திருவருட்பா  80. விண்ணப்பப் பதிகம்

தண்ணார்  மதிபோல்  சீதளவெண்  தரளக்  கவிகைத்  தனிநிழற்கீழ்க் 
கண்ணார்  செல்வச்  செருக்கினர்தம்  களிப்பில்  சிறிய  கடைநாயேன் 
பெண்ணார்  பாகப்  பெருந்தகைதன்  பெரிய  கருணைக்  குரியம்என்றே 
எண்ணா  நின்று  களிக்கின்றேன்  ஆரூர்  எந்தாய்  இரங்காயே. 
1
இரங்கா  திருந்தால்  சிறியேனை  யாரே  மதிப்பார்  இழிந்தமனக் 
குரங்கால்  அலைப்புண்  டலைகின்ற  கொடிய  பாவி  இவன்என்றே 
உரங்கா  தலித்தோர்  சிரிப்பார்நான்  உலகத்  துயரம்  நடிக்கின்ற 
அரங்காக்  கிடப்பேன்  என்செய்வேன்  ஆரூர்  அமர்ந்த  அருமணியே. 
2
மணியார்  கண்டத்  தெண்டோள்செவ்  வண்ணப்  பவள  மாமலையே 
அணியால்  விளங்கும்  திருஆரூர்  ஆரா  அமுதே  அடிச்சிறியேன் 
தணியா  உலகச்  சழக்கிடையே  தளர்ந்து  கிடந்து  தவிக்கின்றேன் 
திணியார்  முருட்டுக்  கடைமனத்தேன்  செய்வ  தொன்றும்  தெரியேனே. 
3
தெரியத்  தெரியும்  தெரிவுடையார்  சிவாநு  பவத்தில்  சிறக்கின்றார் 
பிரியப்  பிரியும்  பெரும்பாவி  அடியேன்  பிழையில்  பிழைக்கின்றேன் 
துரியப்  பொருளே  அணிஆரூர்ச்  சோதி  மணிநீ  தூயஅருள் 
புரியப்  பெறுவேன்  எனில்அவர்போல்  யானும்  சுகத்திற்  பொலிவேனே. 
4
பொலிவேன்  கருணை  புரிந்தாயேல்  போதா  னந்தக்  கடல்ஆடி 
மலிவேன்  இன்ப  மயமாவேன்  ஆரூர்  மணிநீ  வழங்காயேல் 
மெலிவேன்  துன்பக்  கடல்மூழ்கி  மேவி  எடுப்பார்  இல்லாமல் 
நலிவேன்  அந்தோ  அந்தோநின்  நல்ல  கருணைக்  கழகன்றே. 
5
கருணைக்  கடலே  திருஆரூர்க்  கடவுட்  சுடரே  நின்னுடைய 
அருணக்  கமல  மலரடிக்கே  அடிமை  விழைந்தேன்  அருளாயேல் 
வருணக்  கொலைமா  பாதகனாம்  மறையோன்  தனக்கு  மகிழ்ந்தன்று 
தருணக்  கருணை  அளித்தபுகழ்  என்னாம்  இந்நாள்  சாற்றுகவே. 
6
இந்நாள்  அடியேன்  பிழைத்தபிழை  எண்ணி  இரங்காய்  எனில்அந்தோ 
அந்நாள்  அடிமை  கொண்டனையே  பிழையா  தொன்றும்  அறிந்திலையோ 
பொன்னார்  கருணைக்  கடல்இன்று  புதிதோ  பிறர்பால்  போயிற்றோ 
என்நா  யகனே  திருஆரூர்  எந்தாய்  உள்ளம்  இரங்கிலையே. 
7
உள்ளக்  கவலை  ஒருசிறிதும்  ஒருநா  ளேனும்  ஒழிந்திடவும் 
வெள்ளக்  கருணை  இறையேனும்  மேவி  யிடவும்  பெற்றறியேன் 
கள்ளக்  குரங்காய்  உழல்கின்ற  மனத்தேன்  எனினும்  கடையேனைத் 
தள்ளத்  தகுமோ  திருஆரூர்  எந்தாய்  எந்தாய்  தமியேனே. 
8
எந்தாய்  ஒருநாள்  அருள்வடிவின்  எளியேன்  கண்டு  களிப்படைய 
வந்தாய்  அந்தோ  கடைநாயேன்  மறந்து  விடுத்தேன்  மதிகெட்டேன் 
செந்தா  மரைத்தாள்  இணைஅன்றே  சிக்கென்  றிறுகப்  பிடித்தேனேல் 
இந்தார்  சடையாய்  திருஆரூர்இறைவா  துயரற்  றிருப்பேனே. 
9
இருப்பு  மனத்துக்  கடைநாயேன்  என்செய்  வேன்நின்  திருவருளாம் 
பொருப்பில்  அமர்ந்தார்  அடியர்எலாம்  அந்தோ  உலகப்  புலைஒழுக்காம் 
திருப்பில்  சுழன்று  நான்ஒருவன்  திகைக்கின்  றேன்ஓர்  துணைகாணேன் 
விருப்பில்  கருணை  புரிவாயோ  ஆரூர்  தண்ணார்  வியன்அமுதே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com