திருவருட்பா  12. அருளியல் வினாவல்

தேன்என  இனிக்கும்  திருவருட்  கடலே 
தெள்ளிய  அமுதமே  சிவமே 
வான்என  நிற்கும்  தெய்வமே  முல்லை 
வாயில்வாழ்  மாசிலா  மணியே 
ஊன்என  நின்ற  உணர்விலேன்  எனினும் 
உன்திருக்  கோயில்வந்  தடைந்தால் 
ஏன்எனக்  கேளா  திருந்தனை  ஐயா 
ஈதுநின்  திருவருட்  கியல்போ. 
1
பூங்கொடி  இடையைப்  புணர்ந்தசெந்  தேனே 
புத்தமு  தேமறைப்  பொருளே 
வாங்கொடி  விடைகொள்  அண்ணலே  முல்லை 
வாயில்வாழ்  மாசிலா  மணியே 
தீங்கொடி  யாத  வினையனேன்  எனினும் 
செல்வநின்  கோயில்வந்  தடைந்தால் 
ஈங்கொடி  யாத  அருட்கணால்  நோக்கி 
ஏன்எனா  திருப்பதும்  இயல்போ. 
2
துப்புநேர்  இதழி  மகிழ்ந்தகல்  யாண 
சுந்தரா  சுந்தரன்  தூதா 
மைப்பொதி  மிடற்றாய்  வளர்திரு  முல்லை 
வாயில்வாழ்  மாசிலா  மணியே 
அப்பனே  உன்னை  விடுவனோ  அடியேன் 
அறிவிலேன்  எனினுநின்  கோயிற் 
கெய்ப்புடன்  வந்தால்  வாஎன  உரையா 
திருப்பதுன்  திருவருட்  கியல்போ. 
3
கங்கைஅஞ்  சடைகொண்  டோங்குசெங்  கனியே 
கண்கள்மூன்  றோங்குசெங்  கரும்பே 
மங்கல்இல்  லாத  வண்மையே  முல்லை 
வாயில்வாழ்  மாசிலா  மணியே 
துங்கநின்  அடியைத்  துதித்திடேன்  எனினும் 
தொண்டனேன்  கோயில்வந்  தடைந்தால் 
எங்குவந்  தாய்நீ  யார்என  வேனும் 
இயம்பிடா  திருப்பதும்  இயல்போ. 
4
நன்றுவந்  தருளும்  நம்பனே  யார்க்கும் 
நல்லவ  னேதிருத்  தில்லை 
மன்றுவந்  தாடும்  வள்ளலே  முல்லை 
வாயில்வாழ்  மாசிலா  மணியே 
துன்றுநின்  அடியைத்  துதித்திடேன்  எனினும் 
தொண்டனேன்  கோயில்வந்  தடைந்தால் 
என்றுவந்  தாய்என்  றொருசொலும்  சொல்லா 
திருப்பதுன்  திருவருட்  கியல்போ. 
5
பண்ணினுள்  இசையே  பாலினுள்  சுவையே 
பத்தர்கட்  கருள்செயும்  பரமே 
மண்ணினுள்  ஓங்கி  வளம்பெறும்  முல்லை 
வாயில்வாழ்  மாசிலா  மணியே 
பெண்ணினும்  பேதை  மதியினேன்  எனினும் 
பெருமநின்  அருள்பெற  லாம்என் 
றெண்ணிவந்  தடைந்தால்  கேள்வியில்  லாமல் 
இருப்பதுன்  திருவருட்  கியல்போ. 
6
முன்னிய  மறையின்  முடிவின்உட்  பொருளே 
முக்கணா  மூவர்க்கும்  முதல்வா 
மன்னிய  கருணை  வாரியே  முல்லை 
வாயில்வாழ்  மாசிலா  மணியே 
அன்னியன்  அல்லேன்  தொண்டனேன்  உன்தன் 
அருட்பெரும்  கோயில்வந்  தடைந்தால் 
என்இது  சிவனே  பகைவரைப்  போல்பார்த் 
திருப்பதுன்  திருவருட்  கியல்போ. 
7
நல்லவர்  பெறும்நற்  செல்வமே  மன்றுள் 
ஞானநா  டகம்புரி  நலமே 
வல்லவர்  மதிக்கும்  தெய்வமே  முல்லை 
வாயில்வாழ்  மாசிலா  மணியே 
புல்லவன்  எனினும்  அடியனேன்  ஐயா 
பொய்யல  உலகறிந்  ததுநீ 
இல்லையென்  றாலும்  விடுவனோ  சும்மா 
இருப்பதுன்  திருவருட்  கியல்போ. 
8
பொதுவினின்  றருளும்  முதல்தனிப்  பொருளே 
புண்ணியம்  விளைகின்ற  புலமே 
மதுவினின்  றோங்கும்  பொழில்திரு  முல்லை 
வாயில்வாழ்  மாசிலா  மணியே 
புதுமையன்  அல்லேன்  தொன்றுதொட்  டுனது 
பூங்கழற்  கன்புபூண்  டவன்காண் 
எதுநினைந்  தடைந்தாய்  என்றுகே  ளாமல் 
இருப்பதுன்  திருவருட்  கியல்போ. 
9
பொன்னையுற்  றவனும்  அயனும்நின்  றறியாப் 
புண்ணியா  கண்ணுதல்  கரும்பே 
மன்னனே  மருந்தே  வளர்திரு  முல்லை 
வாயில்வாழ்  மாசிலா  மணியே 
உன்னைநான்  கனவின்  இடத்தும்விட்  டொழியேன் 
உன்திரு  அடித்துணை  அறிய 
என்னைஈன்  றவனே  முகமறி  யார்போல் 
இருப்பதுன்  திருவருட்  கியல்போ. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com