திருவருட்பா  7. இன்பப் புகழ்ச்சி

மாடொன்  றுடையார்  உணவின்றி  மண்ணுன்  டதுகாண்  மலரோன்றன் 
ஓடொன்  றுடையார்  ஒற்றிவைத்தார்  ஊரை  மகிழ்வோ  டுவந்தாலங் 
காடொன்  றுடையார்  கண்டமட்டுங்  கறுத்தார்  பூத  கணத்தோடும் 
ஈடொன்  றுடையார்  மகளேநீ  ஏதுக்  கவரை  விழைந்தனையே. 
1
பித்தர்  எனும்பேர்  பிறங்கநின்றார்  பேயோ  டாடிப்  பவுரிகொண்டார் 
பத்தர்  தமக்குப்  பணிசெய்வார்  பணியே  பணியாப்  பரிவுற்றார் 
சித்தர்  திருவாழ்  ஒற்றியினார்  தியாகர்  என்றுன்  கலைகவர்ந்த 
எத்தர்  அன்றோ  மகளேநீ  ஏதுக்  கவரை  விழைந்தனையே. 
2
கடுத்தாழ்  களத்தார்  கரித்தோலார்  கண்ணால்  மதனைக்  கரிசெய்தார் 
உடுத்தார்  முன்ஓர்  மண்ணோட்டை  ஒளித்தே  தொண்ட  னொடும்வழக்குத் 
தொடுத்தார்  பாம்பும்  புலியும்மெச்சித்  துதிக்க  ஒருகால்  அம்பலத்தில் 
எடுத்தார்  அன்றோ  மகளேநீ  ஏதுக்  கவரை  விழைந்தனையே. 
3
உரப்பார்  மிசையில்  பூச்சூட  ஒட்டார்  சடைமேல்  ஒருபெண்ணைக் 
கரப்பார்  மலர்தூ  வியமதனைக்  கண்ணால்  சுட்டார்  கல்எறிந்தோன் 
வரப்பார்  மிசைக்கண்  வாழ்ந்திருக்க  வைத்தார்  பலிக்கு  மனைதொறும்போய் 
இரப்பார்  அன்றோ  மகளேநீ  ஏதுக்  கவரை  விழைந்தனையே. 
4
கருதும்  அவரை  வெளிக்கிழுப்பார்  காணா  தெல்லாங்  காட்டிநிற்பார் 
மருதில்  உறைவார்  ஒற்றிதனில்  வதிவார்  புரத்தை  மலைவில்லால் 
பொருது  முடிப்பார்  போல்நகைப்பார்  பூவுண்  டுறங்கும்  புதுவெள்ளை 
எருதில்  வருவார்  மகளேநீ  ஏதுக்  கவரை  விழைந்தனையே. 
5
ஆக்கம்  இல்லார்  வறுமையிலார்  அருவம்  இல்லார்  உருவமிலார் 
தூக்கம்  இல்லார்  சுகம்இல்லார்  துன்பம்  இல்லார்  தோன்றுமல 
வீக்கம்  இல்லார்  குடும்பமது  விருத்தி  யாக  வேண்டுமெனும் 
ஏக்கம்  இல்லார்  மகளேநீ  ஏதுக்  கவரை  விழைந்தனையே. 
6
ஊரும்  இல்லார்  ஒற்றிவைத்தார்  உறவொன்  றில்லார்  பகைஇல்லார் 
பேரும்  இல்லார்  எவ்விடத்தும்  பிறவார்  இறவார்  பேச்சில்லார் 
நேரும்  இல்லார்  தாய்தந்தை  நேயர்  தம்மோ  டுடன்பிறந்தோர் 
யாரும்  இல்லார்  மகளேநீ  ஏதுக்  கவரை  விழைந்தனையே. 
7
தங்கு  மருப்பார்  கண்மணியைத்  தரிப்பார்  என்பின்  தார்புனைவார் 
துங்கும்  அருட்கார்  முகில்அனையார்  சொல்லும்  நமது  சொற்கேட்டே 
இங்கும்  இருப்பார்  அங்கிருப்பார்  எல்லாம்  இயல்பில்  தாம்உணர்ந்தே 
எங்கும்  இருப்பார்  மகளேநீ  ஏதுக்  கவரை  விழைந்தனையே. 
8
துத்திப்  படத்தார்  சடைத்தலையார்  தொலையாப்  பலிதேர்  தொன்மையினார் 
முத்திக்  குடையார்  மண்எடுப்பார்  மொத்துண்  டுழல்வார்  மொய்கழற்காம் 
புத்திக்  குரிய  பத்தர்கள்தம்  பொருளை  உடலை  யாவையுமே 
எத்திப்  பறிப்பார்  மகளேநீ  ஏதுக்  கவரை  விழைந்தனையே. 
9
மாறித்  திரிவார்  மனம்அடையார்  வணங்கும்  அடியார்  மனந்தோறும் 
வீறித்  திரிவார்  வெறுவெளியின்  மேவா  நிற்பார்  விறகுவிலை 
கூறித்  திரிவார்  குதிரையின்மேற்  கொள்வார்  பசுவிற்  கோல்வளையோ 
டேறித்  திரிவார்  மகளேநீ  ஏதுக்  கவரை  விழைந்தனையே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com