திருவருட்பா  5. சல்லாப வியன்மொழி

காது  நடந்த  கண்மடவாள்  கடிமா  மனைக்குக்  கால்வருந்தத் 
தூது  நடந்த  பெரியவர்சிற்  சுகத்தா  ரொற்றித்  தொன்னகரார் 
வாது  நடந்தான்  செய்கின்றோர்  மாது  நடந்து  வாவென்றார் 
போது  நடந்த  தென்றேனெப்  போது  நடந்த  தென்றாரே. 
1
கச்சை  யிடுவார்  படவரவைக்  கண்மூன்  றுடையார்  வாமத்திற் 
பச்சை  யிடுவா  ரொற்றியுள்ளார்  பரிந்தென்  மனையிற்  பலிக்குற்றார் 
இச்சை  யிடுவா  ருண்டியென்றா  ருண்டே  னென்றே  னெனக்கின்று 
பிச்சை  யிடுவா  யென்றார்நான்  பிச்சை  யடுவே  னென்றேனே. 
2
கருதற்  கரியார்  கரியார்முன்  காணக்  கிடையாக்  கழலடியார் 
மருதத்  துறைவார்  திருவொற்றி  வாண  ரின்றென்  மனைக்குற்றார் 
தருதற்  கென்பா  லின்றுவந்தீ  ரென்றே  னதுநீ  தானென்றார் 
வருதற்  குரியீர்  வாருமென்றேன்  வந்தே  னென்று  மறைந்தாரே. 
3
கல்லை  வளைக்கும்  பெருமானார்  கழிசூ  ழொற்றிக்  கடிநகரார் 
எல்லை  வளைக்குந்  தில்லையுள்ளா  ரென்றன்  மனைக்குப்  பலிக்குற்றார் 
அல்லை  வளைக்குங்  குழலன்ன  மன்பி  னுதவா  விடிலோபம் 
இல்லை  வளைக்கு  மென்றார்நா  னில்லை  வளைக்கு  மென்றேனே. 
4
வெற்றி  யிருந்த  மழுப்படையார்  விடையார்  மேரு  வில்லுடையார் 
பெற்றி  யிருந்த  மனத்தர்தமுட்  பிறங்குந்  தியாகப்  பெருமானார் 
சுற்றி  யிருந்த  பெண்களெல்லாஞ்  சொல்லி  நகைக்க  வருகணைந்தார் 
ஒற்றி  யிருமென்  றுரைத்தேனோ  னொற்றி  யிருந்தே  னென்றாரே. 
5
விண்டங்  கமரர்  துயர்தவிர்க்கும்  வேற்கை  மகனை  விரும்பிநின்றோர் 
வண்டங்  கிசைக்கும்  பொழிலொற்றி  வதிவா  ரென்றன்  மனையடைந்தார் 
தண்டங்  கழற்கு  நிகரானீர்  தண்டங்  கழற்கென்  றேன்மொழியாற் 
கண்டங்  கறுத்தா  யென்றார்நீர்  கண்டங்  கறுத்தீ  ரென்றேனே. 
6
விற்கண்  டாத  நுதன்மடவாள்  வேட்ட  நடன  வித்தகனார் 
சொற்கண்  டாத  புகழொற்றித்  தூய  ரின்றென்  மனைபுகுந்தார் 
நிற்கண்  டார்கண்  மயலடைவா  ரென்றார்  நீர்தா  நிகழ்த்தியசொற் 
கற்கண்  டாமென்  றுரைத்தேனான்  கற்கண்  டாமென்  றுரைத்தாரே. 
7
விடையார்  கொடிமே  லுயர்த்தருளும்  வேத  கீதப்  பெருமானார் 
உடையா  ரொற்றி  யூரமர்ந்தா  ருவந்தென்  மனையி  லின்றடைந்தார் 
இடையா  வைய  மென்றார்நா  னிடைதா  னைய  மென்றேனாற் 
கடையா  ரளியா  ரென்றார்கட்  கடையா  ரளியா  ரென்றேனே. 
8
நாடொன்  றியசீர்த்  திருவொற்றி  நகரத்  தமர்ந்த  நாயகனார் 
ஈடொன்  றில்லா  ரென்மனையுற்  றிருந்தார்  பூவுண்  டெழில்கொண்ட 
மாடொன்  றெங்கே  யென்றேனுன்  மனத்தி  லென்றார்  மகிழ்ந்தமர்வெண் 
காடொன்  றுடையீ  ரென்றேன்செங்  காடொன்  றுடையே  னென்றாரே. 
9
சொல்லா  லியன்ற  தொடைபுனைவார்  தூயா  ரொற்றித்  தொன்னகரார் 
அல்லா  லியன்ற  மனத்தார்பா  லணுகா  ரென்றென்  மனைபுகுந்தார் 
வல்லா  லியன்ற  முலையென்றார்  வல்லார்  நீரென்  றேனுன்சொற் 
கல்லா  லியன்ற  தென்றார்முன்  கல்லா  லியன்ற  தென்றேனே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com