திருவருட்பா  8. திரு உலாத் திறம்

தேனார்  கமலத்  தடஞ்சூழும்  திருவாழ்  ஒற்றித்  தியாகர்அவர் 
வானார்  அமரர்  முனிவர்தொழ  மண்ணோர்  வணங்க  வரும்பவனி 
தானார்  வங்கொண்  டகமலரத்  தாழ்ந்து  சூழ்ந்து  கண்டலது 
கானார்  அலங்கற்  பெண்ணேநான்  கண்கள்  உறக்கங்  கொள்ளேனே. 
1
திருமால்  வணங்கும்  ஒற்றிநகர்  செழிக்கும்  செல்வத்  தியாகர்அவர் 
கருமால்  அகற்றுந்  தொண்டர்குழாம்  கண்டு  களிக்க  வரும்பவனி 
மருமாண்  புடைய  மனமகிழ்ந்து  மலர்க்கை  கூப்பிக்  கண்டலது 
பெருமான்  வடுக்கண்  பெண்ணேநான்  பெற்றா  ளோடும்  பேசேனே. 
2
சேல்ஆர்  தடஞ்சூழ்  ஒற்றிநகர்  சேருஞ்  செல்வத்  தியாகர்அவர் 
ஆல்ஆர்  களமேல்  விளங்குமுகம்  அழகு  ததும்ப  வரும்பவனி 
நால்ஆ  ரணஞ்சூழ்  வீதியிடை  நாடிப்  புகுந்து  கண்டலது 
பால்ஆர்  குதலைப்  பெண்ணேநான்  பாயிற்  படுக்கை  பொருந்தேனே. 
3
செல்வந்  துறழும்  பொழில்ஒற்றித்  தெய்வத்  தலங்கொள்  தியாகர்அவர் 
வில்வந்  திகழும்  செஞ்சடைமின்  விழுங்கி  விளங்க  வரும்பவனி 
சொல்வந்  தோங்கக்  கண்டுநின்று  தொழுது  துதித்த  பின்அலது 
அல்வந்  தளகப்  பெண்ணேநான்  அவிழ்ந்த  குழலும்  முடியேனே. 
4
சேவார்  கொடியார்  ஒற்றிநகர்  திகழுஞ்  செல்வத்  தியாகர்அவர் 
பூவார்  கொன்றைப்  புயங்கள்மனம்  புணரப்  புணர  வரும்பவனி 
ஓவாக்  களிப்போ  டகங்குளிர  உடலங்  குளிரக்  கண்டலது 
பாவார்  குதலைப்  பெண்ணேநான்  பரிந்து  நீரும்  பருகேனே. 
5
சிற்றம்  பலத்தார்  ஒற்றிநகர்  திகழுஞ்  செல்வத்  தியாகர்அவர் 
உற்றங்  குவந்தோர்  வினைகளெலாம்  ஓட  நாடி  வரும்பவனி 
சுற்றுங்  கண்கள்  களிகூரத்  தொழுது  கண்ட  பின்அலது 
முற்றுங்  கனிவாய்ப்  பெண்ணேநான்  முடிக்கோர்  மலரும்  முடியேனே. 
6
சிந்தைக்  கினியார்  ஒற்றிநகர்  திகழுஞ்  செல்வத்  தியாகர்அவர் 
சந்தத்  தடந்தோள்  கண்டவர்கள்  தம்மை  விழுங்க  வரும்பவனி 
முந்தப்  புகுந்து  புளகமுடன்  மூடிக்  குளிரக்  கண்டலது 
கந்தக்  குழல்வாய்ப்  பெண்ணேநான்  கண்ர்  ஒழியக்  காணேனே. 
7
தென்னஞ்  சோலை  வளர்ஒற்றி  யூர்வாழ்  செல்வத்  தியாகர்அவர் 
பின்னுஞ்  சடைமேல்  பிறைவிளங்கிப்  பிறங்கா  நிற்க  வரும்பவனி 
மன்னுங்  கரங்கள்  தலைகுவித்து  வணங்கி  வாழ்த்திக்  கண்டலது 
துன்னுந்  துவர்வாய்ப்  பெண்ணேநான்  சோறெள்  ளளவும்  உண்ணேனே. 
8
சிந்தா  குலந்தீர்த்  தருள்ஒற்றி  யூர்வாழ்  செல்வத்  தியாகர்அவர் 
வந்தார்  கண்டார்  அவர்மனத்தை  வாங்கிப்  போக  வரும்பவனி 
நந்தா  மகிழ்வு  தலைசிறப்ப  நாடி  ஓடிக்  கண்டலது 
பந்தார்  மலர்க்கைப்  பெண்ணேநான்  பாடல்  ஆடல்  பயிலேனே. 
9
செக்கர்ச்  சடையார்  ஒற்றிநகர்ச்  சேருஞ்  செல்வத்  தியாகர்அவர் 
மிக்கற்  புதவாண்  முகத்தினகை  விளங்க  விரும்பி  வரும்பவனி 
மக்கட்  பிறவி  எடுத்தபயன்  வசிக்க  வணங்கிக்  கண்டலது 
நக்கற்  கியைந்த  பெண்ணேநான்  ஞாலத்  தெவையும்  நயவேனே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com