
வெள்ளச் சடையார் விடையார்செவ் வேலார் நூலார் மேலார்தம்
உள்ளத் துறைவார் நிறைவார்நல் ஒற்றித் தியாகப் பெருமானர்
வள்ளற் குணத்தார் திருப்பவனி வந்தார் என்றார் அம்மொழியை
விள்ளற் குள்ளே மனம்என்னை விட்டங் கவர்முன் சென்றதுவே.
அந்தார் அணியும் செஞ்சடையார் அடையார் புரமூன் றவைஅனலின்
உந்தா நின்ற வெண்ணகையார் ஒற்றித் தியாகர் பவனிஇங்கு
வந்தார் என்றார் அந்தோநான் மகிழ்ந்து காண வருமுன்னம்
மந்தா கினிபோல் மனம்என்னை வஞ்சித் தவர்முன் சென்றதுவே.
பொன்னேர் சடையார் கீள்உடையார் பூவை தனைஓர் புடைஉடையார்
தென்னேர் பொழில்சூழ் ஒற்றியூர்த் திகழுந் தியாகர் திருப்பவனி
இன்னே வந்தார் என்றார்நான் எழுந்தேன் நான்அங் கெழுவதற்கு
முன்னே மனம்என் தனைவிடுத்து முந்தி அவர்முன் சென்றதுவே.
காண இனியார் என்இரண்டு கண்கள் அனையார் கடல்விடத்தை
ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார்நல் ஒற்றித் தியாகப் பெருமானார்
மாண வீதி வருகின்றார் என்றார் காண வருமுன்நான்
நாண எனைவிட் டென்மனந்தான் நயந்தங் கவர்முன் சென்றதுவே.
செழுந்தெண் கடற்றெள் அமுதனையார் தியாகர் எனும்ஓர் திருப்பெயரார்
கொழுந்தண் பொழில்சூழ் ஒற்றியினார் கோலப் பவனி என்றார்நான்
எழுந்திங் கவிழ்ந்த கலைபுனைந்தங் கேகு முன்னர் எனைவிடுத்தே
அழுந்து நெஞ்சம் விழுந்துகூத் தாடி அவர்முன் சென்றதுவே.
சால மாலும் மேலும்இடந் தாலும் அறியாத் தழல்உருவார்
சேலும் புனலும் சூழ்ஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
பாலுந் தேனுங் கலந்ததெனப் பவனி வந்தார் என்றனர்யான்
மேலுங் கேட்கு முன்னமனம் விட்டங் கவர்முன் சென்றதுவே.
பின்தாழ் சடையார் தியாகர்எனப் பேசும் அருமைப் பெருமானார்
மன்றார் நடத்தார் ஒற்றிதனில் வந்தார் பவனி என்றார்நான்
நன்றாத் துகிலைத் திருத்துமுனம் நலஞ்சேர் கொன்றை நளிர்ப்பூவின்
மென்தார் வாங்க மனம்என்னை விட்டங் கவர்முன் சென்றதுவே.
கண்ணார் நுதலார் மணிகண்டர் கனக வரையாங் கனசிலையார்
பெண்ணார் பாகர் தியாகர்எனப் பேசும் அருமைப் பெருமானார்
தண்ணார் பொழில்சூழ் ஒற்றிதனில் சார்ந்தார் பவனி என்றனர்நான்
நண்ணா முன்னம் என்மனந்தான் நாடி அவர்முன் சென்றதுவே.
ஈமப் புறங்காட் டெரியாடும் எழிலார் தில்லை இனிதமர்வார்
சேமப் புலவர் தொழும்ஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
வாமப் பாவை யொடும்பவனி வந்தார் என்றார் அதுகாண்பான்
காமப் பறவை போல்என்மனம் கடுகி அவர்முன் சென்றதுவே.
சூலப்படையார் பூதங்கள் சுற்றும் படையார் துதிப்பவர்தம்
சீலப் பதியார் திருஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
நீலக் களத்தார் திருப்பவனி நேர்ந்தார் என்றார் அதுகாண்பான்
சாலப் பசித்தார் போல்மனந்தான் தாவி அவர்முன் சென்றதுவே.



