திருவருட்பா  14. காட்சிப் பெருமிதம்

திரைப  டாதசெ  ழுங்கட  லேசற்றும் 
உரைப  டாமல்ஒ  ளிசெய்பொன்  னேபுகழ் 
வரைப  டாதுவ  ளர்வல்லி  கேசநீ 
தரைப  டாக்கந்தை  சாத்திய  தென்கொலோ. 
1
சிந்தை  நின்றசி  வாநந்தச்  செல்வமே 
எந்தை  யேஎமை  ஆட்கொண்ட  தெய்வமே 
தந்தை  யேவலி  தாயத்த  லைவநீ 
கந்தை  சுற்றும்க  ணக்கது  என்கொலோ. 
2
வேலை  கொண்ட  விடம்உண்ட  கண்டனே 
மாலை  கொண்ட  வளர்வல்லி  கேசனே 
பாலை  கொண்ட  பராபர  நீபழஞ் 
சேலை  கொண்ட  திறம்இது  என்கொலோ. 
3
பன்னு  வார்க்கரு  ளும்பர  மேட்டியே 
மன்னும்  மாமணி  யேவல்லி  கேசனே 
உன்ன  நீஇங்கு  டுத்திய  கந்தையைத் 
துன்னு  வார்இல்லை  யோபரஞ்  சோதியே. 
4
கடுத்த  தும்பிய  கண்டஅ  கண்டனே 
மடுத்த  நற்புகழ்  வாழ்வல்லி  கேசநீ 
தொடுத்த  கந்தையை  நீக்கித்து  ணிந்தொன்றை 
உடுத்து  வார்இலை  யோஇவ்வு  லகிலே. 
5
ஆல்அ  டுத்தஅ  ரும்பொரு  ளேதிரு 
மால்அ  டுத்தும  கிழ்வல்லி  கேசநீ 
பால்உ  டுத்தப  ழங்கந்தை  யைவிடத் 
தோல்உ  டுப்பது  வேமிகத்  தூய்மையே. 
6
துன்னும்  மாமருந்  தேசுட  ரேஅருள் 
மன்னும்  மாணிக்க  மேவல்லி  கேசரே 
துன்னு  கந்தையைச்  சுற்றிநிற்  பீர்எனில் 
என்ன  நீர்எமக்  கீயும்ப  ரிசதே. 
7
மாசில்  சோதிம  ணிவிளக்  கேமறை 
வாசி  மேவிவ  ரும்வல்லி  கேசநீர் 
தூசில்  கந்தையைச்  சுற்றிஐ  யோபர 
தேசி  போல்இருந்  தீர்என்கொல்  செய்வனே. 
8
தேரும்  நற்றவர்  சிந்தைஎ  னுந்தலம் 
சாரும்  நற்பொரு  ளாம்வலி  தாயநீர் 
பாரும்  மற்றிப்ப  ழங்கந்தை  சாத்தினீர் 
யாரும்  அற்றவ  ரோசொலும்  ஐயரே. 
9
மெல்லி  தாயவி  ரைமலர்ப்  பாதனே 
வல்லி  தாயம  ருவிய  நாதனே 
புல்லி  தாயஇக்  கந்தையைப்  போர்த்தினால் 
கல்லி  தாயநெஞ்  சம்கரை  கின்றதே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com