
ஒப்பாரும் இல்லாத உத்தமனே ஒற்றியில்என்
அப்பாஉன் பொன்னடிக்கே அன்பிலேன் ஆனாலும்
தப்பா தகமெலியச் சஞ்சலத்தால் ஏங்குகின்ற
இப்பா தகத்தேற் கிரங்கினால் ஆகாதோ.
எஞ்சா இடரால் இரும்பிணியால் ஏங்கிமனம்
பஞ்சாக நொந்து பரதவிக்கும் நாயேனைச்
செஞ்சாலி ஓங்கும் திருவொற்றி யப்பாநீ
அஞ்சாதே என்றுன் அருள்கொடுத்தால் ஆகாதோ.
பற்றும் செழுந்தமிழால் பாடுகின்றோர் செய்தபெருங்
குற்றம் குணமாகக் கொள்ளும் குணக்கடலே
மற்றங்கும் எண்தோள் மலையே மரகதமே
பெற்றிங் கடியேன் பிணிகெடுத்தால் ஆகாதோ.
எந்தையே என்பவர்தம் இன்னமுதே என்உரிமைத்
தந்தையே தாயே தமரேஎன் சற்குருவே
சிந்தையே ஓங்கும் திருவொற்றி ஐயாஎன்
நிந்தையே நீங்க நிழல்அளித்தால் ஆகாதோ.
உள்ளும் திருத்தொண்டர் உள்ளத் தெழுங்களிப்பே
கொள்ளும் சிவானந்தக் கூத்தாஉன் சேவடியை
நள்ளும் புகழுடைய நல்லோர்கள் எல்லாரும்
எள்ளும் புலையேன் இழிவொழித்தால் ஆகாதோ.
கோதைஓர் கூறுடைய குன்றமே மன்றமர்ந்த
தாதையே ஒற்றித் தலத்தமர்ந்த சங்கரனே
தீதையே நாள்தோறும் செய்தலைந்து வாடுமிந்தப்
பேதையேன் செய்த பிழைபொறுத்தால் ஆகாதோ.
முத்திக்கு வித்தே முழுமணியே முத்தர்உளம்
தித்திக்கும் தேனே சிவமே செழுஞ்சுடரே
சத்திக்கும் நாதத் தலங்கடந்த தத்துவனே
எத்திக்கும் இல்லேன் இளைப்பொழித்தால் ஆகாதோ.
வஞ்சமிலார் உள்ளம் மருவுகின்ற வான்சுடரே
கஞ்சமுளான் போற்றும் கருணைப் பெருங்கடலே
நஞ்சமுதாக் கொண்டருளும் நல்லவனே நின்அலதோர்
தஞ்சமிலேன் துன்பச் சழக்கொழித்தால் ஆகாதோ.
சேய்பிழையைத் தாய்அறிந்தும் சீறாள் பொறுப்பாள்இந்
நாய்பிழையை நீபொறுக்க ஞாயமும்உண் டையாவே
தேய்மதிபோல் நெஞ்சம் தியக்கம்உறச் சஞ்சலத்தால்
வாய்அலறி வாடும்எனை வாஎன்றால் ஆகாதோ.
கண்ணுள் மணிபோல் கருதுகின்ற நல்லோரை
எண்ணும் கணமும்விடுத் தேகாத இன்னமுதே
உண்ணும் உணவுக்கும் உடைக்கும்முயன் றோடுகின்ற
மண்ணுலகத் தென்றன் மயக்கறுத்தால் ஆகாதோ.



