திருவருட்பா  6. இன்பக் கிளவி

தில்லை  வளத்தார்  அம்பலத்தார்  திருவேட்  களத்தார்  செவ்வணத்தார் 
கல்லை  வளைத்தார்  என்றன்மனக்  கல்லைக்  குழைத்தார்  கங்கணத்தால் 
எல்லை  வளைத்தார்  தியாகர்தமை  எழிலார்  ஒற்றி  எனும்நகரில் 
ஒல்லை  வளைத்துக்  கண்டேன்நான்  ஒன்றும்  உரையா  திருந்தாரே. 
1
இருந்தார்  திருவா  ரூரகத்தில்  எண்ணாக்  கொடியார்  இதயத்தில் 
பொருந்தார்  கொன்றைப்  பொலன்பூந்தார்  புனைந்தார்  தம்மைப்  புகழ்ந்தார்கண் 
விருந்தார்  திருந்தார்  புரமுன்தீ  விளைத்தார்  ஒற்றி  நகர்கிளைத்தார் 
தருந்தார்  காம  மருந்தார்இத்  தரணி  இடத்தே  தருவாரே. 
2
தருவார்  தருவார்  செல்வமுதல்  தருவார்  ஒற்றித்  தலம்அமர்வார் 
மருவார்  தமது  மனமருவார்  மருவார்  கொன்றை  மலர்புனைவார் 
திருவார்  புயனும்  மலரோனும்  தேடும்  தியாகப்  பெருமானார் 
வருவார்  வருவார்  எனநின்று  வழிபார்த்  திருந்தேன்  வந்திலரே. 
3
வந்தார்  அல்லர்  மாதேநீ  வருந்தேல்  என்று  மார்பிலங்கும் 
தந்தார்  அல்லல்  தவிர்ந்தோங்கத்  தந்தார்  அல்லர்  தயை  உடையார் 
சந்தார்  சோலை  வளர்ஒற்றித்  தலத்தார்  தியாகப்  பெருமானார் 
பந்தார்  முலையார்க்  கவர்கொடுக்கும்  பரிசே  தொன்றும்  பார்த்திலமே. 
4
இலமே  செறித்தார்  தாயர்இனி  என்செய்  குவதென்  றிருந்தேற்கு 
நலமே  தருவார்  போல்வந்தென்  நலமே  கொண்டு  நழுவினர்காண் 
உலமே  அனைய  திருத்தோளார்  ஒற்றித்  தியாகப்  பெருமானார் 
வலமே  வலம்என்அ  வலம்அவலம்  மாதே  இனிஎன்  வழுத்துவதே. 
5
வழுத்தார்  புரத்தை  எரித்தார்நல்  வலத்தார்  நடன  மலரடியார் 
செழுத்தார்  மார்பர்  திருஒற்றித்  திகழுந்  தியாகப்  பெருமானார் 
கழுத்தார்  விடத்தார்  தமதழகைக்  கண்டு  கனிந்து  பெருங்காமம் 
பழுத்தார்  தம்மைக்  கலந்திடநற்  பதத்தார்  என்றும்  பார்த்திலரே. 
6
பாரா  திருந்தார்  தமதுமுகம்  பார்த்து  வருந்தும்  பாவைதனைச் 
சேரா  திருந்தார்  திருஒற்றித்  திகழுந்  தியாகப்  பெருமானார் 
வாரா  திருந்தார்  இன்னும்இவள்  வருத்தங்  கேட்டும்  மாலைதனைத் 
தாரா  திருந்தார்  சலமகளைத்  தாழ்ந்த  சடையில்  தரித்தாரே. 
7
சடையில்  தரித்தார்  ஒருத்திதனைத்  தழுவி  மகிழ்மற்  றொருபெண்ணைப் 
புடையில்  தரித்தார்  மகளேநீ  போனால்  எங்கே  தரிப்பாரோ 
கடையில்  தரித்த  விடம்அதனைக்  களத்தில்  தரித்தார்  கரித்தோலை 
இடையில்  தரித்தார்  ஒற்றியூர்  இருந்தார்  இருந்தார்  என்னுளத்தே. 
8
உளத்தே  இருந்தார்  திருஒற்றி  யூரில்  இருந்தார்  உவர்விடத்தைக் 
களத்தே  வதிந்தார்  அவர்என்றன்  கண்ணுள்  வதிந்தார்  கடல்அமுதாம் 
இளத்தே  மொழியாய்  ஆதலினால்  இமையேன்  இமைத்தல்  இயல்பன்றே 
வளத்தே  மனத்தும்  புகுகின்றார்  வருந்தேன்  சற்றும்  வருந்தேனே. 
9
வருந்தேன்  மகளீர்  எனைஒவ்வார்  வளஞ்சேர்  ஒற்றி  மன்னவனார் 
தருந்தேன்  அமுதம்  உண்டென்றும்  சலிய  வாழ்வில்  தருக்கிமகிழ்ந் 
திருந்தேன்  மணாளர்  எனைப்பிரியார்  என்றும்  புணர்ச்சிக்  கேதுவிதாம் 
மருந்தேன்  மையற்  பெருநோயை  மறந்தேன்  அவரை  மறந்திலனே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com