
எளியேன்நின் திருமுன்பே என்உரைக்கேன் பொல்லாத
களியேன் கொடுங்காமக் கன்மனத்தேன் நன்மையிலா
வெளியேன் வெறியேன்தன் மெய்ப்பிணியை ஒற்றியில்வாழ்
அளியோய்நீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
முன்னேசெய் வெவ்வினைதான் மூண்டதுவோ அல்லதுநான்
இன்னே பிழைதான் இயற்றியதுண் டோஅறியேன்
பொன்னேர் புரிசடைஎம் புண்ணியனே என்நோயை
அன்னேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை
வெப்பார் உளத்தினர்போல் வெம்மைசெயும் வெம்பிணியை
எப்பா லவர்க்கும் இறைவனாம் என்அருமை
அப்பாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
ஓவா மயல்செய் உலகநடைக் குள்துயரம்
மேவா உழல்கின்ற வெண்மையேன் மெய்ந்நோயைச்
சேவார் கொடிஎம் சிவனே சிவனேயோ
ஆவாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
பொய்யாம் மலஇருட்டுப் பொத்தரிடை வீழ்ந்துழலும்
கையாம் நெறியேன் கலங்கவந்த வெம்பிணியை
மையார் மிடற்றெம் மருந்தே மணியேஎன்
ஐயாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
இம்மா நிலத்தில் இடருழத்தல் போதாதே
விம்மா அழுங்கஎன்றன் மெய்உடற்றும் வெம்பிணியைச்
செம்மான் மழுக்கரங்கொள் செல்வச் சிவமேஎன்
அம்மாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
புரைசேரும் நெஞ்சப் புலையனேன் வன்காமத்
தரைசேரும் துன்பத் தடங்கடலேன் வெம்பிணியை
விரைசேரும் கொன்றை விரிசடையாய் விண்ணவர்தம்
அரைசேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
இத்தா ரணியில் எளியோரைக் கண்டுமி
வித்தாரம் பேசும் வெறியேன்தன் மெய்ப்பிணியைக்
கொத்தார் குழலிஒரு கூறுடைய கோவேஎன்
அத்தாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
மறியேர் விழியார் மயக்கினிடை மாழாந்த
சிறியேன் அடியேன் தியங்கவந்த வல்நோயைச்
செறிவே பெறுந்தொண்டர் சிந்தை தனில்ஓங்கும்
அறிவேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
துன்பே சுமையாச் சுமக்கின்ற நாயேனை
வன்பேசெய் துள்ள மயக்கிநின்ற வன்நோயை
இன்பே அருள்கின்ற என்ஆ ருயிரேஎன்
அன்பேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.



