திருவருட்பா  4. திரு உலா வியப்பு

வெள்ளச்  சடையார்  விடையார்செவ்  வேலார்  நூலார்  மேலார்தம் 
உள்ளத்  துறைவார்  நிறைவார்நல்  ஒற்றித்  தியாகப்  பெருமானர் 
வள்ளற்  குணத்தார்  திருப்பவனி  வந்தார்  என்றார்  அம்மொழியை 
விள்ளற்  குள்ளே  மனம்என்னை  விட்டங்  கவர்முன்  சென்றதுவே. 
1
அந்தார்  அணியும்  செஞ்சடையார்  அடையார்  புரமூன்  றவைஅனலின் 
உந்தா  நின்ற  வெண்ணகையார்  ஒற்றித்  தியாகர்  பவனிஇங்கு 
வந்தார்  என்றார்  அந்தோநான்  மகிழ்ந்து  காண  வருமுன்னம் 
மந்தா  கினிபோல்  மனம்என்னை  வஞ்சித்  தவர்முன்  சென்றதுவே. 
2
பொன்னேர்  சடையார்  கீள்உடையார்  பூவை  தனைஓர்  புடைஉடையார் 
தென்னேர்  பொழில்சூழ்  ஒற்றியூர்த்  திகழுந்  தியாகர்  திருப்பவனி 
இன்னே  வந்தார்  என்றார்நான்  எழுந்தேன்  நான்அங்  கெழுவதற்கு 
முன்னே  மனம்என்  தனைவிடுத்து  முந்தி  அவர்முன்  சென்றதுவே. 
3
காண  இனியார்  என்இரண்டு  கண்கள்  அனையார்  கடல்விடத்தை 
ஊணின்  நுகர்ந்தார்  உயர்ந்தார்நல்  ஒற்றித்  தியாகப்  பெருமானார் 
மாண  வீதி  வருகின்றார்  என்றார்  காண  வருமுன்நான் 
நாண  எனைவிட்  டென்மனந்தான்  நயந்தங்  கவர்முன்  சென்றதுவே. 
4
செழுந்தெண்  கடற்றெள்  அமுதனையார்  தியாகர்  எனும்ஓர்  திருப்பெயரார் 
கொழுந்தண்  பொழில்சூழ்  ஒற்றியினார்  கோலப்  பவனி  என்றார்நான் 
எழுந்திங்  கவிழ்ந்த  கலைபுனைந்தங்  கேகு  முன்னர்  எனைவிடுத்தே 
அழுந்து  நெஞ்சம்  விழுந்துகூத்  தாடி  அவர்முன்  சென்றதுவே. 
5
சால  மாலும்  மேலும்இடந்  தாலும்  அறியாத்  தழல்உருவார் 
சேலும்  புனலும்  சூழ்ஒற்றித்  திகழுந்  தியாகப்  பெருமானார் 
பாலுந்  தேனுங்  கலந்ததெனப்  பவனி  வந்தார்  என்றனர்யான் 
மேலுங்  கேட்கு  முன்னமனம்  விட்டங்  கவர்முன்  சென்றதுவே. 
6
பின்தாழ்  சடையார்  தியாகர்எனப்  பேசும்  அருமைப்  பெருமானார் 
மன்றார்  நடத்தார்  ஒற்றிதனில்  வந்தார்  பவனி  என்றார்நான் 
நன்றாத்  துகிலைத்  திருத்துமுனம்  நலஞ்சேர்  கொன்றை  நளிர்ப்பூவின் 
மென்தார்  வாங்க  மனம்என்னை  விட்டங்  கவர்முன்  சென்றதுவே. 
7
கண்ணார்  நுதலார்  மணிகண்டர்  கனக  வரையாங்  கனசிலையார் 
பெண்ணார்  பாகர்  தியாகர்எனப்  பேசும்  அருமைப்  பெருமானார் 
தண்ணார்  பொழில்சூழ்  ஒற்றிதனில்  சார்ந்தார்  பவனி  என்றனர்நான் 
நண்ணா  முன்னம்  என்மனந்தான்  நாடி  அவர்முன்  சென்றதுவே. 
8
ஈமப்  புறங்காட்  டெரியாடும்  எழிலார்  தில்லை  இனிதமர்வார் 
சேமப்  புலவர்  தொழும்ஒற்றித்  திகழுந்  தியாகப்  பெருமானார் 
வாமப்  பாவை  யொடும்பவனி  வந்தார்  என்றார்  அதுகாண்பான் 
காமப்  பறவை  போல்என்மனம்  கடுகி  அவர்முன்  சென்றதுவே. 
9
சூலப்படையார்  பூதங்கள்  சுற்றும்  படையார்  துதிப்பவர்தம் 
சீலப்  பதியார்  திருஒற்றித்  திகழுந்  தியாகப்  பெருமானார் 
நீலக்  களத்தார்  திருப்பவனி  நேர்ந்தார்  என்றார்  அதுகாண்பான் 
சாலப்  பசித்தார்  போல்மனந்தான்  தாவி  அவர்முன்  சென்றதுவே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com