
சிந்தை நொந்துநொந் தயர்கின்றேன் சிவனே
செய்வ தோர்ந்திலேன் தீக்குண முடையேன்
வந்து நின்னடிக் காட்செய என்றால்
வஞ்ச நெஞ்சம்என் வசம்நின்ற திலையே
எந்தை நின்னருள் உண்டெனில் உய்வேன்
இல்லை என்னில்நான் இல்லைஉய்ந் திடலே
அந்தி வான்நிறத் தொற்றியூர் அரசே
அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
மாய நெஞ்சமோ நின்னடி வழுத்தா
வண்ண மென்தனை வலிக்கின்ற ததனால்
தீயன் ஆயினேன் என்செய்வேன் சிவனே
திருவ ருட்குநான் சேயனும் ஆனேன்
காய வாழ்க்கையில் காமமுண் டுள்ளம்
கலங்கு கின்றனன் களைகண்மற் றறியேன்
ஆய ஒற்றியூர் அண்ணலே தில்லை
அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
உன்னை உன்னிநெக் குருகிநின் றேத்த
உள்ளம் என்வசம் உற்றதின் றேனும்
என்னை ஆளுதல் உன்கடன் அன்றேல்
இரக்கம் என்பதுன் னிடத்திலை அன்றோ
முன்னை வல்வினை முடித்திடில் சிவனே
மூட னேனுக்கு முன்னிற்ப தெவனோ
அன்னை அப்பனே ஒற்றியூர் அரசே
அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
என்ன நான்சொலி நிறுத்தினும் நில்லா
தேகு கின்றதிவ் ஏழையேன் மனந்தான்
உன்ன தின்னருள் ஒருசிறி துண்டேல்
ஒடுக்கி நிற்பனால் உண்மைமற் றின்றேல்
இன்ன தென்றறி யாமல இருளில்
இடர்கொள் வேன்அன்றி என்செய்வேன் சிவனே
அன்ன துன்செயல் ஒற்றியூர் அரசே
அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
பாவி நெஞ்சம்என் பால்இரா தோடிப்
பாவை யார்மயல் படிந்துழைப் பதனால்
சேவி யாதஎன் பிழைபொறுத் தாளும்
செய்கை நின்னதே செப்பலென் சிவனே
காவி நேர்விழி மலைமகள் காணக்
கடலின் நஞ்சுண்டு கண்ணன்ஆ தியர்கள்
ஆவி ஈந்தருள் ஒற்றிஎம் இறையே
அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
மூட நெஞ்சம்என் மொழிவழி நில்லா
மோக வாரியின் முழுகுகின் றதுகாண்
தேட என்வசம் அன்றது சிவனே
திருவ ருட்கடல் திவலைஒன் றுறுமேல்
நாட நாடிய நலம்பெறும் அதனால்
நானும் உய்குவேன் நல்கிடல் வேண்டும்
ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப் புலியூர்
அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
கலங்கு கின்றஎன் கண்உன தருள்ஓர்
கடுகின் எல்லைதான் கலந்திடு மானால்
விலங்கு கின்றஎன் நெஞ்சம்நின் றிடுமால்
வேறு நான்பெறும் வேட்கையும் இன்றால்
மலங்கு கின்றதை மாற்றுவன் உனது
மலர்ப்பொன் தாளலால் மற்றிலன் சிவனே
அலங்கு கின்றசீர் ஒற்றியூர் இறையே
அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
மறைவ தென்னையும் மறைப்பது பொல்லா
வஞ்ச நெஞ்சமென் வசப்படல் இலைகாண்
இறைவ நின்னருட் கென்செய்வோம் எனவே
எண்ணி எண்ணிநான் ஏங்குகின் றனனால்
உறைவ துன்னடி மலர்அன்றி மற்றொன்
றுணர்ந்தி லேன்இஃ துண்மைநீ அறிதி
அறைவ தென்னநான் ஒற்றியூர் அரசே
அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
ஒருக ணப்பொழு தேனுநின் அடியை
உள்கி டாதுளம் ஓடுகின் றதனால்
திருக ணப்பெறும் தீயனேன் செய்யும்
திறம்அ றிந்திலேன் செப்பலென் சிவனே
வருக ணத்துடல் நிற்குமோ விழுமோ
மாயு மோஎன மயங்குவேன் தன்னை
அருக ணைத்தருள் ஒற்றியூர் இறையே
அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
யாது நின்கருத் தறிந்திலேன் மனமோ
என்வ சப்படா திருத்தலை உரைத்தேன்
தீது செய்யினும் பொறுத்தெனைச் சிவனே
தீய வல்வினைச் சேர்ந்திடா வண்ணம்
பாது காப்பதுன் பரம்இன்றேல் பலவாய்ப்
பகர்தல் என்னகாண் பழிவரும் உனக்கே
ஆது காண்டிஎம் ஒற்றியூர் அரசே
அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.



