரித்திங்  குயர்ந்த  திருவெண்ணீறிட்டால் 
பாரும்  விசும்பும்  பதஞ்சாரும்  பழங்கண்  ஒன்றும்  சாராதே. 
6
சார்ந்த  அடியார்க்  கருள்அளிக்கும்  தருமக்  கடலே  தற்பரமே 
வார்ந்த  பொழில்சூழ்  திருத்தணிகை  மணியே  உன்றன்  ஆறெழுத்தை 
ஓர்ந்து  மனத்தின்  உச்சரித்திங்  குயர்ந்த  திருவெண்ணீறிட்டால் 
ஆர்ந்த  ஞானம்  உறும்அழியா  அலக்கண்  ஒன்றும்  அழிந்திடுமே. 
7
அழியாப்  பொருளே  என்உயிரே  அயில்செங்  கரங்கொள்  ஐயாவே 
கழியாப்  புகழ்சேர்  தணிகைஅமர்  கந்தா  உன்றன்  ஆறெழுத்தை 
ஒழியா  மனத்தின்  உச்சரித்திங்  குயர்ந்த  திருவெண்ணீறிட்டால் 
பழியா  இன்பம்  அதுபதியும்  பனிமை  ஒன்றும்  பதியாதே. 
8
பதியே  எங்கும்  நிறைந்தருளும்  பரம  சுகமே  பரஞ்சுடரே 
கதியே  அளிக்கும்  தணிகைஅமர்  கடம்பா  உன்றன்  ஆறெழுத்தை 
உதியேர்  மனத்தின்  உச்சரித்திங்  குயர்ந்த  திருவெண்ணீறிட்டால் 
துதிஏர்  நினது  பதந்தோன்றும்  துன்பம்  ஒன்றும்  தோன்றாதே. 
9
தோன்றா  ஞானச்  சின்மயமே  தூய  சுகமே  சுயஞ்சுடரே 
ஆன்றார்  புகழும்  தணிகைமலை  அரசே  உன்றன்  ஆறெழுத்தை 
ஊன்றா  மனத்தின்  உச்சரித்திங்  குயர்ந்த  திருவெண்ணீறிட்டால் 
ஈன்றாள்  நிகரும்  அருள்அடையும்  இடுக்கண்  ஒன்றும்  அடையாதே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com