
பொய்விடு கின்றிலன் என்றெம் புண்ணியா
கைவிடு கின்றியோ கடைய னேன்தனைப்
பைவிடம் உடையவெம் பாம்பும் ஏற்றநீ
பெய்விடம் அனையஎன் பிழைபொ றுக்கவே.
பொறுக்கினும் அன்றிஎன் பொய்மை நோக்கியே
வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன்
மறுக்கினும் தொண்டரை வலிய ஆண்டுபின்
சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே.
செல்லலும் சிறுமையும் சினமும் புல்லரைப்
புல்லலும் கொண்டஎன் பொய்மை கண்டுநீ
கொல்லலும் தகும்எனைக் கொன்றி டாதருள்
மல்லலும் தகும்சடா மகுட வள்ளலே.
வள்ளலே நின்அடி மலரை நண்ணிய
உள்ளலேன் பொய்மையை உன்னி என்னையாட்
கொள்ளலே இன்றெனில் கொடிய என்தனை
எள்ளலே அன்றிமற் றென்செய் கிற்பனே.
செய்யநன் றறிகிலாச் சிறிய னேன்தனைப்
பொய்யன்என் றெண்ணிநீ புறம்பொ ழிப்பையேல்
வையநின் றையவோ மயங்கல் அன்றியான்
உய்யநின் றுணர்குவ தொன்றும் இல்லையே.
இல்லை என்ப திலாஅருள் வெள்ளமே
தில்லை மன்றில் சிவபரஞ் சோதியே
வல்லை யான்செயும் வஞ்சமெ லாம்பொறுத்
தொல்லை இன்பம் உதவுதல் வேண்டுமே.
இல்லையே என்பதிங் கில்லை என்றருள்
நல்லையே நீஅருள் நயந்து நல்கினால்
கல்லையே அனையஎன் கன்ம நெஞ்சகம்
ஒல்லையே வஞ்சம்விட் டுவக்கும் உண்மையே.
உண்மையே அறிகிலா ஒதிய னேன்படும்
எண்மையே கண்டும்உள் இரக்கம் வைத்திலை
அண்மையே அம்பலத் தாடும் ஐயநீ
வண்மையே அருட்பெரு வாரி அல்லையோ.
அல்லலங் கடலிடை ஆழ்ந்த நாயினேன்
சொல்லலங் கடல்விடைத் தோன்றல் நின்அருள்
மல்லலங் கடலிடை மகிழ்ந்து மூழ்கினால்
கல்அலங் கடல்மனம் கனிதல் மெய்மையே.
மெய்மையே அறிகிலா வீண னேன்இவன்
உய்மையே பெறஉனை உன்னி ஏத்திடாக்
கைமையே அனையர்தம் கடையில் செல்லவும்
பொய்மையே உரைக்கவும் புணர்த்த தென்கொலோ.
என்னுடை வஞ்சக இயற்கை யாவையும்
பொன்னுடை விடையினோய் பொறுத்துக் கொண்டுநின்
தன்னுடை அன்பர்தம் சங்கம் சார்ந்துநான்
நின்னுடைப் புகழ்தனை நிகழ்த்தச் செய்கவே.
நிகழும்நின் திருவருள் நிலையைக் கொண்டவர்
திகழும்நல் திருச்சபை அதனுட் சேர்க்கமுன்
அகழுமால் ஏன்மாய் அளவும் செம்மலர்ப்
புகழுமா றருளுக பொறுக்க பொய்மையே.



