திருவருட்பா  81. தரிசனப் பதிகம்

திருவார்  பொன்னம்  பலநடுவே  தெள்ளார்  அமுதத்  திரள்அனைய 
உருவார்  அறிவா  னந்தநடம்  உடையார்  அடியார்க்  குவகைநிலை 
தருவார்  அவர்தம்  திருமுகத்தே  ததும்பும்  இளவெண்  ணகைகண்டேன் 
இருவா  தனைஅற்  றந்தோநான்  இன்னும்  ஒருகால்  காண்பேனோ. 
1
பொன்நா  யகனும்  புரந்தரனும்  பூவாழ்  பவனும்  புகழ்ந்தேத்த 
மின்னார்  பொன்னம்  பலநடுவே  விளங்கும்  கருணை  விழிவழங்கும் 
அன்னார்  அறிவா  னந்தநடம்  ஆடும்  கழல்கண்  டகங்குளிர்ந்தேன் 
என்நா  யகனார்  அவர்கழலை  இன்னும்  ஒருகால்  காண்பேனோ. 
2
தாயிற்  பெரிய  கருணையினார்  தலைமா  லையினார்  தாழ்சடையார் 
வாயிற்  கினிய  புகழுடைய  வள்ளல்  அவர்தந்  திருஅழகைக் 
கோயிற்  கருகே  சென்றுமனம்  குளிரக்  கண்டேன்  பிரிவுற்றேன் 
ஈயில்  சிறியேன்  அவர்  அழகை  இன்னும்  ஒருகால்  காண்பேனோ. 
3
புன்கண்  அகற்றும்  மெய்யடியார்  போற்றும்  பொன்னம்  பலநடுவே 
வன்கண்  அறியார்  திருநடஞ்செய்  வரதர்  அமுதத்  திருமுகத்தை 
முன்கண்  உலகில்  சிறியேன்செய்  முழுமா  தவத்தால்  கண்டேன்நான் 
என்கண்  அனையார்  அவர்முகத்தை  இன்னும்  ஒருகால்  காண்பேனோ. 
4
அன்புற்  றடியார்  தொழுதேத்த  அணியார்  மணிப்பொன்  அம்பலத்தே 
வன்புற்  றழியாப்  பெருங்கருணை  மலையார்  தலையார்  மாலையினார் 
மன்புற்  றரவார்  கச்சிடையின்  வயங்க  நடஞ்செய்  வதுகண்டேன் 
இன்புற்  றடியேன்  அவர்நடத்தை  இன்னும்  ஒருகால்  காண்பேனோ. 
5
இம்மா  நிலத்தில்  சிவபதமீ  தென்னும்  பொன்னம்  பலநடுவே 
அம்மால்  அறியா  அடிகள்அடி  அசைய  நடஞ்செய்  வதுகண்டேன் 
எம்மால்  அறியப்  படுவதல  என்என்  றுரைப்பேன்  ஏழையன்யான் 
எம்மான்  அவர்தந்  திருநடத்தை  இன்னும்  ஒருகால்  காண்பேனோ. 
6
சிறியேன்  தவமோ  எனைஈன்றாள்  செய்த  தவமோ  யான்அறியேன் 
மறியேர்  கரத்தார்  அம்பலத்தே  வாழும்  சிவனார்  தமைக்கண்டேன் 
பிறியேன்  எனினும்  பிரிந்தேன்நான்  பேயேன்  அந்தப்  பிரிவினைக்கீழ் 
எறியேன்  அந்தோ  அவர்தம்மை  இன்னும்  ஒருகால்  காண்பேனோ. 
7
அருளே  வடிவாய்  அம்பலத்தே  ஆடும்  பெருமான்  அடிகள்தமைத் 
தெருளே  வடிவாம்  அடியவர்போல்  சிறியேன்  கண்டேன்  சீர்உற்றேன் 
மருளே  வடிவேன்  ஆதலினால்  மறந்தே  பிரிந்தே  மதிகெட்டேன் 
இருளேர்  மனத்தேன்  அவர்தமைநான்  இன்னும்  ஒருகால்  காண்பேனோ. 
8
அன்னோ  திருஅம்  பலத்தேஎம்  ஐயர்  உருக்கண்  டேன்அதுதான் 
பொன்னோ  பவளப்  பொருப்பதுவோ  புதுமா  ணிக்க  மணித்திரளோ 
மின்னோ  விளக்கோ  விரிசுடரோ  மேலை  ஒளியோ  என்  உரைப்பேன் 
என்னோ  அவர்தந்  திருஉருவை  இன்னும்  ஒருகால்  காண்பேனோ. 
9
பொன்என்  றுரைக்கும்  அம்பலத்தே  புனித  னார்தம்  அழகியலை 
உன்என்  றுரைப்பேன்  என்னேஎன்  உள்ளம்  சிறிதும்  உணர்ந்ததிலை 
மின்என்  றுரைக்கும்  படிமூன்று  விளக்கும்  மழுங்கும்  எனில்அடியேன் 
என்என்  றுரைப்பேன்  அவர்அழகை  இன்னும்  ஒருகால்  காண்பேனோ. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com