திருவருட்பா  9. அவலத் தழுங்கல்

ஊதி  யம்  பெறா  ஒதயினேன்  மதிபோய் 
உழலும்  பாவியேன்  உண்மைஒன்  றறியேன் 
வாதி  யம்புறும்  வஞ்சகர்  உடனே 
வாய்இ  ழுக்குற  வன்மைகள்  பேசி 
ஆதி  எம்பெரு  மான்உனை  மறந்தேன் 
அன்பி  லாதஎன்  வன்பினை  நினைக்கில் 
தீதி  யம்பிய  நஞ்சமும்  கலங்கும் 
திகழும்  ஒற்றியூர்த்  தியாகமா  மணியே. 
1
கல்இ  கந்தவன்  நெஞ்சகக்  கொடியேன் 
கயவர்  தங்களுள்  கலந்துநாள்  தோறும் 
மல்இ  கந்தவாய்  வாதமிட்  டுலறி 
வருந்து  கின்றதுன்  மார்க்கத்தை  நினைக்கில் 
இல்இ  கந்தஎன்  மீதெனக்  கேதான் 
இகலும்  கோபமும்  இருக்கின்ற  தானால் 
தில்லை  யாய்உன்தன்  உளத்துக்கென்  னாமோ 
திகழும்  ஒற்றியூர்த்  தியாகமா  மணியே. 
2
கைத  வத்தர்தம்  களிப்பினில்  களித்தே 
காலம்  போக்கினேன்  களைகண்மற்  றறியேன் 
செய்த  வத்தர்தம்  திறம்சிறி  துணரேன் 
செய்வ  தென்னைநின்  திருவருள்  பெறவே 
எய்த  வத்திரு  அருளெனக்  கிரங்கி 
ஈயில்  உண்டுமற்  றின்றெனில்  இன்றே 
செய்த  வத்திரு  மடந்தையர்  நடனம் 
திகழும்  ஒற்றியூர்த்  தியாகமா  மணியே. 
3
அழுத  பிள்ளைக்கே  பால்உண  வளிப்பாள் 
அன்னை  என்பர்கள்  அழவலி  இல்லாக் 
கொழுது  நேர்சிறு  குழவிக்கும்  கொடுப்பாள் 
குற்றம்  அன்றது  மற்றவள்  செயலே 
தொழுது  நின்னடி  துதிக்கின்றோர்க்  கெனவே 
துட்ட  னேனுக்கும்  சூழ்ந்தருள்  செயலாம் 
செழுது  மாதவி  மலர்திசை  மணக்கத் 
திகழும்  ஒற்றியூர்த்  தியாகமா  மணியே. 
4
உள்ளி  யோஎன  அலறிநின்  றேத்தி 
உருகி  நெக்கிலா  உளத்தன்யான்  எனினும் 
வள்ளி  யோய்உனை  மறக்கவும்  மாட்டேன் 
மற்றைத்  தேவரை  மதிக்கவும்  மாட்டேன் 
வெள்ளி  யோவெனப்  பொன்மகிழ்  சிறக்க 
விரைந்து  மும்மதில்  வில்வளைத்  தெரித்தோய் 
தெள்ளி  யோர்புகழ்ந்  தரகர  என்னத் 
திகழும்  ஒற்றியூர்த்  தியாகமா  மணியே. 
5
விருப்பி  லேன்திரு  மால்அயன்  பதவி 
வேண்டிக்  கொள்கென  விளம்பினும்  கொள்ளேன் 
மருப்பின்  மாஉரி  யாய்உன்தன்  அடியார் 
மதிக்கும்  வாழ்வையே  மனங்கொடு  நின்றேன் 
ஒருப்ப  டாதஇவ்  வென்னள  வினிஉன் 
உள்ளம்  எப்படி  அப்படி  அறியேன் 
திருப்பு  யாசல  மன்னர்மா  தவத்தோர் 
திகழும்  ஒற்றியூர்த்  தியாகமா  மணியே. 
6
நிலையி  லாஉல  கியல்படும்  மனத்தை 
நிறுத்தி  லேன்ஒரு  நியமமும்  அறியேன் 
விலையி  லாமணி  யேஉனை  வாழ்த்தி 
வீட்டு  நன்னெறிக்  கூட்டென  விளம்பேன் 
அலையில்  ஆர்ந்தெழும்  துரும்பென  அலைந்தேன் 
அற்ப  னேன்திரு  அருளடை  வேனே 
சிலையில்  ஆர்அழல்  கணைதொடுத்  தவனே 
திகழும்  ஒற்றியூர்த்  தியாகமா  மணியே. 
7
காயம்  என்பதா  காயம்என்  றறியேன் 
கலங்கி  னேன்ஒரு  களைகணும்  இல்லேன் 
சேய  நன்னெறி  அணித்தெனக்  காட்டும் 
தெய்வ  நின்அருள்  திறம்சிறி  தடையேன் 
தூய  நின்அடி  யவருடன்  கூடித் 
தொழும்பு  செய்வதே  சுகம்எனத்  துணியேன் 
தீய  னேன்தனை  ஆள்வதெவ்  வாறோ 
திகழும்  ஒற்றியூர்த்  தியாகமா  மணியே. 
8
புன்னு  னிப்படும்  துளியினும்  சிறிய 
போகம்  வேட்டுநின்  பொன்அடி  மறந்தேன் 
என்னி  னிப்படும்  வண்ணம்அஃ  தறியேன் 
என்செய்  கேன்எனை  என்செயப்  புகுகேன் 
மின்னி  னில்பொலி  வேணியம்  பெருமான் 
வேற  லேன்எனை  விரும்பல்உன்  கடனே 
தென்ன  னிப்படும்  சோலைசூழ்ந்  தோங்கித் 
திகழும்  ஒற்றியூர்த்  தியாகமா  மணியே. 
9
அடிய  னேன்அலன்  என்னினும்  அடியேன் 
ஆக  நின்றனன்  அம்மைஇம்  மையினும் 
கடிய  னேன்பிழை  யாவையும்  பொறுக்கக் 
கடன்உ  னக்கலால்  கண்டிலன்  ஐயா 
பொடிகொள்  மேனிஎம்  புண்ணிய  முதலே 
புன்னை  யஞ்சடைப்  புங்கவர்  ஏறே 
செடியர்  தேடுறாத்  திவ்விய  ஒளியே 
திகழும்  ஒற்றியூர்த்  தியாகமா  மணியே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com