
போகம் கொண்ட புணர்முலை மாதொரு
பாகம் கொண்ட படம்பக்க நாதரே
மாகம் கொண்ட வளம்பொழில் ஒற்றியின்
மோகம் கொண்டஎம் முன்நின் றருளிரோ.
தவள நீற்றுமெய்ச் சாந்தவி னோதரே
பவள மேனிப் படம்பக்க நாதரே
கவள வீற்றுக் கரிஉரி போர்த்தநீர்
இவளை ஒற்றிவிட் டெங்ஙனம் சென்றிரோ.
சீல மேவித் திகழ்அனல் கண்ஒன்று
பால மேவும் படம்பக்க நாதரே
ஞால மேவும் நவையைஅ கற்றமுன்
ஆலம் உண்டவர் அல்லிர்கொல் ஐயரே.
உடைகொள் கோவணத் துற்றஅ ழகரே
படைகொள் சூலப் படம்பக்க நாதரே
கடைகொள் நஞ்சுண்டு கண்டம்க றுத்தநீர்
இடையில் ஒற்றிவிட் டெங்ஙனம் சென்றிரோ.
நிறைய வாழ்தொண்டர் நீடுற வன்பவம்
பறைய நின்றப டம்பக்க நாதரே
உறைய மாணிக்கு யிர் அளித் திட்டநீர்
குறையி லாஒற்றிக் கோயிற்கண் உள்ளிரோ.
வணங்கொள் நாகம ணித்தலை ஐந்துடைப்
பணங்கொள் செல்வப்ப டம்பக்க நாதரே
கணங்கொள் காமனைக் காய்ந்துயிர் ஈந்தநீர்
வணங்கு வார்க்கென்கொல் வாய்திற வாததே.
நாட நல்இசை நல்கிய மூவர்தம்
பாடல் கேட்கும்ப டம்பக்க நாதரே
வாடல் என்றொரு மாணிக் களித்தநீர்
ஈடில் என்னள வெங்கொளித் திட்டிரோ.
சுலவு காற்றனல் தூயமண் விண்புனல்
பலவு மாகும்ப டம்பக்க நாதரே
நிலவு தண்மதி நீள்முடி வைத்தநீர்
குலவும் என்றன்கு றைதவிர்க் கீர்கொலோ.
அடியர் நெஞ்சத்த ருட்பெருஞ் சோதிஓர்
படிவ மாகும்ப டம்பக்க நாதரே
நெடிய மாலுக்கு நேமி அளித்தநீர்
மிடிய னேன்அருள் மேவ விரும்பிரோ.
மதிகொள் அன்பர்ம னமெனும் திவ்வியப்
பதிகொள் செல்வப்ப டம்பக்க நாதரே
விதிகொள் துன்பத்தை வீட்டி அளித்தநீர்
துதிகொள் வீர்என்து யரைத்து ரத்துமே.



