
உள்ளார் புறத்தார் ஒற்றிஎனும் ஊரார் ஒப்பென் றொன்றுமிலார்
வள்ளால் என்று மறைதுதிக்க வருவார் இன்னும் வந்திலரே
எள்ளா திருந்த பெண்களெலாம் இகழா நின்றார் இனியமொழித்
தெள்ளார் அமுதே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
மாலே றுடைத்தாங் கொடிஉடையார் வளஞ்சேர் ஒற்றி மாநகரார்
பாலே றணிநீற் றழகர்அவர் பாவி யேனைப் பரிந்திலரே
கோலே றுண்ட மதன்கரும்பைக் குனித்தான் அம்புங் கோத்தனன்காண்
சேலே றுண்கண் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
பொய்யர் உளத்துப் புகுந்தறியார் போத னொடுமால் காண்பரிதாம்
ஐயர் திருவாழ் ஒற்றிநகர் அமர்ந்தார் இன்னும் அணைந்திலரே
வைய மடவார் நகைக்கின்றார் மாரன் கணையால் திகைக்கின்றேன்
செய்ய முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
நந்திப் பரியார் திருஒற்றி நாதர் அயன்மால் நாடுகினும்
சந்திப் பரியார் என்அருமைத் தலைவர் இன்னுஞ் சார்ந்திலரே
அந்திப் பொழுதோ வந்ததினி அந்தோ மதியம் அனல்சொரியும்
சிந்திப் புடையேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
என்ஆ ருயிர்க்கோர் துணையானார் என்ஆண் டவனார் என்னுடையார்
பொன்னார் ஒற்றி நகர்அமர்ந்தார் புணர்வான் இன்னும் போந்திலரே
ஒன்னார் எனவே தாயும்எனை ஒறுத்தாள் நானும் உயிர்பொறுத்தேன்
தென்னார் குழலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
மாணி உயிர்காத் தந்தகனை மறுத்தார் ஒற்றி மாநகரார்
காணி உடையார் உலகுடையார் கனிவாய் இன்னுங் கலந்திலரே
பேணி வாழாப் பெண்எனவே பெண்க ளெல்லாம் பேசுகின்றார்
சேணின் றிழிந்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
வன்சொற் புகலார் ஓர்உயிரும் வருந்த நினையார் மனமகிழ
இன்சொற் புகல்வார் ஒற்றியுளார் என்நா யகனார் வந்திலரே
புன்சொற் செவிகள் புகத்துயரம் பொறுத்து முடியேன் புலம்பிநின்றேன்
தென்சொற் கிளியே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
எட்டிக் கனியும் மாங்கனிபோல் இனிக்க உரைக்கும் இன்சொலினார்
தட்டிற் பொருந்தார் ஒற்றியில்வாழ் தலைவர் இன்னும் சார்ந்திலரே
மட்டிற் பொலியும் மலர்க்கணைசெல் வழியே பழிசெல் வழிஅன்றோ
தெட்டிற் பொலியும் விழியாய்நான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
காலை மலர்ந்த கமலம்போல் கவின்செய் முகத்தார் கண்நுதலார்
சோலை மலர்ந்த ஒற்றியினார் சோகந் தீர்க்க வந்திலரே
மாலை மலர்ந்த மையல்நோய் வசந்தம் அதனால் வளர்ந்ததையோ
சேலை விழியாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
உலகம் உடையார் என்னுடைய உள்ளம் உடையார் ஒற்றியினார்
அலகில் புகழார் என்தலைவர் அந்தோ இன்னும் அணைந்திலரே
கலகம் உடையார் மாதர்எலாம் கல்நெஞ் சுடையார் தூதர்எலாம்
திலக முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
மாலும் அறியான் அயன்அறியான் மறையும் அறியா வானவர்எக்
காலும் அறியார் ஒற்றிநிற்குங் கள்வர் அவரைக் கண்டிலனே
கோலும் மகளிர் அலர்ஒன்றோ கோடா கோடி என்பதல்லால்
சேலுண் விழியாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
உந்து மருத்தோ டைம்பூதம் ஆனார் ஒற்றி யூர்அமர்ந்தார்
இந்து மிருத்தும் சடைத்தலையார் என்பால் இன்னும் எய்திலரே
சந்து பொறுத்து வார்அறியேன் தமிய ளாகத் தளர்கின்றேன்
சிந்துற் பவத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
ஆடல் அழகர் அம்பலத்தார் ஐயா றுடையார் அன்பர்களோ(டு)
ஊடல் அறியார் ஒற்றியினார் உவகை ஓங்க உற்றிலரே
வாடல் எனவே எனைத்தேற்று வாரை அறியேன் வாய்ந்தவரைத்
தேடல் அறியேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
தொழுது வணங்கும் சுந்தரர்க்குத் தூது நடந்த சுந்தரனார்
அழுது வணங்கும் அவர்க்குமிக அருள்ஒற் றியினார் அணைந்திலரே
பொழுது வணங்கும் இருண்மாலைப் பொழுது முடுகிப் புகுந்ததுகாண்
செழுமை விழியாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
பாவம் அறுப்பார் பழிஅறுப்பார் பவமும் அறுப்பார் அவம்அறுப்பார்
கோவம் அறுப்பார் ஒற்றியில்என் கொழுநர் இன்னும் கூடிலரே
தூவ மதன்ஐங் கணைமாதர் தூறு தூவத் துயர்கின்றேன்
தேவ மடவாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர் ஒற்றி நகரார் பற்றிலரைச்
செயிர்க்குள் அழுத்தார் மணிகண்டத் தேவர் இன்னும் சேர்ந்திலரே
வெயிற்கு மெலிந்த செந்தளிர்போல் வேளம் பதனால் மெலிகின்றேன்
செயற்கை மடவாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
ஊனம் அடையார் ஒற்றியினார் உரைப்பார் உள்ளத் துறைகின்றோர்
கானம் உடையார் நாடுடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே
மானம் உடையார் எம்முறவோர் வாழா மைக்கே வருந்துகின்றார்
தீனம் அடையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
மலையை வளைத்தார் மால்விடைமேல் வந்தார் வந்தென் வளையினொடு
கலையை வளைத்தார் ஒற்றியில்என் கணவர் என்னைக் கலந்திலரே
சிலையை வளைத்தான் மதன்அம்பு தெரிந்தான் விடுக்கச் சினைக்கின்றான்
திலக நுதலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
பிரமன் தலையில் பலிகொள்ளும் பித்தர் அருமைப் பெருமானார்
உரமன் னியசீர் ஒற்றிநகர் உள்ளார் இன்னும் உற்றிலரே
அரமன் னியவேற் படையன்றோ அம்மா அயலார் அலர்மொழிதான்
திரமன் னுகிலேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
பவள நிறத்தார் திருஒற்றிப் பதியில் அமர்ந்தார் பரசிவனார்
தவள நிறநீற் றணிஅழகர் தமியேன் தன்னைச் சார்ந்திலரே
துவளும் இடைதான் இறமுலைகள் துள்ளா நின்ற தென்னளவோ
திவளும் இழையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
வண்டார் கொன்றை வளர்சடையார் மதிக்க எழுந்த வல்விடத்தை
உண்டார் ஒற்றி யூர்அமர்ந்தார் உடையார் என்பால் உற்றிலரே
கண்டார் கண்ட படிபேசக் கலங்கிப் புலம்பல் அல்லாது
செண்டார் முலையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
உணவை இழந்தும் தேவர்எலாம் உணரா ஒருவர் ஒற்றியில்என்
கணவர் அடியேன் கண்அகலாக் கள்வர் இன்னும் கலந்திலரே
குணவர் எனினும் தாய்முதலோர் கூறா தெல்லாம் கூறுகின்றார்
திணிகொள் முலையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
வாக்குக் கடங்காப் புகழுடையார் வல்லார் ஒற்றி மாநகரார்
நோக்குக் கடங்கா அழகுடையார் நோக்கி என்னை அணைந்திலரே
ஊக்க மிகும்ஆர் கலிஒலிஎன் உயிர்மேல் மாறேற் றுரப்பொலிகாண்
தேக்கங் குழலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
தரையிற் கீறிச் சலந்தரனைச் சாய்த்தார் அந்தச் சக்கரமால்
வரையற் களித்தார் திருஒற்றி வாணர் இன்னும் வந்திலரே
கரையிற் புணர்ந்த நாரைகளைக் கண்டேன் கண்ட வுடன்காதல்
திரையிற் புணர்ந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
பெற்றம் இவரும் பெருமானார் பிரமன் அறியாப் பேர்ஒளியாய்
உற்ற சிவனார் திருஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
எற்றென் றுரைப்பேன் செவிலி அவள் ஏறாமட்டும் ஏறுகின்றாள்
செற்றம் ஒழியாள் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
போக முடையார் பெரும்பற்றப் புலியூர் உடையார் போதசிவ
யோக முடையார் வளர்ஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
சோகம் உடையேன் சிறிதேனும் துயிலோ அணையா குயில்ஒழியா
தேகம் அயர்ந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
தாமப் புயனார் சங்கரனார் தாயில் இனியார் தற்பரனார்
ஓமப் புகைவான் உறும்ஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
காமப் பயலோ கணைஎடுத்தான் கண்ட மகளீர் பழிதொடுத்தார்
சேமக் குயிலே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
ஆரூர் உடையார் அம்பலத்தார் ஆலங் காட்டார் அரசிலியார்
ஊரூர் புகழும் திருஒற்றி யூரார் இன்னும் உற்றிலரே
வாரூர் முலைகள் இடைவருத்த மனநொந் தயர்வ தன்றிஇனிச்
சீரூர் அணங்கே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
காலங் கடந்தார் மால்அயன்தன் கருத்துங் கடந்தார் கதிகடந்தார்
ஞாலங் கடந்த திருஒற்றி நாதர் இன்னும் நண்ணிலரே
சாலங் கடந்த மனந்துணையாய்த் தனியே நின்று வருந்தல்அல்லால்
சீலங் கடந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
சங்கக் குழையார் சடைமுடியார் சதுரர் மறையின் தலைநடிப்பார்
செங்கட் பணியார் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலரே
மங்கைப் பருவம் மணமில்லா மலர்போல் ஒழிய வாடுகின்றேன்
திங்கள் முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.



