திருவருட்பா  64. நெஞ்சு நிலைக் கிரங்கல்

ஆளாக  நின்பொன்  அடிக்கன்பு  செய்திட  ஐயநெடு 
நாளாக  இச்சைஉண்  டென்னைசெய்  கேன்கொடு  நங்கையர்தம் 
மாளா  மயல்சண்ட  மாருதத்  தால்மன  வாசிஎன்சொல் 
கேளா  தலைகின்ற  தால்ஒற்றி  மேவும்  கிளர்ஒளியே. 
1
ஒளியாய்  ஒளிக்குள்  ஒளிர்ஒளி  யேஒற்றி  உத்தமநீ 
அளியா  விடில்இதற்  கென்னைசெய்  கேன்அணங்  கன்னவர்தம் 
களியால்  களித்துத்  தலைதெரி  யாது  கயன்றுலவா 
வளியாய்ச்  சுழன்றிவண்  மாயா  மனம்எனை  வாதிப்பதே. 
2
மாயா  மனம்எவ்  வகைஉரைத்  தாலும்  மடந்தையர்  பால் 
ஓயாது  செல்கின்ற  தென்னைசெய்  கேன்தமை  உற்றதொரு 
நாயாகி  னும்கை  விடார்உல  கோர்உனை  நான்  அடுத்தேன் 
நீயாகி  லுஞ்சற்  றிரங்குகண்  டாய்ஒற்றி  நின்மலனே. 
3
மலஞ்சான்ற  மங்கையர்  கொங்கையி  லேநசை  வாய்த்துமனம் 
சலஞ்சான்ற  தால்இதற்  கென்னைசெய்  கேன்நின்  சரண்அன்றியே 
வலஞ்சான்ற  நற்றுணை  மற்றறி  யேன்ஒற்றி  வானவனே 
நலஞ்சான்ற  ஞானத்  தனிமுத  லேதெய்வ  நாயகனே. 
4
நாயினும்  கீழ்ப்பட்ட  என்நெஞ்சம்  நன்கற்ற  நங்கையர்பால் 
ஏயினும்  செல்கின்ற  தென்னைசெய்  கேன்உனை  ஏத்தியிடேன் 
ஆயினும்  இங்கெனை  ஆட்கொளல்  வேண்டும்ஐ  யாஉவந்த 
தாயினும்  நல்லவ  னேஒற்றி  மேவும்  தயாநிதியே. 
5
நிதியேநின்  பொன்னடி  ஏத்தாது  நெஞ்சம்  நிறைமயலாம் 
சதியே  புரிகின்ற  தென்னைசெய்  கேன்உனைத்  தாழலர்தம் 
விதியே  எனக்கும்  விதித்ததன்  றோஅவ்  விதியும்இள 
மதியேர்  சடைஅண்ண  லேஒற்றி  யூர்ஒளி  மாணிக்கமே. 
6
மாணாத  என்நெஞ்சம்  வல்நஞ்  சனைய  மடந்தையர்பால் 
நாணாது  செல்கின்ற  தென்னைசெய்  கேன்சிவ  ஞானியர்தம் 
கோணாத  உள்ளத்  திருக்கோயில்  மேவிக்  குலவும்ஒற்றி 
வாணாஎன்  கண்ணினுண்  மாமணி  யேஎன்றன்  வாழ்முதலே. 
7
வாழாத  நெஞ்சம்  எனைஅலைத்  தோடி  மடந்தையர்பால் 
வீழாத  நாளில்லை  என்னைசெய்  கேன்உன்  விரைமலர்த்தாள் 
தாழாத  குற்றம்  பொறுத்தடி  யேன்தனைத்  தாங்கிக்கொள்வாய் 
சூழா  தவரிடம்  சூழாத  ஒற்றிச்  சுடர்க்குன்றமே. 
8
குன்றேர்  முலைச்சியர்  வன்மல  ஊத்தைக்  குழியில்மனம் 
சென்றே  விழுகின்ற  தென்னைசெய்  கேன்எம்  சிவக்கொழுந்தே 
நன்றே  சதானந்த  நாயக  மேமறை  நான்கினுக்கும் 
ஒன்றே  உயர்ஒளி  யேஒற்றி  யூர்எம்  உயிர்த்துணையே. 
9
துணையாம்உன்  பொன்னடி  ஏத்தா  மனமது  தோகையர்கண் 
கணையால்  இளைக்கின்ற  தென்னைசெய்  கேன்என்றன்  கண்இரண்டின் 
இணையாம்  பரஞ்சுட  ரேஅழி  யாநல  மேஇன்பமே 
பணையார்  திருவொற்றி  யூர்அர  சேஎம்  பரம்பொருளே. 
10
பொருளேநின்  பொன்னடி  உன்னாதென்  வன்மனம்  பூவையர்தம் 
இருளே  புரிகின்ற  தென்னைசெய்  கேன்அடி  யேன்மயங்கும் 
மருளே  தவிர்ந்துனை  வாழ்த்தி  வணங்கி  மகிழ்ந்திடநீ 
அருளே  அருட்கட  லேஒற்றி  மாநகர்  ஆள்பவனே. 
11

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com